அருந்தமிழ் விருந்து
புலவர் குழந்தை
1. அருந்தமிழ் விருந்து
1. மின்னூல் உரிமம்
2. மூலநூற்குறிப்பு
3. மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
4. புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
5. முன்னுரை
2. பழந்தமிழ் நாடு
3. தமிழ் மொழி
4. புலவர் பெருமை
5. தாய்மொழிப் பற்று
6. பாட்டும் பரிசும்
7. மறக்குடி மகளிர்
8. யானே கள்வன்
9. பழகா நட்பு
10. நயத்தக்க நாகரிகம்
1. கணியம் அறக்கட்டளை
1. Cover
2. Table of contents
அருந்தமிழ் விருந்து
மூலநூற்குறிப்பு
நூற்பெயர் : அருந்தமிழ் விருந்து
தொகுப்பு : புலவர் குழந்தை படைப்புகள் - 8
ஆசிரியர் : புலவர் குழந்தை
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2008
தாள் : 16 கி வெள்ளைத் தாள்
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 16+ 264 = 280
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
விலை : உருபா. 175/-
படிகள் : 1000
நூலாக்கம் : பாவாணர் கணினி, தி.நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : வ. மலர்
அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா, ஆப்செட் பிரிண்டர்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.
வெளியீடு : வளவன் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017., தொ.பே. 2433 9030
மின்னஞ்சல் : [email protected]
இணையதளம் : www.tamilmann.in
மறைந்தும் வென்றார் புலவர் குழந்தை
பெரும் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளன்று தேனினும் இனிய ஆற்றினை நம் காதில் பொழியச் செய்தது மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு.
புலவர் குழந்தை அவர்களால் எழுதப்பட்ட 29 நூல்களையும் அரசுடைமையாக்கிப் பரிவுத் தொகையாக ரூபாய் 10 இலட்சத்தையும் அளித்துள்ளது.
பணம் என்பது ஒரு பொருட்டன்று; அதே நேரத்தில் பெரும் புலவரின் நூல்களை அரசுடைமை ஆக்கியதன் மூலம் அவருக்குச் சிறப்பானதோர் அங்கீகாரத்தை அளித்துள்ளது - அதுதான் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்டவர்; தன்மான இயக்கத்தில் தன்னை ஒப்படைத்தவர் - திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டை வீரராக வீர உலா வந்தவர்.
அவர் இயற்றிய “இராவண காவியம்” - இனவரலாற்றில் - இயக்க வரலாற்றில் ஈடு இணையில்லாதது.
4.9.1971 அன்று விழுப்புரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களுக்கு நடத்தப்பட்ட விழாவில் தந்தை பெரியார் பங்கு கொண்டு புலவர் குழந்தை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டுரையும் புகன்றார்.
அவ்விழாவில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் புரவலர் என்கிற முறையில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றுப் பாராட்டுரை புகன்றார்.
அவ்விழாவில் பங்கேற்றுப் புலவர் குழந்தை அவர்கள் ‘இராவண காவியம் எழுதியது ஏன்?” என்பது குறித்துத் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
“இராமன் கடவுளல்ல என்கின்ற உணர்ச்சியினைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக இராவண காவியத்தை எழுதினேன். எனக்குத் துணிவினைத் தந்தவர் தந்தை பெரியாரவர்களே ஆவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (‘விடுதலை’ 29.9.1971 பக்கம் 3).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆனாலும், புலவர் குழந்தையானாலும் தொடக்கத்தில் பக்திப் பாட்டெழுதிக் கிடந்தவர்கள்தாம். தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பின்பே பகுத்தறிவுக் கருவை கவிதையின் மையமாக வைத்துப் பாட்டெழுதினார்கள் என்பது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
விழுப்புரம் பாராட்டு விழாவில் தந்தை பெரியார் கூறினார்.
“புலவர் குழந்தையவர்கள் இராவண காவியம் எழுதி இருக்கின்றார், அது ஒரு இராமாயணம் போன்றதே! எத்தனையோ இராமாயணங்கள் இருக்கின்றன என்றாலும் நம் நாட்டிலிருப்பது பார்ப்பன இராமாயணமாகும். இந்த இராமாயணத்தின் தத்துவம் நம்மை இழிவுபடுத்துவதேயாகும். நம்மை அடக்கி ஒடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை வாய்த்தவரை செய்ய வேண்டியது; பார்ப்பான் தர்மத்தை நிலை நிறுத்த தன் மனைவியை விட்டுக் கொடுத்து, அதன் மூலம் அவனை ஒழிக்கலாம் என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயாகும்.
நமது புலவர்கள் மகா மோசமானவர்கள்; பார்ப்பான் எழுதியதைக் கண்டிக்காது, காது, மூக்கு வைத்துப் பெருமைப்படுகிறார்களே தவிர, அதனைக் கண்டித்து எழுதப் புலவர் குழந்தைபோல் எவரும் முன்வரவில்லை. முதன்முதல் நண்பர் பாரதிதாசன் அவர்கள்தான் துணிந்து பார்ப்பானைக் கண்டித்தார்.
புலவர் குழந்தை அவர்கள் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனங்களையெல்லாம் காவிய நடையில் எழுதியுள்ளார். அதுவும் இலக்கணப்படி எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை நீங்களெல்லாம் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும். பார்ப்பான் தன் இனத்திற்காக பிரச்சாரம் செய்கின்ற காலிகளையெல்லாம் சாமியாக்குகின்றான். அதுபோல நமக்காகப் பாடுபடுகின்றவர்களை, தொண்டு செய்கிறவர்களை, எழுதுகிறவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் துணிந்து முன்வருவார்கள்” (விடுதலை 29.9.1971 பக்கம் 3) என்று தந்தை பெரியார் பாராட்டுதலுடன் ஆழமான கருத்தினை எடுத்துரைத்தார்கள்.
சேலம் பேரணியில் முன்வரிசையில் புலவர் குழந்தை
1971 (சனவரி 21) அன்று திராவிடர் கழகம் நடத்திய சேலம் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியில் கருப்புடை அணிந்து புலவர் குழந்தை அவர்கள் வீறுநடைபோட்ட காட்சி கண் கொள்ளாதது.
1938, 1948 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும் கூட!
எந்த இடத்திலும் தாம் ஏற்றுக் கொண்ட தன்மான இயக்க பகுத்தறிவுக் கருத்துக்களைக் கம்பீரமாகச் சொல்லத் தயங்காதவர்.
வெள்ளக்கோயில் தீத்தாம்பாளையத்தில் 1930இல், “ஞானசூரியன்” நூல் ஆசிரியரான சாமி சிவானந்த சரஸ்வதியுடன் ‘கடவுள் இல்லை’ என நான்கு நாள் நடத்திய சொற்போரில் புலவர் குழந்தை அவர்கள் வெற்றி பெற்றார் என்பதிலிருந்து, அவரின் விவாதத்திறன் பளிச்சிடுகிறது.
இரா. பி. சேதுப்பிள்ளையின் பாராட்டு!
கம்பன் கவிநயத்தை லயித்து, சப்புக் கொட்டிப் பேசும் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் சொக்கிப் போயிருக்கிறார்.
“தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!”
நான் கம்பராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்து விட்டது. கருத்து மாறுபாடு வேறு” என்று குறிப்பிட்டதிலிருந்து புலவர் அவர்களின் புலமைத் திறன் குன்றின் மேல் ஒளிர்கிறது.
கம்ப இராமாயண அன்பரான புலவர் அய்யன் பெருமாள்கோனார் ஒருபடி மேலே தாவிப் பாடினார்.
“ இனியொரு கம்பனும் வருவானோ?
இப்படி யும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான்
ஆனால்,
கருத்துதான் மாறுபட்டது”
என்று கவியால் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்.
இத்தகைய தமிழ்ப் புலவர் பெருமகனாருக்குத்தான் தமிழக அரசு உரிய சிறப்பினைச் செய்திருக்கிறது.
கம்பனைப் போல் காட்டிக் கொடுத்து காவியம் புனைந்திருந்தால் இவருக்கு இமயப்புகழ் கிடைத்திருக்கும். என்றாலும் காலங் கடந்தாவது ஒரு அரசின் அங்கீகாரம் கிடைத்தது என்பது வரவேற்கத் தகுந்ததாகும்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், அதன் துணை அமைப்பான பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மூலம், மறைக்கப்படும் தமிழினப் பெரு மக்களைத் (இலக்கியவாதிகளை) தம் தோளில் தூக்கிக் கொண்டாடத் தவறவில்லை.
தமிழ்நாட்டிலேயே இராவண காவியத் தொடர் சொற்பொழிவை அரங்கேற்றிய பெருமை அதற்குண்டு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைக் கொண்டு 29.9.1978-ல் தொடங்கி 7.12.1979வரை 21 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அதே போல் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் 29.9.1998 முதல் 13.11.1999வரை 15 சொற் பொழிவுகளை நிகழ்த்தினார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் 1.7.2004 முதல் 15.6.2006 வரை 23 தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இராவண காவிய மாநாடு
இரண்டு இராவண காவிய மாநாடுகள் நடத்தப்பட்டன; முதல் மாநாடு 5.7.1986 அன்று காலை முதல் இரவுவரை சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது. இரண்டாவது இராவண காவிய மாநாடு 1.7.1989 அன்று (புலவர் குழந்தை அவர்களின் 83-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று) சென்னைப் பெரியார் திடலில் நடத்தப்பட்டது.
இவையன்றி, தனித்தனிச் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டதுண்டு. இத்திசையில் மொத்தம் 77 நிகழ்ச்சிகள் நடத்திய சாதனை பெரியார் நூலக வாசகர் வட்டத்துக்கு உண்டு.
தீர்மானங்கள்
28.6.2005 அன்று சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விழாவில் நிறைவுரையாற்றினார். அவ்விழாவில் முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானம் தமிழக அரசு புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும் என்பதாகும்.
மூன்றாவது தீர்மானம் புலவர் குழந்தை அவர்களைப் போற்றும் வண்ணம் அவர்தம் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்பதாகும்.
இந்தத் தீர்மானங்களை இணைத்து, அவற்றைச் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து அன்றைய தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் கடிதம் ஒன்றை எழுதினார். (15.7.2005)
அந்தக் கடிதம் இன்னும் கோப்பில் குறட்டை விட்டுக் கொண்டுதானிருக்கிறது. காரணம் அந்த அரசுக்குத் தமிழ் உணர்வு இல்லாததுதான்.
மத்திய அரசு தொலை தொடர்பு மற்றும் தொழிற் நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு தயாநிதிமாறனுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி. சத்தியநாராயணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதினார். புலவர் குழந்தை அவர்களை நினைவுகூரும் வகையில் அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டது. (12.8.2005).
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்குப் பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் 24.8.2005 அன்று ஒரு கடிதம் எழுதினார். வாசகர் வட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களை இணைத்து அவற்றைச் செயலாக்கம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
கலைஞரின் சாதனை!
இப்படி இடை விடாத தொடர் முயற்சிகளைக் கழகம் மேற்கொண்டதற்கு தி.மு.க. ஆட்சியில், மாண்புமிகு மானமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதல் அமைச்சர் ஆகியுள்ள நிலையில் வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த அரும்செயலைச் செய்த முதல் அமைச்சரைப் பாராட்டி, தமிழக அரசைப் பாராட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புலவர் குழந்தை நூற்றாண்டு நிறைவு விழாவில் (29.6.2006) நன்றியைத் தெரிவித்துப் பாராட்டியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அஞ்சல்தலை வெளியிடுவது மட்டும் நிலுவையில் உள்ளது. அதனையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றுவார் என்பதில் அய்யமில்லை. புலவர் குழந்தை அவர்கள் மறைந்தாலும் காலத்தை வென்று நம்மிடையே வாழ்கிறார்.
வாழ்க அப்பெருமகனார்!
(நன்றி : விடுதலை 2.7.2006)
புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு புகழ் பூத்த வரலாறு
இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை அவர்கள் கொங்கு நாட்டில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஓலவலசு’ என்னும் சிற்றூரில், பண்ணையக்காரர் என்னும் பழங்குடியில், முத்துசாமிக் கவுண்டர் - சின்னம்மையாருக்கு 1-7-1906இல் பிறந்தார். இவர்தம் பெற்றோருக்கு ஒரே மகனாக வளர்ந்தார்.
தாம் பிறந்த சிற்றூரில் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்; தொடர்ந்து படிக்காமல் இடையிடையே விட்டு விட்டுப் படித்தார். மொத்தத்தில் எட்டு மாதங்களே திண்ணைப் பள்ளியில் பயின்றார். கருவிலே திருவுடையவராகிய இவர் பத்தாம் ஆண்டில் இளம் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாரேனும் ஒருவர் ஒரு பாட்டைப் பாடக் கேட்டால் உடனே இவர் அப்பாட்டின் ஓசையில் புதுப்பாட்டு ஒன்றினைப் பாடுவார். எப்போதும் ஏதேனும் ஒருபாட்டை எழுதிக் கொண்டே இருப்பார். பாட்டு எழுதுவது இவருக்குக் கைவந்த கலையாக அமைந்து விட்டது.
இவர் காலத்தில் இவர் வாழ்ந்த பகுதியில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. ஆகவே தானாகவே முயன்று படித்துக் கவிபாடும் திறம் பெற்றிருந்தார். இவர் முதன் முதலில் இசைப்பாடல்களைப் பாடினார். இவர்தம் கல்லாமல் பாடும் கவித்திறனையும், பாடல்களின் சிறப்பினையும் கண்டு வியந்த அறிஞர்கள் சிலர், தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிக்குமாறு தூண்டினர்; ஊக்குவித்தனர். தாம் பிறந்த ஓலவலசிலோ, அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலோ தமிழ்ப் புலவர்கள் எவரும் அக்காலத்தில் இல்லை. ஆகவே இவர் ஆசிரியர் துணையின்றித் தாமாகவே முயன்று இலக்கிய இலக்கணங்களைப் படித்துத் தமிழில் சிறந்த புலமை பெற்றார். மேலும் இவர் ஆசிரியர் உதவியின்றித் தாமாகவே படித்து 1934ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகத் தேர்வு எழுதிப் புலவர் பட்டயம் பெற்றார்.
இவர் பவானியில் மாவட்டக் கழகப் பள்ளியில் 1924ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1940வரை தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். 1941 முதல் 1962ஆம் ஆண்டுவரை தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் வியந்து பாராட்டும்வகையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆசிரியர் பணியினின்று ஓய்வு பெற்ற பின்பும் எழுத்துப் பணியினின்று ஓய்வு பெறவில்லை. வாழ்நாள் முழுமையும் தமிழுக்காகத் தொண்டாற்றினார்; பல நூல்களைப் படைத்தார்; தமது கவிதைகள் வாயிலாகச் சமுதாய உணர்வை - பகுத்தறிவை மக்களிடையே பரப்பினார்.
இவருக்கு முன் ஓலவலசில் படித்தவர் எவருமில்லை. அவ்வூரில் உள்ளவர்களுக்குக் கையொப்பம் இடவும் தெரியாது. இளமைப் பருவத்திலேயே பொதுத் தொண்டில் - சமுகாயத் தொண்டில் ஆர்வமுடையவராக இருந்தார். தாமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தம் ஊரிலிருந்த தம்மையொத்த அகவையுடைய இளைஞர்களுக்குக் கல்வி கற்பித்தார். அவர்கள் மூலமாகப் பெரியவர்களுக்குக் கையொப்பம் போடப் பயிற்சியளிக்கச் செய்தார்; கை நாட்டு போடுவதை அறவே ஒழித்தார். அக்காலத்தில் இவரைவிட மூத்தவர் பலர் இவரிடம் கல்வி கற்றனர். ஓலவலசில் கல்லாமை இருளைப் போக்கினார்.
வேளாளஇன மக்களிடையே இருந்த பலபிரிவினரையும் ஒன்று சேர்ப்பதற்காகவும், அவ்வின இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்காகவும் 1946 முதல் 1950வரை ‘வேளாளன்’ என்னும் திங்களிதழை நடத்தினார். அவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அவ்வின இளைஞர்களிடையே புத்துணர்ச்சியை வளர்த்தது. விதவை மணம், கலப்புத்திருமணம், சீர்த்திருத்த மணம் முதலியன செய்யவும் அம்மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.
வேளாள சமூகத் தலைவரான திரு. வி.சி. வெள்ளியங்கிரி கவுண்டர் தலைமையில், தகடூர் (தருமபுரி) மாவட்டத்திலுள்ள அரூரில் வேளாள மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் புலவர் குழந்தை அவர்கள் ‘விதவை மணம்’ தீர்மானங் கொண்டு வந்தார்; ஒருமனமாக நிறைவேறச் செய்தார். அதன்படி நூற்றுக்கணக்கான விதவை மணங்களைச் செய்து வைத்தார். இச்செயல்கள் இவர்தம் சமூகத் தொண்டிற்குச் சிறந்த சான்றுகளாகும்.
இவர், யாப்பிலக்கணம் படிப்பதற்கு முன்னே 1918இல் ‘கன்னியம்மன் சிந்து’ என்னும் கவிதை நூலை வெளியிட்டார். இவர் பாடிய அச்சாகாத பாடல்களும் நூல்களும் பல உள்ளன; சில நூல்கள் அச்சாகி வெளியிடப்பட்டன. யாப்பிலக்கணம் கற்பதற்கு முன்பு பாடிய பாடல்கள் யாப்பிலக்கணப்படி அமைந்துள்ளன.
இவர் இதுவரை எழுதியுள்ள நூல்கள் : இராவண காவியம் உள்படச் செய்யுள் நூல்கள்-7, உரைநூல்கள் - 3, இலக்கண நூல்கள் -3, உரைநடை நூல்கள் -16 ஆகமொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். தீரன் சின்னமலை நாடகம் இன்னும் அச்சாகவில்லை.
‘விருத்தம் என்னும் வெண்பாவிற்கு உயர்கம்பன்’ என இதுவரையில் போற்றப்பட்டு வரும் புகழுரைக்கு ஈடாகப் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் பாடிப் புகழ்பெற்றார். ‘காமஞ்சரி’ என்னும் செய்யுள் நாடக நூல், பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களின் மனோன்மணீயம் என்னும் நூலுக்குப் பிறகு எழுதப்பட்ட சிறந்த நாடக நூலாகும். ‘நெருஞ்சிப் பழம்’ என்னும் நூல் தமிழில் இதுவரை வெளிவராத கற்பனைக் கருவூலமான காதல் கதையாகும்.
புலவர் குழந்தை அவர்கள் பெருங்கவிஞர் மட்டுமல்லர். சிறந்த எழுத்தாளர்; கேட்போர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் விரும்பும் வண்ணம் பேசும் பெரும் பேச்சாளர். இவருடைய எழுத்துகள் உறுதியும் அஞ்சாமையும் ஆய்வும் செறிந்த புரட்சிக் கனல் தெறிக்கும் இயல்புடையவை. இவருடைய செய்யுள் நடையும் உரைநடையும் எளிய இனிய தனித்தமிழில் அமைந்தவை. இவர் படைத்த நூல்களெல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.
தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இவர் அவ்வியக்கத்தில் சேர்ந்தார்; பெரியாரின் அணுக்கத் தொண்டரானார். அன்று முதல் சுயமரியாதை இயக்கம் அதன் மறு பதிப்பான திராவிடர் கழகம், அதன் மறுமலர்ச்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுள் இணைந்து தொண்டாற்றியவர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதனையும் செய்யாதவர். பள்ளித் தமிழாசிரியராக இருந்துகொண்டே, அத்தொழிலுக்குச் சிறிதும் இடையூறு இல்லாமல், ‘பெரியார் சீடர்’, ‘கருப்புச் சட்டைக்காரர்’ என்று பொது மக்கள் கூறும்படி கட்சித் தொண்டாற்றியவர். இவரது சுயமரியாதை உணர்ச்சிப் பிழம்பே இராவண காவியம் படைக்கத் தூண்டியது; இவருக்குப் புகழைச் சேர்த்தது.
1948இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திருக்குறளுக்குப் பகுத்தறிவிற்கு ஏற்ப உரை எழுதுவதற்குத் தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவில் புலவர் குழந்தையும் ஒருவர். இவரே தனிஒருவராக இருந்து திருக்குறளுக்கு உரை எழுதி ‘திருக்குறள்-குழந்தையுரை’ என்று வெளியிட்டார். அவ்வுரையை 28 நாட்களில் எழுதி முடித்த பெருமைக்குரியர்.
அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராக இருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்ட இவர்தம் இராவண காவியத்திந்கு, தமிழக அரசால், தமிழ் வாழத் தாம் வாழும் தமிழவேள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 17-5-1971இல் தடை நீக்கப்பட்டது. அதைக்கண்டு தமிழகமே அகமிக மகிழ்ந்தது; தமிழவேள் கலைஞரை உளமார வாழ்த்தியது.
புலவர் குழந்தை ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கொண்டவர். இவர் ஒரு புரட்சிப் புலவரே எனினும் அமைதியும் அடக்கமும் உடையவர்; ஆடம்பரமின்றி எளிய வாழ்வு வாழ்ந்தவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடமை தவறாதவர்; எதிர்க் கட்சியானாலும், மாற்றுக் கருத்து உடையவராலும் நன்கு மதிக்கத் தக்கவர்.
புலவர் குழந்தை அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார். கல்வியறிவு பெற வாய்ப்பில்லாதவராயினும் பொது அறிவு நிரம்பப் பெற்றவர்; தன்மானக் கொள்கையுடையவர்; தம் கணவரின் கொள்கைக்கேற்ப இல்லறத்தை இனிது நடத்தியவர். இவ்விணையருக்குச் சமத்துவம், சமரசம் என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். தமிழுக்குத் தொண்டு செய்து வந்த புலவர் பெருந்தகை தமது 68ஆம் அகவையில் 24-9-1973இல் இயற்கை அடைந்தார். மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் புலவர் குழந்தையிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர் மறைந்த பிறகு, அவர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நூல்கள் 8-7-2006 அன்று அரசுடைமை ஆக்கப்பட்டதாக அறிவித்தார். குழந்தை அவர்களின் மகள்கள் இருவருக்கும் தலா ரூ.5 இலட்சம் பரிவுத் தொகை வழங்கினார்.
முன்னுரை
எதிர் காலக் குடிமக்களாகவும், ஆள்வோராகவும் திகழ விருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, அவர்தம் நாடு, மொழி, இனம் இவற்றின் பழைமை, பெருமை, சிறப்பு என்பனவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமை என்பது அறிஞர் கருத்து. அருந்தமிழ் விருந்து என்னும் இந்நூல் அங்ஙனம் அமைந்ததே யாகும்.
இதனைக் கற்கும் தமிழர்கள், பழந்தமிழ் நூல்கள் இன்ன என்பதை ஒருவாறு அறிந்து, அவற்றைக் கற்றறிய ஆர்வங் கொள்வதோடு தம் முன்னோரின் நயத்தக்க நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார் போல் வாழ முயலுவர் என்பதில் ஐயமில்லை.
இந்நூல் சிறிதளவு தமிழ் படித்தவர்களுக்கும் விளங்கும் வண்ணம் எளிய இனிய தனிச் செந்தமிழ் நடையில், இலக்கியச் சுவையுடன் எழுதப் பெற்றுள்ளது. தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் உள்ள அறிஞருலகம் இந்நூலை வரவேற்று, அனை வர்க்கும் பயன்படுமாறு பரவச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
பவானி
15 - 10 - 58.
அன்புள்ள,
குழந்தை.
பழந்தமிழ் நாடு
‘இது எங்கள் ஊர்ப் பழக்கம், இது எங்கள் நாட்டு வழக்கம்’ என, ஒவ்வொருவரும் தாம் பிறந்த ஊரையும் நாட்டையும் ‘எங்கள் ஊர், எங்கள் நாடு’ என்று அவ்வளவு உரிமையோடு பெருமையாகக் கூறிக் கொள்கின்றனர். இது மக்களின் இயல்பு.
ஆடு, மாடு, பூனை, நாய் முதலிய விலங்குகளும் புறா, கோழி முதலிய பறவைகளுங்கூட வளர்ந்த இடத்தின்மீது மிகுந்த பற்றுடையனவாக உள்ளன. இவை வேறு இடத்தில் கொண்டு போய் விடப்பட்டால் தம் சொந்த இடத்திற்கு வந்து விடுகின்றன அல்லவா? என்னே பிறந்த இடத்தின் பெருமை! பறவை, விலங்கு முதலிய ஐயறிவுயிர்களே இங்ஙனமாயின், ஆறறிவுடைய மக்கள் தம் சொந்த ஊரின்மீதும், சொந்த நாட்டின் மீதும் பற்றுக் கொள்வதில் வியப்பென்னை? ’சொந்த ஊர்ப் பற்றுத் துறவிக்கும் உண்டு’என்பது பொருளமைந்த பொன்மொழியேயாகும். ஊரூராக இரந்துண்டு திரியும் இரவலரும் தாம் பிறந்த ஊரைப் பற்றி, ’அது எங்களூர்’என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வதை இன்றுங் கேட்கிறோம். அத்தகைய பெருமையுடையது பிறந்த இடத்துப் பற்று!
" பெற்ற தாயும் பிறந்தபொன் னாடும்
நற்ற வானிலும் நனிசிறந் தனவே."
எனப் பெற்று வளர்த்த அருமைத்தாயோடு ஒப்ப, பிறந்து வளர்ந்த நாட்டை உயர்த்துப் பெருமைப் படக் கூறுதல் நாட்டுப் பற்றின் தூண்டுதலேயாகும். பிறந்த நாட்டைத் ‘தாய் நாடு’ என்பதும் இது பற்றியே யாகும். ஒவ்வொரு நாட்டினரும் தமது நாட்டின் பழைமை, பெருமை, வளம், மேன்மை முதலியன பற்றிப் பெருமையாகக் கூறிக்கொள்வர். அத்தகைய சிறப்புடைய நாடு தங்கள் நாடு எனக் கூறிக் கொள்ளுவது அவர்தம் ஆவல். ஒரு நாட்டு மக்களின் அத்தகைய ஆவலே அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், உயர் வாழ்விற்கும் காரணம் எனலாம். அங்ஙனமே, தமிழ் இளைஞர்களும் தங்கள் தாய் நாட்டின் பழைமை, பெருமை, வளம், மேன்மை முதலியன பற்றி அறிந்து, நாட்டுப் பற்றுடையராகித் தாய் நாடாம் தமிழ்நாட்டை முன்னேற்றமுறச் செய்ய விரும்புதல் இயல்பே.
தமிழ் நமது தாய் மொழி. தமிழ் பேசுவதால் நாம் தமிழர் எனப் பெயர் பெற்றோம். தமிழ் வழங்குவதால் - தமிழ் பேசப்படுவதால் - நம் நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. தமிழ் நாடு - தமிழகம் எனவும் வழங்கப் பெறும். தமிழ்நாடு - தமிழகம் என்னும் வழக்குத் தொன்று தொட்ட வழக்காகும். ‘தண்டமிழ் வேலித் தமிழ்நாடு’ என்பது பரிபாடல்.1 ‘இமிழ் கடல் வேலித் தமிழகம்’ என்பது பதிற்றுப்பத்து.2 தமிழ் அகம் - தமிழ் வழங்கும் இடம்.
இனி, தமிழ் என்னும் சொல் - தமிழ் மொழியைக் குறிப் பதோடு, தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும் குறிப்பதும் (தொன்று) தொட்டு வரும் மரபேயாகும். ’தென்றமிழ்ப் பாவை’3 - தென் தமிழ் நாட்டுப் பாவை எனத் தமிழ் நாட்டையும், ’அருந்தமிழ் ஆற்றல் அறியாராகி’4 - தமிழ் ஆற்றல் - தமிழரசர் ஆற்றல் எனத் தமிழ் மக்களையும் குறித்தலையறிக.
இங்ஙனம் ஒருசொல் - ஒரு மொழியையும், அம்மொழி பேசும் மக்களையும், அம்மக்கள் வாழும் நாட்டினையும் குறித்தல் தமிழ் ஒன்றற்கே உரிய தனிச்சிறப்பாகும்; தனியுடைமை எனினும் பொருந்தும். இதனாற்றான், ‘தமிழ் வாழ்க என்பது - தமிழ் மொழி வாழ்க, தமிழ் மக்கள் வாழ்க, தமிழ் நாடு வாழ்க என்பதாகும்’ என்றார் ஒரு புலவர்.
வடக்கே வேங்கட மலையையும், தெற்கும் கிழக்கும் மேற்கும் கடலையும் எல்லையாக உடையது பழந்தமிழகம். தெற்கே குமரியாற்றை எல்லையாகக் கொண்டிருந்த காலமும் உண்டு. ‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ என்பது தொல்காப்பியப் பாயிரம். தமிழ் நாடு ‘தமிழுலகம்’ என்று வழங்கியதும் உண்டென்பது இதனால் தெரிகிறது.
ஆனால், தமிழ் மக்களின் பயக்குறையால் ‘வடக்கே வேங்கட மலையை எல்லையாக உடைத்தாயிருந்தது’ என, இறந்த காலத்தால் கூறி இரங்கும்படி, இன்று தமிழ்நாடு - வடக்கும் மேற்கும் முறையே ஆந்திர கன்னட மலையாள நாடுகளையும் தெற்கும் கிழக்கும் மட்டும் பழையபடியே கடலையும் எல்லையாக உடையதாகி,
"ஆந்திரங்கன் னடம்வடக்கில்
மேற்கில்மலை யாளம்
அலைகடல்மற் றிருபுறம்
இலகுதமிழ் நாடு."
எனப் பாடி அமையும் நிலையை அடைந்து விட்டது.
தொன்று தொட்டு ‘வடவேங்கடம் தென்குமரி’, ‘வேங்கடம் தீம்புனல் பௌவம்’ ‘குணகடல் குமரி குடகம் வேங்கடம்’எனப் பெருமையாகக் கூறிவந்த தமிழ் நாட்டின் வடக்கெல்லை யாகிய வேங்கடம், இன்று ஆந்திர நாட்டின் உரிமையாகி விட்டது. அங்ஙனமே, பதிற்றுப்பத்தும், சிலப்பதிகாரமும் தோன்றிய பழந்தமிழ்ச் சேரநாடு, இன்று தமிழ் நாட்டினின்று பிரிந்து தனி மலையாள நாடாகி விட்டது; தமிழர், ’எங்கள் பழந் தமிழ்நாடு’ என்று நினைக்கவும் முடியாத வேற்று நாடாகிவிட்டது அது. தமிழ்நாட்டுக் கடல் வாணிகத்தின் நிலைக்களனாகத் திகழ்ந் திருந்த குடகடல், இன்று மலையாள நாட்டின் சொத்தாகி விட்டது. வடக்கும் மேற்கும் மலையும் கடலுமாகிய இயற்கை எல்லையை இழந்து, பிற நாடுகளை எல்லையாகக் கூறிக்கொள்ளும் நிலையில் உள்ளது இன்று நம் தமிழ்நாடு.
பழந்தமிழ் நாடு வேங்கடத்தை வடக்கெல்லையாகக் கொண்டிருந்த தெனினும், ’குமரியொடு வடவிமயத் தொரு மொழிவைத் துலகாண்ட சேரலாதன்’1 ’வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன்’2 ’பொன்னிமயக் கோட்டில் புலி பொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன்’1 என்னும் இளங்கோவடிகள் கூற்றால், பழந்தமிழ் வேந்தர்களின் ஆட்சி, வேங்கடத்தின் வடபாலும் நடந்து வந்ததென்பதும் விளங்கும்.
நனி மிகு பழங்காலத்தே தமிழர், பனிமலை காறும் பரவியிருந்தனர் என்பது, சிந்துவெளி ஆராய்ச்சியால் தெரிகிறது.
இனி, தமிழ்நாட்டின் தெற்கெல்லையான தென்பெருங் கடல், நிலமாக இருந்த காலமும் உண்டு. பன்முறை ஏற்பட்ட கடல் கோளால் அந்நிலப் பரப்புக் கடலுள் மூழ்கியது. அந்நிலப் பரப்பு, இன்றுள்ள தென் கடற் கரையின் தெற்கில், அதாவது தமிழ் நாட்டின் தெற்கில் ஏறக்குறைய ஆயிரத்தைந் நூறு கல் பரவியிருந்தது.
அந்நிலப் பரப்பு - குமரி மலை, மணிமலை, பன்மலைத் தொடர் முதலிய பல பெரிய உயர்ந்தோங்கிய மலைகளும், குமரியாறு, பஃறுளியாறு முதலிய பல வற்றாத பேராறுகளும் வளஞ்செய்ய, ‘நீர்மலிவான்’ என, நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாய், மக்கள் வாழ்க்கை முறைக்கேற்ற நன்னாடாக விளங்கிற்று.
இன்றுள்ள கன்னியாகுமரி முனைக்கு இருநூறு கல் தெற்கில், குமரிமலையில் தோன்றிக் கிழக்கு நோக்கிக் பாய்ந்தது குமரியாறு. குமரி யாற்றுக்குச் சுமார் எழுநூறு கல் தெற்கில் பஃறுளியாறு என்னும் பேராறு பாய்ந்தது. அது, பன்மலைத் தொடரில் தோன்றிய பல ஆறுகள் ஒன்றுகூடிய பேராறாகும். இவ்விரண்டாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு - பெருவளநாடு எனப்படும். இதன் பெயரே இது மிக்க வளம் பொருந்திய நாடு என்பதற்குச் சான்று பகரும்.
‘பஃறுளி என்னும் ஆற்றிற்கும், குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன்பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் நதியும் பதியும், தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலான்.’
என்னும் அடியார்க்கு நல்லார் கூற்றால், அப்பெருவள நாடு, எழுவகைப்பட்ட ஏழேழு - நாற்பத்தொன்பது உள் நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்த தென்பதும், அதையடுத்து, அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலை நாடுகள் இருந்தன வென்பதும் விளங்குகிறது. ‘தடநீர்க் குமரி’ என்பதால், அக்குமரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைபோல் மிக்க நீர்வளம் பொருந்திய தென்பது தெளிவு. மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியேதான் குமரிமலை, பன் மலைத் தொடர் முதலிய அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகளெல்லாம். மலையாள நாட்டில் உள்ளது கொல்லம் என்பது நினைவுகூரத் தக்கது. ‘நதியும் பதியும்’ என்பதால், பஃறுளி, குமரி யல்லாத வேறு பல ஆறுகளும் அந்நாட்டில் ஓடின என்பது தெரிகிறது.
பஃறுளி யாற்றின் தென்பால், தென்கடல் வரைச் சுமார் ஐந்நூறு கல் பரப்புடைய நிலம் இருந்தது. இது, தென்பாலி நாடு எனப் பெயர் பெறும். பெருவள நாட்டின் அல்லது பஃறுளி யாற்றின் தென்பால் இருந்தமையால் அது இப் பெயர் பெற்றது போலும். ’தென்பாலி முகத்திற்கு வடவெல்லை யாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும்’2 என்னும் அடியார்க்கு நல்லார் உரை இதனை வலியுறுத்தும். தென்பால் உள்ளது தென்பாலி.
மாடலன் என்பான், செங்குட்டுவனிடம், ’குமரியம் பெருந் துறை ஆடி மீள்வேன்’3 எனக் கூறுதலும், ’குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி’4 என்பதும், பஃறுளி யாறு கடல் கொள்ளா முன், அப்பெருவள நாட்டையாண்டு வந்த முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனை, ’எங்கோ வாழிய குடுமி . . . . . . நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’5 என, நெட்டிமையார் என்னும் புலவர் வாழ்த்துதலும் - குமரி யாறும், பஃறுளி யாறும் இருந்தமைக்குச் சான்றாகும்.
பெருவள நாட்டு அரசனான செங்கோன் என்பான் மீது, அந்நாட்டுத் தனியூர்ச்சேந்தன் என்னும் புலவர் பாடிய செங் கோன்றரைச் செலவு என்னும் பழந்தமிழ் நூல், பெருவள நாடுண்மைக்குச் சான்று பகரும். பெருவளம் தென்பாலி என இரு கூறுபட்ட இத் தென்னாட்டின் விளக்கத்தைக் குமரிக் கண்டம் என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம்.
தென்பாலி, பெருவள நாடுகள் அமைந்த இப்பெருநிலப் பரப்பை, மேனாட்டு ஆராய்ச்சி அறிஞர்கள் லெமூரியா என்று பெயரிட்டழைத்தனர். இது, அந்நிலப் பகுதியில் வாழ்ந்த லெமூர் என்னும் ஒருவகைப் பேருயிரின் பெயர் கொண்டு இடப் பெற்ற பெயராகும். தமிழர்கள் இதைக் குமரிக் கண்டம் என அழகிய பெயரிட்டழைத்தனர். இது, பழைய குமரியாற்றின் நினைவாகக் குமரி முனை எனப் பெயரிட்டிருப்பது போன்று இட்டப் பெயராகும்.
அயல் நாட்டர்க் கடிமைப்பட்டுக் கிடந்த நாம் இதுவரை நமது பழம்பெருமையை அறிந்து இன்புறும் நினைப்பு இல்லாத நிலையில் இருந்தோம். இனி நமது பழைமையை - பழைய வரலாற்றினை - அறிந்து இன்புறுவது தமிழ் மக்களாகிய நமது நீங்காக் கடமை யுளொன்றாகும். ஓர் இனத்தின் பழைய வரலாறு, அறிந்து இன்புறுவதோடு, அவ்வினத்தின் முன்னேற்றத்திற்கும் பேருதவியாகும்.
பஃறுளி யாற்றின் கரையிலிருந்த மதுரை என்பது அந் நாட்டின் தலைநகராகும். அத்தொன் மதுரையிலிருந்து அத் தொன்னாட்டினை யாண்டு வந்த பாண்டிய மன்னர்கள், சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனர். இதுவே முதற் சங்கம் ஆகும். அன்று ஏற்பட்ட பெயரே நம் தங்கத் தமிழ்மொழிக்குச் ‘சங்கத் தமிழ்’ என்னும் பெயர்.
ஒரு பெரிய கடல்கோளால், அத்தென்பாலி நாடும் பெருவள நாடும் கடலுக்கிரையாயின. பஃறுளியாற்றையும், அதன் கரை யிலிருந்த மதுரையையும் கடல் விழுங்கி ஏப்பம் விட்டது. அதன் பின்னர், அக்கடல்கோள் நிகழ்ந்த காலத்தி லிருந்த பாண்டியன், வடக்கே வந்து, குமரியாற்றங் கரையில் ஒரு நகரமைத்து அதில் குடியேறினான். இதற்கும் மதுரை என்று பழைய நகரின் பெயரையே வைத்தான். இதனைக் கபாடபுரம் என்பர். ’கபாடம்’என்பது தமிழ்ச் சொல் அன்மையால் இது ஆராய்ச்சிக் குரியது. இம் மதுரையில் நிறுவிய சங்கமே இடைச்சங்கம் ஆகும்.
“பஃறுளி யாற்றொடு பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள.” - (சிலப். 11 : 19 -20)
என்பது சிலப்பதிகாரம். ‘கொடுங்கடல்’ என்பது, அக்கடல் பற்றி இளங்கோவடிகளுக்கிருந்த வருத்தத்தைப் புலப்படுத்து வதாகும். அதன் பின்னர் ஏற்பட்ட ஒரு கடல்கோள் குமரியாற்றையும் விழுங்க, அப்போதிருந்த பாண்டியன், வையை யாற்றங்கரையில் இப்போதுள்ள மதுரையில் குடியேறி, பழையபடி சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தான். இதுவே கடைச் சங்கம் ஆகும்.
மணிமேகலை காலத்தே ஏற்பட்ட ஒரு கடல்கோளால் காவிரிப்பூம்பட்டினம் கடலுக்கிரையானதாக மணிமேகலை கூறுகிறது. அக்கடல் கோளினாற்றான் எஞ்சியிருந்த அத்தென்னிலப் பகுதியும் கடலுள் மூழ்கித் தமிழ் நாட்டின் தெற்கெல்லையும் கிழக்கெல்லையும் இன்றுள்ள நிலையை அடைந்துவிட்டன.
தமிழ் நாடு, மலையும் காடும் வயலும் கடற்கரையும் பொருந்திய நாடு. மலை - குறிஞ்சி நிலம் எனவும், காடு - முல்லை நிலம் எனவும், வயல் - மருத நிலம் எனவும், கடற்கரை - நெய்தல் நிலம் எனவும் பெயர் பெறும். குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழ்ந்த மக்கள் முறையே குறிஞ்சி நில மக்கள், முல்லை நில மக்கள், மருத நில மக்கள், நெய்தல் நில மக்கள் எனப் பெயர் பெறுவர். இவர்கள் மலைவளமும் கான்வளமும் வயல்வளமும் கடல்வளமும் கொண்டு இனிது வாழ்ந்து வந்தனர். இதனாற்றான் தமிழகம் நானிலம் எனப் பெயர் பெற்றது.
இனிப் பாலை நிலம் என்பதோ எனின், பாலை என்று ஒரு தனி நிலம் இல்லை. பாலைவனம் என்பது பாலை நிலம் அன்று. பாலைவனம் தமிழ் நாட்டில் இல்லை. முதுவேனிற் காலத்தே முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறண்டு, மரஞ்செடி கொடி களெல்லாம் காய்ந்து, நடப்போர் அடியைச் சுடும் வளம் பிரிந்த அந்நிலையே பாலை நிலம் எனப்படும். பழந்தமிழ் நூல்களில் இந்நிலங்களின் சிறப்பினைப் பரக்கக் காணலாம்.
தமிழகத்தில் ஆட்சி முறை என்று ஏற்பட்டதோ அன்றிருந்து தமிழகம் முடியுடை மூவேந்தர் என்று சிறப்பிக்கப்படும் சேர, சோழ, பாண்டியர் என்னும் செந்தமிழ் வேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. அதனால், பழந் தமிழகம் - சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இம்மூவேந்தரை வண் புகழ் மூவர் என்பர் தொல்காப்பியர். தொல்காப்பியர் கி. மு. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இடைச்சங்க காலத்தவர் என்பது ஆராய்ச்சி அறிஞர்கள் முடிபாதலின், இம்மூவரசர் மரபு அதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்ட தென்பது மிகைபடக் கூறுதலாகாது. அதாவது பெருவளநாடு கடல் கொள்ளு முன்னரே இம்மூவரசர் மரபு இருந்து வந்ததாகும்.
இம்மூவருள் பாண்டியர் மரபே பழைய மரபாகும். பண்டையர் என்பதே பாண்டியர் எனத் திரிந்தது போலும். பாண்டியர் மரபி லிருந்து பிரிந்தவையே சோழர் மரபும் சேரர் மரபும் ஆகுமென்பர். பாண்டியர் குமரியாற்றின் தென் பகுதியை ஆண்டு வந்தபோது, அதன் வடக்கேயுள்ள தமிழ் நாட்டைச் சோழரும் சேரரும் ஆண்டு வந்தனர். தென்னாடு கடல் கொண்ட பின் வட பகுதி மூன்றானது. இம்மூவரசரும், பழந்தமிழ்ப் பெருங்குடிகளில் மூத்த முதற் குடியினராவர் என்பது, ‘பெரு நிலம் முழுதாளும் பெருமகன் தலை வைத்த ஒரு தனிக்குடி’ (சிலப். 1) என்னும் இளங்கோவடிகள் வாக்கால் விளங்கும்.
சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடுகளேயன்றித் தமிழகத்தில் கொங்கு நாடு, தொண்டை நாடு என்ற பிரிவுகளும் உண்டு. இவற்றுள் கொங்கு நாடு என்னும் பிரிவு பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. தொண்டை நாடு கடைச் சங்க காலத்தே ஏற்பட்டதாகும்.
சேர நாடு : இன்றுள்ள மலையாள நாடு சேர நாடாகும். இதன் தலைநகர் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பன சேர நாட்டின் துறைமுகப் பட்டினங்கள். வஞ்சியும் கடற்கரைப் பட்டினமே. சேரரது கொடியும், அரசியற் குறியும் வில் ஆகும்.
சோழ நாடு : திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சோழ நாடு எனப்படும். அதாவது, சிதம்பரத்திற்கு வடக்கேயுள்ள வட வெள்ளாற்றுக்கும், புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழநாடு. இதன் தலைநகரம் உறையூரும், புகாரும். புகாரும், நாகப்பட்டினமும் துறைமுகப் பட்டினங்கள். புகாரின் மறு பெயர் காவிரிப்பூம் பட்டினம் என்பது. சோழ மன்னர் கொடியும், அரசியற் குறியும் புலி.
பாண்டிய நாடு : மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி மாவட்டங்கள் பாண்டிய நாடு எனப்படும். வட கிழக்கில் தென் வெள்ளாறும், வடக்கில் பழனியும் பாண்டிய நாட்டின் எல்லையாகும். பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை. கொற்கை இதன் துறைமுகப் பட்டினம். பாண்டியர் கொடியும், அரசியற் குறியும் மீன்.
கொங்கு நாடு : கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங் களும், திருச்சி, மதுரை மாவட்டங்களின் வடபகுதியும் கொங்கு நாடு எனப்படும். மதுரை மாவட்டத்திலுள்ள பழனியும், திருச்சி மாவட்டத்திலுள்ள குளித்தலையும் கொங்கு நாட்டின் தெற்கெல்லை யாகும். கொங்கு நாடு பழங்காலத்திலிருந்தே தமிழ்ச் சிற்றரசர் களால் ஆளப்பட்டு வந்தது. இது பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்ததால், இதற்குத் தனிப்பட்ட தலைநகர் இல்லை.
தொண்டை நாடு : சென்னை, செங்கற்பட்டு, வடார்க் காடு மாவட்டங்களும், தென்னார்க்காடு, சித்தூர் மாவட்டங் களில் ஒரு பகுதியும் தொண்டை நாடாகும். இதன் வடக் கெல்லை திருப்பதி. தெற்கெல்லை பாலாறு. மேற்கெல்லை கொங்கு நாடு. இதன் தலைநகர் காஞ்சி. துறைமுகப் பட்டினம் கடன்மல்லை. தொண்டை நாடு கடைச் சங்க காலத்தே ஏற்பட்டதாகும். அதன் முன்னர்ச் சோழ நாடாக இருந்தது. இது முதலில் சோழர்களாலும், பின்னர்ப் பல்ல வர்களாலும், மறுபடியும் சோழர்களாலும் ஆளப்பட்டு வந்தது.
திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட நடு நாடு என்ற சிறு நாடொன்றும் கடைச் சங்க காலத்தே தோன்றி யிருந்தது. இது பாலாற்றுக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப் பட்டது. இதை மலையமான் திருமுடிக்காரி என்னும் சிற்றரச மரபினர் ஆண்டு வந்தனர்.
தமிழ் மொழி
தமிழ் மொழி நமது தாய் மொழி. நமது தாய் மொழியாகிய தமிழ் மொழி, உலக மொழிகளில் உயர்வுடையது. பழந்தமிழ் மக்கள் மிகுந்த தாய் மொழிப் பற்றுடையராய் இருந்தனர்; தமிழை உயிரினும் பெரிதாகக் கருதிப் போற்றி வளர்த்து வந்தனர். தமிழ் மொழி அன்று சீரும் சிறப்புடன் திகழ்ந்தது.
தமிழ் என்பதற்கு இனிமை என்பது பொருள். தமிழ் மொழி இனிமையான மொழி. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’ என்றார் பாரதியார். ‘தமிழுக்கு அமிழ் தென்றுபேர் - அந்தத் - தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்’ என்றார் பாரதிதாசன். கற்போர் உள்ளத்தையும் உணர்வையும் கேட்போர் உள்ளத்தையும் உணர்வையும் ஒருங்கு இன்புறச் செய்யும் தன்மை தமிழ் மொழிக்கே உரிய தனித் தன்மை யாகும். ‘தமிழ் தமிழ் தமிழ்’ என்று தொடர்ந்து சொன்னால், ‘அமிழ்தமிழ்தமிழ்து’ என்றாகு மென்று, தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியின் இனிமைத் தன்மையைச் சிறப்பித்துக் கூறிப் பெருமை கொள்வர். அது வீண் பெருமையன்று, உண்மையே. அமிழ்து - இனிமை.
தமிழ் இனிய மொழி மட்டும் அன்று; கரடு முரடில்லாத இயல்பாகிய மொழியும் ஆகும். தமிழ் மொழி இனிமை இயல்போடு எளிமையும் உடைய மொழியாகும். இதற்குக் காரணம், தமிழ் எழுத்துக்களின் ஒலி இயல்பாக அமைந்திருத்த லேயாகும். உரப்பியும் கனைத்தும் உச்சரிக்க வேண்டிய எழுத்துத் தமிழில் இல்லை. தமிழை யாரும் எளிதில் கற்றுக் கொள்ளலாம். எளிதில் பேசலாம். தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டால், எழுத்துக்கூட்டி எல்லாத் தமிழ்ச் சொற்களையும் எளிதில் படித்துவிடலாம். பிறமொழிகளைப் போல் எழுத்தொலி வேறு, அவ்வெழுத்துக்களாலான சொல்லொலி வேறு என்னும் முரண்பாடு தமிழ் மொழிக்கில்லை. இவ்வளவு எளிமையான மொழி உலகில் வேறொன்றும் இல்லை. இனிமை, இயல்பு, எளிமை என்னும் மொழிக்குரிய முப்பண்பும் ஒருங்கு அமையப் பெற்ற மொழி நம் தமிழ் மொழியேயாகும்.
தமிழ் மிகப் பழமையான மொழி. தமிழ் மொழி எப்போது உண்டானது என்று வரையறுத்துக் கூறமுடியாது. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய தமிழ்’ என்றார் கல்லாடனார். ‘என்றுமள தென்றமிழ்’ என்றார் கம்பர்.
‘ஞாயிறு ஓர் ஒளிப் பிழம்பு. அது தன்னைத் தானே சுற்றுகிறது; அவ்வாறு சுற்றும் விரைவினால் அந்த ஒளி வடிவத்தி லிருந்து சிதறிய ஒரு சிறு திவலையே உலகம் என்பது. முதலில் உலகம் ஆவிப் பிழம்பாக இருந்தது. அது தன்னைத் தானே சுற்றும் விரைவினால் மேற்பாகம் குளிர்ந்து நிலம் ஆயிற்று’ என்பது நில நூலறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு.
ஒரு பம்பரம் சுழலும்போது, அதில் அசையாத பகுதி, முடியும் அடியுமாகிய இரு முனைகளுமேயாகும், நடுவட்டமே மிக விரைவாகச் சுழலும். அதுபோலவே, உலக உருண்டையும் தன்னைத் தானே சுற்றும்போது, அதில் வட தென்துருவப் பகுதிகள் அசையாமல் தம்மைத்தாமே சுற்ற, நடுக்கோட்டுப் பகுதியே மிக விரைவாகச் சுழலும். எனவே, அந்நடுப் பாகந்தான் முதலில் குளிர்ந்திருக்கும். கடல் கொண்ட குமரிக் கண்டம் நிலநடுக் கோட்டுப் பகுதியில் இருந்ததால், அப்பகுதி தான் முதலில் குளிர்ந்து, உயிர் வகைகள் தோன்றி வளர்வதற்கேற்ற தட்பவெப்ப நிலையை எய்தியிருக்கும். அப்பகுதி பழந்தமிழ் நாடு ஆகையால், உலக முதன் மக்கள் என்பதும், உலக முதன் மொழி தமிழ் மொழி என்பதும் ஆராய்ச்சி அறிஞர்களின் முடிந்த முடிவாகும். தமிழ் அவ்வளவு பழமையோடு இளமையும் உடைய மொழியாகும்.
தமிழ், ஈப்ரு, இலத்தீன், கிரேக்கம், ஆரியம் என்னும் மொழிகள் தாம் உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழிகள். தமிழ் அல்லாத ஏனைய நான்கு மொழிகளும் உலக வழக்கு - பேச்சு வழக்கு ஒழிந்து விட்டன. அம்மொழிகள் எழுதப் படிக்க முடியுமே தவிர, பேச முடியாது.
உலகப் பழம் பெரு மொழிகள் என உடனெண்ணப் படும் ஏனைய நான்கும் பேச்சு வழக்கொழிந்தும் தமிழ் மட்டும்,
“உலகவழக் கழிந்தொழிந்து சிதையாநின்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”
என, மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் வியப்பது போலவே, உலகம் வியப்புறும் வண்ணம் அன்று முதல் இன்றும் பேசவும் எழுதவும் கூடியதாய் இருந்து வருகிறது. இவ்வாறு பழமையோடு இளமையும் உடைமையால் தமிழ் மக்கள் தமது தாய் மொழியைக் கன்னித் தமிழ் எனப் பெருமை யோடு கூறிக் கொள்கின்றனர். ‘இளந் தமிழ்’ என்பதும் அப்பொருளுடையதே.
உலகில் பன்னூற்றுக் கணக்கான மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றுள் ஒரு சில மொழிகளுக்கு எழுத்தே இல்லை. ஒரு சில மொழிகள் இலக்கண வரையறை இல்லாதவை. சில மொழிகளில் ஒரு நூல் கூட இல்லை. நூலியற்றுந் தகுதியை அம்மொழிகள் இன்னும் பெறவில்லை. பல மொழிகள் தோன்றிச் சில நூற்றாண்டுகளே ஆகின்றன. இந்தி முதலிய வட நாட்டு மொழிகள் ஆரியத்தின் இளஞ் சேய்கள். கன்னடம் முதலிய தென்னாட்டு மொழிகள் தமிழ்த் தாயின் தலைப் பிள்ளைகள்.
“கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்”
என்பது மனோன்மணீயம்.
பல உயிரையும் பல உலகையும் படைத்து, காத்து, அழிக்கினும் பரம்பொருள் முன் இருந்தபடியே இருப்பது போல, கன்னடம் தெலுங்கு முதலிய பல பிள்ளைகளைப் பெற்றும் இன்னும் சீரிளமை மாறாது, பரம்பொருளோ டொத்த பழமையும் இளமையும் உடையது தமிழ் மொழி எனக் கூறி மகிழ்கிறார் மனோன்மணீய ஆசிரியர். அத்தகு பெருமையுடையது நம் கன்னித் தமிழ்.
மிகப் பழமையோடு இளமையுடையதும், பேசவும் எழுதவும் படுவதும், இலக்கியப் பரப்பும் இலக்கண வரை யறையும் உடையதும் ஆகிய மொழி உயர்தனிச் செம்மொழி எனப்படும். தமிழ் பழமையோடு இளமையுடையது; ‘ஓர் எல்லையறு பரம் பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்’ என உவமை கூறி வியக்கும் பழமையை உடையது; பேச எழுதப்படுவது; பத்துப் பாட்டு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய ஏராளமான இலக்கியச் செல்வங்களை யுடையது. இவை பழம் பெருஞ் செல்வங்கள்; இவை நம் முந்தையோர் தேடி வைத்த எய்ப்பினில் வைப்பு! சங்க காலப் பின்னோர் ஈட்டிய இலக்கியச் செல்வங்கள் எண்ணிறந்தன! ஒன்றி ரண்டல்ல, தொண்ணூற்றாறு வகையில் ஈட்டி வைத் துள்ளனர். தொல்காப்பியம், நன்னூல், சின்னூல், யாப்பருங் கலம், யாப்பருங்கலக் காரிகை, தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்களை யுடையது. எனவே, தமிழ் மொழி ஒரு தலையாய உயர் தனிச் செம்மொழியாகும். இன்று உலகில் உள்ள உயர் தனிச் செம்மொழி தமிழ் ஒன்றே என்பதை அறிந்து தமிழ் மக்கள் பெருமை கொள்வதில் வியப்பொன்றும் இல்லை.
‘தமிழ் மொழி மிகமிகத் தொன்மை வாய்ந்ததும், பெருவளம் பொருந்தியதும், மிகவும் சீர்திருந்தியதுமான உயர்தனிச் செம்மொழி யாகும். தமிழ் சொல்வளம் மிகுந்தது; அளவிட வொண்ணாப் பண்டைக் கால முதற் பயின்று வருவது’ என்பது கிரீயர்சன் என்னும் ஆராய்ச்சி அறிஞரின் ஆய்வுரை.
‘தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்த திருந்திய மொழி. அது சொல்வள மிகுந்தது; பண்டைச் சொல்லிலக்கணத் தொல் வடிவங்களில் பெரும்பாலானவற்றை இகவாது கொண்டு மிளிர்வது’ என்பது, தமிழ் மொழியின் தனிப்பெரும் பெருமையை உலகறியச் செய்த மொழியாராய்ச்சி அறிஞர் கால்டுவெல் அவர்களின் கருத்துரை.
நமது முன்னோர், தம் தாய் மொழியாம் தமிழ் மொழியை - இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்றாகப் பகுத்துப் பொன்னேபோற் போற்றி வளர்த்துப் பயனடைந்து வந்தனர். அதனால், தமிழ் - முத்தமிழ் எனப் பெயர் பெற்றது. இத்தகைய பெயர் உலக மொழிகளில் வேறு எம்மொழிக்கும் இல்லை. இத்தகைய மொழிச் சிறப்பும் தமிழர் தனிப் பண் பாட்டுக்குச் சான்றாகும். ‘மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி யானை’ என ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் தம்மைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில், இயற்றமிழ் என்பது தமிழ்ப் பாட்டுக்களாகும். புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களெல்லாம் இயற்றமிழ் நூல்களேயாம். உரைநடையும் இயற்றமிழே. முதலில் இயல்பாக உண்டாவதால் பாட்டு இயற்றமிழ் எனப்பட்டது, இயற்கைப் பொருள் என்பதுபோல, அத்தமிழ்ப் பாட்டுக்களை இசையுடன் பாடுவது இசைத் தமிழ் எனப்படும். இசையாவது பண்ணொடு தாளம் பொருந்தப் பாடுவது. அவ்வாறு இசையுடன் பாடிக்கொண்டு, கேட்போர்க்கு அப்பாட்டின் பொருள் எளிதில் இனிது விளங்கும்படி மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத் தமிழ் எனப்படும். மெய்ப்பாடு என்பது உள்ளக் குறிப்பைக் கண் முதலிய உறுப்புக்களின் மூலம் வெளிப்படச் செய்யும் நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை என்பன. பாட்டின் கருத்துப் பிறர்க்கு விளங்கும் படி மெய்யின் மூலம் வெளிப்படச் செய்வதால் அது மெய்ப்பாடு எனப்பட்டது. மெய் - உடம்பு. தொல்காப்பிய மெய்ப்பாட்டி யலில், மெய்ப்பாட்டின் விரிவை விளக்கமாகக் காணலாம். நாடகம் கூத்து எனவும் வழங்கும்.
பழந்தமிழ் மக்களாகிய நமது முன்னோர்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் ஏராளமான இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் செய்து, முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியமாகும். பிற்காலத் தமிழ் மக்களின் புறக்கணிப்பால் அப்பழந்தமிழ் இசை நாடக நூல்களை நாம் பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காதவர்களானோம்.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் அன்று தனித் தனிப் புலவர்கள் இருந்தனர். இயற்றமிழ்ப் புலவர்கள் சிறந்த புலமை - அறிவு - உடைமையால் புலவர் எனவும், பாக்கள் இயற்றும் வன்மையால் பாவலர் எனவும், சிறந்த நாவன்மை - பேச்சு வன்மை - உடைமையால் நாவலர் எனவும் பெயர் பெற்றனர். இப்புலவர் பெருமக்கள் நுண்மாண் நுழைபுலம் உடையராய்த் திகழ்ந்தனர்.
இசைத் தமிழ்ப் புலவர்கள் பாணர் எனப்படுவர். பாண் - இசை. பாணர் - இசையில் வல்லவர். பாணர் மகளிர் - பாணிச்சியர் எனப்படுவர்; அப்பாண் மகளிரும் இசையில் வல்லுநராகையால் பாடினி, பாட்டி எனப் பெயர் பெற்றனர். பாணர்க்கு யாழ் இன்றியமையாததாகும். அதனால், அவர் யாழ்ப்பாணர் என்றே அழைக்கப்பட்டனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனத் தமிழிசை ஏழு வகைப்படும். பழந்தமிழ் மகளிர் ஏழிசைவல்லி எனப் பெயர் சூட்டிக்கொண்டு ஏழிசையினும் வல்லவர்களாய் ஏழிசை பாடி இன்புற்றிருந்தனர். குரல் முதலிய தமிழிசையின் இடத்தை, ‘சரிகம பதநி’ என்னும் அயலிசைகள் ஏழும் பிடித்துக் கொண்டன, பிற்காலத் தமிழ் மக்களின் முயற்சிக் குறைவால்.
நாடகத் தமிழ்ப் புலவர் கூத்தர், பொருநர் என இரு வகைப்படுவர். பொருநுதல் - வேறொருவர் போல் கோல மிட்டாடுதல் (கோலம் - வேஷம்). கூத்தர், பொருநர் இரு வகையினரும், இருவகைப் பட்ட ஒருவகையினரே, அவ்விரு வகையினரின் மகளிரும் விறல்பட ஆடுதலான், விறலியர் எனப்பட்டனர். விறல் - மெய்ப்பாடு. இசை நாடகப் புலவர்கள் ஒன்றுபட்டே இசை நாடகத் தமிழை வளர்த்து வந்தனர்; இசை நாடகப் புலவர்கள் - யாழ், குழல், பறை, தாளம் என்னும் நால்வகை இசைக் கருவிகளின் துணைக் கொண்டு அவ்விரு தமிழையும் பொது மக்கட்கறிவுறுத்தி வந்தனர்.
இயற்றமிழ்ப் புலவர்கள் அவ்வக்காலத்துக் கேற்ற கருத்துக் களை யமைத்துப் புதுப்புதுப் பாட்டுக்கள் பாடியும், இசைத் தமிழ்ப் புலவர்கள் அப்பாட்டுக்களை இசைக் கருவிகளுடன் இசைத்து இன்னிசையுடன் பாடியும், நாடகத் தமிழ்ப் புலவர்கள் அவ்விசைக் கேற்ப, அப்பாட்டுக்களின் பொருள் விளங்கச் சுவைபட ஆடியும் முத்தமிழையும் முறையாக வளர்த்து வந்தனர். இம்மூவகைப் புலவர் பெரு மக்களும் தமிழ் வளர்ப்பதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, தமிழ் நாட்டு ஊர்தோறும் சென்று, தமிழ்ப் பொதுமக்களுக்கு முத்தமிழறி வினையும் ஊட்டி வந்தனர். இம்முப்புலவர்களின் உலையா முயற்சியால், ஓயா உழைப்பினால் முத்தமிழும் நாளொரு வண்ணமும் பொழு தொரு மேனியுமாக வளர்ந்து வந்தன.
பிற்காலத் தமிழ் மக்களின் இன்பத்தை வெறுத்தல் என்னும் வெறுப்புத் துறவால் இசை நாடகத் தமிழ் புறக் கணிக்கப்பட்டு, அவ்விரண்டன் நூற் செல்வங்களை இழந்ததோடு அவற்றைப் பழையபடி வளர்க்க வகையறியா நிலையையும் அடைந்து விட்டோம்.
சங்கம் : பாண்டிய மன்னர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்தனர் என்று முன்பு கண்டோம். அச்சங்கம் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூவகைப்படும். முதற் சங்கம் - பஃறுளி யாற்றங் கரையிலிருந்த தொன் மதுரையிலும், இரண்டாஞ் சங்கம் குமரி யாற்றங் கரையிலிருந்த தென் மதுரை யிலும், மூன்றாஞ் சங்கம் வையை யாற்றங் கரையிலுள்ள மதுரையிலும் நடந்து வந்தன. இவ்விட மாற்றமே அச்சங்கம் முதல் இடை கடை என மூன்று வகைப் பட்டதற்குக் காரணமாகும். அச்சங்க உறுப்பினர்கள் - சங்கப் புலவர்கள் எனப்படுவர். முதல், இடை, கடை என்னும் அம்முச் சங்கங்களும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வந்தன.
தமிழ் நாடு முழுவதும் வாழ்ந்துவந்த புலவர்கள், தாம் பாடிய பாட்டுக்களுடன் மதுரைக்குச் செல்வர்; தமிழ்ச் சங்கப் புலவர்கள் முன்னிலையில் தாம் பாடியுள்ள பாட்டுக்களைப் படித்துப் பொருள் கூறுவர்; சங்கப் புலவர்கள் கேட்கும் ஐய வினாக்களுக்குத் தக்க விடை பகர்வர்; சங்கப் புலவர்கள் சொல்லும் குற்றங் குறைகளை யேற்றுத் திருத்தியமைத்துக் கொள்வர். இவ்வாறு செய்தல் அரங்கேற்றுதல் எனப்படும். இவ்வாறு அரங்கேற்றிய பாக்களை நூல்களாகத் தொகுப்பர். அவை சங்க மருவிய நூல்கள் எனப்படும். அவ்வாறு மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஒப்புக் கொண்ட அரங்கேறிய - சங்க மருவிய நூல்களே மக்கள் படிப்பதற்குத் தகுதியுடையவை யாகும்.
இத்தமிழ்ச் சங்கம், இன்றுள்ள பள்ளிப் பாட நூற் குழுவைப் போன்றதேயாகும். ஆனால், இன்று நூலாசிரியர் பாட நூற் குழுவினரைச் சந்திப்பதும் குற்றங் குறைகளை எடுத்துக் காட்டித் திருத்திக் கொள்வதும் இல்லை. இதுவே பழந்தமிழ்ச் சங்கத் திற்கும் பாடநூற் குழுவுக்கும் உள்ள வேறுபாடு.
இப்போது நமக்குக் கிடைத்துள்ள சங்கமருவிய நூல்கள் - தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்பனவே. நமக்குக் கிடைக்கப் பெறாத சங்க நூல்கள் - முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், குணநூல், செயிற்றியம், சயந்தம், கூத்து, வரி, பேரிசை, சிற்றிசை என்பன.
இன்றும், பொங்கல் திருநாள், புத்தாண்டு முதலிய சிறப்பு நாட்களில் திருச்சி வானொலி நிலையத்திலும், மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும் கவியரங்கேற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால், அக்கவியரங்கத்திற்குத் தலைமை தாங்குவோர், கவி களிலுள்ள குற்றங் குறைகளை எடுத்துக் காட்டுவதோ, கவிஞர்கள் பொருள் கூறுவதோ, குற்றங் குறைகளைத் திருத்திக் கொள்வதோ இன்றி, ஒருவர் தலைமையில் கவிகளைப் படிப்பதோடு அரங்கேற்றம் முடிவடைந்து விடுகிறது.
பழைய தமிழ்ச் சங்கம்போல் ஒரு சங்கம் நிறுவி, அது பழைய தமிழ்ச் சங்கம்போல் செயற்படின், தமிழ் நன்முறையில் வளர்ச்சியடையும். இச்சங்கம் ஆள்வோரால் நடத்தப்பட வேண்டும். அதற்கு நிலையான தலைவரும் உறுப்பினரும் இருத்தல் வேண்டும். அவர்கள் ஆண்டுக்கு ஒன்றல்லது இரண்டு முறை கவியரங்கேற்றுவதோடு, பழந்தமிழ்ச் சங்கப் புலவர்கள் போல் நாளும் தமிழாராய்ந்து வரவேண்டும். அந்நன்னாள் விரைவில் வருக!
புலவர் பெருமை
பழந்தமிழ்ப் புலவர் பெருமக்கள் அறிவுக் களஞ்சிய மாகவும், ஆன்றமைந்த ஒழுக்கமுடையவராகவும், பாவன்மை யோடு நாவன்மை படைத்தவராகவும், அஞ்சாநெஞ்சம் உடைய வராகவும், பொதுநலத்தொண்டே தம் பிறப்பின் பயனெனக் கொண்டவராகவும், தந்நலம் என்பதைக் கனவிலும் கருதாதவ ராகவும், தமிழ் மொழி வளர்ச்சியிலும் தமிழர் முன்னேற்றத்திலும் அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் உடையவராகவும் இருந்தனர்; அன்பு, அருள், அடக்கம், பொறை, ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை முதலிய அரும்பெருங் குணங்கட்கு இருப்பிடமாகத் திகழ்ந்தனர். இத்தகைய சால்புடைமை பற்றியே அவர்கள் சான்றோர் எனப்பட்டனர்.
அச்சான்றோர் இல்லாத ஊர் குடியிருத்தற்குத் தகுதியுடைய தன்றென அக்காலத் தமிழ் மக்கள் கருதி வந்தனர். ‘சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின் தேன்தேர் குறவர் தேயம் நன்றே’ என்பது நறுந்தொகை. ‘ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே’ எனப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார் பிசிராந்தையார் என்னும் சான்றோர். சான்றோர் வாழும் ஊர்க்கே சான்றோர் தேவையெனின் சாலார் வாழும் ஊர்க்குச் சான்றோர் தேவையைச் சொல்லவா வேண்டும்? அத்தகு பெருமை யுடையவர் அன்னார்.
அப்புலவர் பெருமக்கள் தம்மை நன்னெறிக்கண் நிறுத்தலே யன்றித் தமிழ்ப் பொதுமக்களையும் நன்னெறிக்கண் நிறுத்தி வந்தனர்; தமிழ்த் தலைவர்கள் தவறு செய்தால் அஞ்சாது இடித்துரைத்து நல்வழிப்படுத்தி வந்தனர். வள்ளல் மலையமான் திருமுடிக் காரியின் இளங்குழந்தைகளைப் பகைமையின் முதிர்ச்சியால் யானைக் காலால் மிதிப்பித்துக் கொல்ல முயன்ற கிள்ளிவளவன் என்னும் சோழன் முன் சென்று, அஞ்சாது அறிவுரை புகட்டி, அச்செந்தமிழ்ச் சிறார்களின் உயிரைக் காத்தனர் கோவூர் கிழார் என்னும் புலவர் பெருமான்.
மனவேறுபாட்டால் தன் மனைவியைத் துறந்திருந்த, மயிலுக்குப் போர்வை போர்த்த வள்ளலாகிய பேகனுக்கு நல்லறிவு கொளுத்தி, அவனை அளவோடு கூடி வாழும்படி செய்தனர் கபில பரணர் முதலிய புலவர் பெருமக்கள்.
பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பெருந்தகை, தம்பியாகிய இளங்குமணன் கொடுமையால் காட்டில் வாழ்ந்த குமணவள்ளல் கொடுத்த வாளை வாங்கிச் சென்று, நாட்டைய டைந்து, இளங்குமணனிடம் அவ்வாளைக் காட்டி, பாட்டின் பரிசாகத் தம் தலையைக் கொடுக்க முன் வந்த அத்தமிழ் வள்ளலின் பெருங்குணத்தைச் சாற்றி, நல்லறிவூட்டி அண்ணனின் தலைக்கு விலை கூறிய அவன் மனத்தை மாற்றி, வள்ளல் குமணனை முன் போல் அரியணையிலமர்த்தினார்.
அப்புலவர் பெருமக்கள், ஒருவருடைய நல்ல குணங் களையும் கெட்ட குணங்களையும் நாடறியச் செய்து, நன்மை கடைப்பிடித்து நடப்பதில் ஆர்வமும் அக்கறையும் கொள்ளும் படி தமிழ் மக்களைத் தூண்டி வந்தனர். ‘நல்லது செய்யா விட்டாலும் கெட்டது செய்யாதீர்’ என்பது அப்புலவர் பெரு மக்களின் பொன்மொழி.
ஒருவர் செய்த கொடுமையைக் கொஞ்சமும் கூசாது கூறி, தமிழ் மக்கள் கொடுஞ்செயல் செய்தற்கு அஞ்சியகலும் படி செய்து வந்தனர். நன்னன் என்னும் தமிழ்ச் செல்வன் பெருங் கொடையாளனாக இருந்தும், இரக்கமின்றி ஓர் இளம் பெண்ணைக் கொலை செய்த கொடுமைக்காக, ’பெண் கொலை புரிந்த நன்னன்’1 என, அக்கொடுஞ் செயலை நாடறியச் செய்தமை இதற்கு எடுத்துக் காட்டாகும்.
இத்தகைய செம்மை பொருந்திய சீரிய குணங்களால், தமிழ்ச் செல்வர்கள் அன்னாரிடம் மிகுந்த அச்சமும் மதிப்பும் உடையராக நடந்து வந்தனர். அப்புலவர் பெருமக்கள் நாவசைந் தால் நாடசையும் தமிழகத்தில் அன்றன்று நிகழும் நிகழ்ச்சிகள் அன்று புலவர் பெருமக்களா லேயே நாடு முழுவதும் பரப்பட்டு வந்தன. பண்டு தமிழ் நாட்டை நன்னெறி பிறழாது ஆண்டு வந்தவர் புலவர் பெரு மக்களே எனின், அது மிகைபடக் கூறுதல் ஆகாது. அன்னார் வகுத்த வழியில் அரசர்கள் செங்கோல் செலுத்தி வந்தனர்.
இவ்வாறு பழந்தமிழ்ப் புலவர்கள், தமிழ் மக்களை நல்வழியில் நடக்கும்படி செய்வதையும் தமிழ் வளர்ப்பதையு மே தம் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு, என்றும் நிலையாக ஓரிடத்தில் தங்கி யிராமல், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளம் போல, ஊரூராகச் சுற்றிக் கொண்டே இருந்தமையால், வருவாயுடைய தொழிலெதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்து வந்தனர். தமிழ்ச் செல்வர்கள் கொடுக்கும் பரிசே - பாட்டின் விலையே - அன்னாரின் குடும்ப வருவாயாக இருந்து வந்தது. அதனால் அவர்கட்குப் பரிசில் வாழ்நர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. அவ்வாறு அவர்கள் பரிசு பெறப் பாடிய பாட்டுக்களே முதுநாரை, முதுகுருகு, பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய சங்கச் செய்யுட்களில் பெரும்பாலானவை.
செல்வர்களைப் பாடிப் பரிசு பெறுவதையே தொழி லாகக் கொண்டு, அதனால் வாழ்ந்து வந்த அப்பழந்தமிழ்ப் புலவர்கள் மிக்க வறுமையுடையராய் இருந்து வந்தனர். ‘புலவர் வறுமை’ என்பது அவர்களது வறுமையின் நிலையை அளந்து காட்டுவ தாகும். அத்தகு வறுமை நிலையிலும் அவர்கள் பெற்ற பொருளில் பற்றுள்ள முடையராய் வாழவில்லை; ‘ஓம்பாது உண்டு கூம்பாது வீசிக்’1 குறையாச் செல்வமுடையாரைப் போலப் பெருமித வாழ்வே வாழ்ந்து வந்தனர். தமக்கென வாழப் பிறர்க்குரியாள ராகிய அன்னார், ’தாம் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் பண்புடையராய் வாழ்ந்து வந்தனர்.
ஒரு வள்ளலைப் பாடிப் பரிசு பெற்றுவரும் புலவரொருவர், வரும் வழியில் மற்றொரு புலவரைக் கண்டால், அவர்க்குத் தாம் பெற்ற பரிசிலின் சிறப்பினையும், பரிசில் கொடுத்த வள்ளலின் சிறப்பினையும் எடுத்துக் கூறி, ‘நீரும் சென்றால் நுமக்கும் இவ்வாறே அவ்வள்ளல் பரிசு கொடுப்பான்; இப்போதே செல்க’ என, அப் புலவரை அவ்வள்ளலிடம் அனுப்புவர். இது ஆற்றுப்படை எனப் படும். ஆறு - வழி. படை - படுத்தல். ஆற்றுப்படை - வழிப்படுத்தல். என்னே புலவர் பெருமக்களின் பெருந்தன்மை!
ஆற்றுப்படை என்பது, புறத்திணைத் துறைகளில் ஒன்றாகும். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்பாரை ஆற்றுப்படுத்துதல் மரபென்கிறார் தொல்காப்பியர்.1 கூத்தரை ஆற்றுப்படுத்தல் - கூத்தராற்றுப் படை, பாணரை ஆற்றுப்படுத்தல் - பாணராற்றுப் படை, பொருநரை ஆற்றுப் படுத்தல் - பொருநராற்றுப்படை, விறலியை ஆற்றுப்படுத்தல் - விறலியாற்றுப்படை எனப்படும். புறநானூற்றில் இந்நால் வகை ஆற்றுப்படைச் செய்யுட்களும் உள்ளன. பத்துப் பாட்டில், பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப்படை என மூன்று ஆற்றுப்படைகள் உள்ளன. இவை தமிழ் மக்கள் ஒவ்வொரு வரும் கட்டாயம் படித்து இன்புற வேண்டியவையாகும்.
பெருஞ்சித்திரனார் என்னும் சங்ககாலப் புலவர் ‘புலவர் வறுமை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர் மனைவியார் உண்ணாதிருந்து உடல்வற்றி, உடம்பில் சதைப் பற்றே சிறிதும் இல்லாமல் காணப்பட்டார். அவரைத் தோல் போர்த்த எலும்புக் கூடென்று சொல்லலாம். அத்தகு நிலையில் இருந்தார். அவர் மாசடைந்த கந்தை கட்டியிருந்தார். அவர் குப்பைக் கீரையைப் பறித்து உப்பில்லாமல் வேக வைத்து, பசி என்னும் பாவி வருத்தச் சோறு சோறென்றழும் மக்களுக் கிட்டுத் தாமும் தின்றார். இளங் குழந்தை, சுவைத்துச் சுவைத்துப் பார்த்துப் பாலில்லாமையால் பசி தாளாமல், அடுக்களைக்குச் சென்று சட்டி பானைகளை யெல்லாம் திறந்து திறந்து பார்த்தது; உள்ளே ஒன்றும் இல்லாமை கண்டு அழவே, அவ்வம்மையார் புலி வருகிறதென்று அச்சுறுத்தினார். பசிப்புலி அவ்வச்சப் புலியை மதிக்கவில்லை. மேலும் அக்குழந்தை தேம்பித் தேம்பி அழவே, அவர் அம்புலி காட்டி இன்புறுத்த முயன்றார். அப் புலியைக் கண்டஞ்சாத அக்குழவி, இப்புலிக்கா அஞ்சும்? பின்னரும் அழுதது. அவ்வம்மையார் என் செய்வார் பாவம்! ‘கண்ணே, அழாதே! உன் தந்தையிடம் சொல்’ என்று கூறி வருந்தினார். அத்தகு வறுமைநிலையில் இருந்தார் பெருஞ் சித்திரனார்.
அந்நிலையில் அவர், வெளிமான் என்னும் வள்ளலைப் பாடிப் பரிசு பெற்றுவரச்சென்றார். அவர் சென்றபோது வெளிமான் இறந்து விட்டான். இதைத்தான் வள்ளுவர் ஊழ் என்றார். அவன் தம்பி இள வெளிமான் இருந்தான். புலவர் அவனிடம் தம் வறுமை நிலையைக் கூறிப் பரிசில் வேண்டினார். புலவரின் தரமறியாத இளவெளிமான் சிறிது பொருள் கொடுத்தான். புலவர் அதைப் பெற்றாரில்லை; அது தம் தகுதிக்குத் தக்கதன்றென்று கருதினார்; அங்கிருந்து வாளா வெளியேறினார்.
வெளியேறிய பெருஞ் சித்திரனார் நேரே முதிரத்தை நோக்கி நடந்தார். அது குமணன் ஊர். கோவைக் கோட்டத்து உடுமலைப் பேட்டைக் கூற்றத்தில் கொழுமம் என்னும் ஊர் இருக்கிறது. அது தான் குமண வள்ளலின் ஊராகிய முதிரம். கொழுமத்தை அவ்வூர் மக்கள் குமண நகர் என்று பெருமை யோடு கூறிக் கொள்கின்றனர். அவ்வூரை யடுத்துக் குதிரை மலை என்ற மலை இருக்கிறது. அதுதான் பழை முதிர மலை. கொழுமத்தில் இடிந்த கோட்டை மேடு இருக்கிறது.
குமணன் சித்திரனாரை அன்போடு வரவேற்றான். புலவர் மகிழ்ந்து, “பாரி, ஓரி, காரி, அதியன், பேகன், ஆய், நள்ளி என்னும் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்த பின்னர், ‘பாடி வருவோரின் துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யான்’ என, நீ இருத்தலான் நான் இங்கு வந்தேன்; நின்னிடம் கூறமுடியாத அத்தகு வறுமையில் வாடும் என் மனைவி மகிழும் வண்ணம் நான் ஏறிச் செல்ல ஒரு யானை தரவேண்டும்” என்று பாடினார். பாட்டைக் கேட்டுக் குமணன் மகிழ்ந்தான். பொன்னும் பொருளும் ஆடையும் அணியும் கொடுத்து, புலவர் விரும்பியவாறே, நீண்ட கொம்பு களையுடைய மலை போன்ற களிறொன்றும் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான்.
புலவர் குமணனிடம் விடை பெற்று, அக்களிற்றின்மேல் ஏறிக்கொண்டு பெருமிதத்தோடு சென்றார். எங்கு? தம் ஊருக்கா? இல்லை; இளவெளிமான் ஊரை நோக்கிச் சென்றார்; ஊரை யடைந்தார்; ஏறிச் சென்ற களிற்றை அரண்மனை முன்னர் உள்ள காவல் மரத்தில் கட்டிவிட்டு, அரண்மனைக்குட் சென்று இளவெளி மானைப் பார்த்து, ‘இரப்போர்க்குக் கொடுப்பவன் நீயும் அல்லை; இரப்போர்க்குப் புரப்போர் இல்லாமல் இல்லர்; அதோ நின் காவல் மரத்தில் வள்ளல் குமணனைப் பாடிப் பெற்று வந்த பரிசிலான யானையைக் கட்டியிருக்கிறேன்; நான் வருகிறேன்’ என்று யானையை அப்படியே கட்டிவிட்டுத் தம் ஊரை நோக்கி நடந்தார்.
இளவெளிமான் கொடுத்த சிறிது பொருளைக் கொண்டு தம் குடும்பத்தின் வறுமை நிலையை மாற்றி யிருக்கலாம். மனைவியும் மக்களும் உண்டுடுத்து மகிழ்வதைக் கண்டு களித்திருக்கலாம். சட்டி பானைகளைத் திறந்தால் சோறும் சாறும் இருக்கும்படி செய்தி ருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்தாரில்லை. அதைச் செய்ய அவர் தகுதி விட வில்லை. அவர் அத்துடன் நின்றனரா? இல்லை. ‘நீ சிறிது கொடுத்தாய், இதோ நான் பெரிது கொடுக்கிறேன்’ என்று யானையை அவன் காவல் மரத்தில் கட்டிவிட்டு வந்து, அவன் தன் தவற்றை உணரும்படி செய்தனர். என்னே புலவரின் பெருந்தன்மை! இத்தகைய பெருமை பொருந்திய புலவர் பெருமக்களால் போற்றி வளர்க்கப்பட்ட தன்றோ தமிழர் பண்பாடு! பெருஞ்சித்திரனார் போன்ற புலவர் பெருமக்களை யுடைய தமிழ்நாடு இனியொருகால் உண்டாதல் கூடுங்கொல்!
அவர் இத்துணைப் பெருந்தன்மையோடு அமையவில்லை; மேலும், பெருமைக்கு அவாவினார். ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற மூதுரையையும் கடந்து விட்டார். ‘அமைவு’ என்னும் சொல்லின் பொருளாக அமைந்தார். அவர் குமண வள்ளலிடம் பெற்று வந்த பொருள்களைத் தம் மனைவி யாரிடம் கொடுத்து,
‘இது முதிரத்துத் தலைவன் குமணன் நல்கிய செல்வம்; இதை, உன்னை விரும்புகின்ற பெண்களுக்கும், நீ விரும்புகின்ற பெண்களுக்கும், உன் அத்தை, பாட்டி முதலிய முதியவர் களுக்குங் கொடு; வேண்டியபோது உனக்குக் குறியெதிர்ப்புக் கொடுத்தவர்களுக்குங் கொடு; இன்னார் என்று கருதாது கொடு; என்னைக் கேட்க வேண்டும் என்பதில்லை; உன் விருப்பம் போல் கொடு. இதை வைத்துக் கொண்டு செல்வாக்காக வாழலாம் என்று எண்ணாது, நீயும் எல்லார்க்குங் கொடு. நானும் கொடுக்கிறேன்’ என்றார்.
தம் குடும்பம் உள்ள வறுமை நிலையில், யார் இவ்வாறு கூறத் துணிவார்? சிறிது பொருட் பற்றுடையராய் இருப்பினும் என் செய்திருப்பர்! இத்தகைய பற்றற்ற உள்ளமுடைய, தந்நலம் என்பதைக் கனவிலும் அறியாது சான்றோர்களா லன்றோ பழந் தமிழகம் பண்பாட்டுச் சரக்கறையாகத் திகழ்ந்தது!
இஃதோர் எடுத்துக்காட்டு. புறநானூற்றைத் திறந்தால், புலவர் பெருமைக்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் காணலாம். தமிழ்ப் பள்ளி மாணவர்கள், புறநானூற்றில் நூற்றுக்குப் பத்துப் பாட்டாகிலும் படிக்கும் நிலை ஏற்பட்டா லன்றித் தமிழ் மாணவர்கள் தமிழுணர்ச்சி பெற முடியாது. என்று அந்நற் காலம் வருமோ!
தாய்மொழிப் பற்று
ஒரு மொழி வளம்பெற வளரவேண்டுமெனின், அம்மொழி பேசும் மக்கள் அம்மொழியிடத்து மிகுந்த பற்றுடையராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் பற்றில்லாத மக்களையுடைய மொழி எதுவும் வளம் பெற வளராது. பெற்ற பிள்ளையின்பால் தாய்க்குப் பற்றில்லையாயின் அப்பிள்ளை நலனுற வளருமோ? பற்று என்னும் பசையினால் ஒட்டப்பட்டதே ஒருவர்க் கொருவர் கொண்டுள்ள தொடர்பு நிலைத்து நிற்றற்குக் காரணமாகும். உயரின மக்களுக்குரிய மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று என்ற மூன்றனுள் மொழிப் பற்றே ஏனை இரண்டிற்கும் ஏதுவாகும். தாய்மொழிப் பற்றில்லாத ஒருவன் மக்கட் பதராவான்.
பழந்தமிழ் மக்கள் மிக்க தாய்மொழிப் பற்றுடையராய் இருந்து வந்தனர். பழந்தமிழ்ச் செல்வர்களும், குறுநில மன்னர்களும், பெருநில மன்னர்களும் தமிழ்ப் பாடல் பெறாததை மிக மிக இழிவாகக் கருதி வந்தனர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், ‘மாங்குடி மருதனார் முதலிய புலவர்கள் எனது நாட்டைப் பாடாது நீக்குக’ என்று வஞ்சினங் கூறியது முதிர்ந்த தாய் மொழிப் பற்றினாலன்றோ? சேரன் செங்குட்டுவன், கனக விசயரின் முடித்தலையில் கண்ணகியின் படிவக்கல் ஏற்றி வந்ததற்கு முதற்காரணம் அவனது தாய்மொழிப் பற்றன்றோ?
ஒருவர் எய்தும் புகழில் புலவர் பாடும் புகழே தலையாய புகழென மதிக்கப்பட்டு வந்தது அன்று. ‘புலவர் பாடும் புகழுடை யோர்’ என்பது ஒருவரது புகழின் எல்லையைக் குறிக்கும் மரபுத் தொடராகும். ‘ஒரு பழந்தமிழ்க் குடியைக் குறிப்பிடும் போது, ’புலவர் பாடும் புகழொடு வாழ்ந்த குடி’ என்பது வழக்கம்.
அதியமான் நெடுமான் அஞ்சி, தான் அரிதிற் பெற்ற அரு நெல்லிக்கனியை, உண்டவர் நெடுநாள் உடல் நலத்தோடு வாழ்வார் என்பதை அறிந்திருந்தும் அதை ஒளவைக்குக் கொடுத்தது ஆன்ற தாய்மொழிப் பற்றினாலன்றோ? ஒளவை நெடுநாள் உடல் நலத்துடனிருந்து தமிழ் வளர்க்க வேண்டும் என்பதுதானே அவன் நெல்லிக்கனி கொடுத்ததன் குறிக்கோள்?
வழி நடந்து வந்த அயர்ச்சியால் அறியாது முரசு கட்டிலில் ஏறிப் படுத்துறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரை, வாள் கொண்டு இரு துண்டாக்கும் தன் கையால், அவர் தூங்கி யெழும் வரைக் கவரிகொண்டு வீசிய சேரமான் பெருஞ்சேர லிரும் பொறையின் தமிழ்ப் பற்றுக்கு எதனை உவமை கூறுவது?
தமிழ்ப் புலவர்களுக்குக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டு வறுமையுற்ற தமிழ்ச் செல்வர்கள் அளவிலடங்கார். தாய்மொழி மீதுள்ள முதிரிய பற்றினால் புலவர்கள் எதைக் கேட்டாலும் இல்லை யென்னாமல் கொடுத்துப் பொன்றாப் புகழை நிலைநாட்டிச் சென்றனர் பழந்தமிழ்ப் பெருங்குடி மக்கள். ‘ஈதல் இசைபட வாழ்தலே’ மக்கட் பிறப்பின் பயன். அதைவிட மக்கட் பிறப்பினால் அடையும் பயன் வேறில்லை. ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் பொய்யா மொழியின் பொருளுரையை உணர்ந்த தமிழ்ச் செல்வர்கள், தமிழ்ப் பற்றின் தூண்டுதலினால், தமிழ்ப் புலவர்க்கு வாரிவாரி வழங்கித் தமிழ் வளர்த்து வந்தனர். இதனாற்றான் கொடை மடம் பட்ட பாரி முதலிய வள்ளல்கள் தோன்றினர். முறுகிய தாய்மொழிப் பற்றினால் புலவர்க்கு நாடு கொடுத்தும், ஊர் கொடுத்தும், தலை கொடுத்தும், உயிர் கொடுத்தும், அரசு கொடுத்தும், அரசிளங் குமரனைக் கொடுத்தும், மலையேறிக் கண்ட மாநில வருவாயைக் கொடுத்தும் தமிழ் வளர்த்த வள்ளல்கள் பலர்.
‘பொருளிலார்க்கு இவ்வுலகில்லை’ என்னும் பொய்யா மொழியைப் பொய்யா மொழி யாக்கி, மனைவி மக்கள் சுற்றம் என்னும் குடும்பப் பற்றின்றி, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பொதுமைப் பற்றுடன், வாழ்க்கை யின்பத்தை மறந்து, வறுமைத் துன்பத்திற் சிறந்து, தாய்மொழித் தொண் டாற்றிய புலவர் பெருமக்களின் நோக்கந் தான் என்னை! தாய்மொழிப் பற்றன்றி?
இத்தகைய தாய்மொழிப் பற்றுடைய புலவர்கள் செல்வர்களும் இல்லாதிருந்திருந்தால் தமிழ்மொழியும் எப்பொழுதோ செத்த மொழிப் பட்டியலில் சேர்ந்திருக்கும். இந்நேரம் தமிழ் என்னும் பெயரே கூட மறைந்தொழிந்திருக்கும் தமிழ்மொழி அழிந்தொழிந்து சிதையாது அப்படியே நிலைத் திருப்பதற்குப் புலவர் வறுமையும் செல்வர் புகழ்மையும் காரணமோ? அன்றி, அவ்விரு பாலாரின் தாய்மொழிப் பற்றுக் காரணமோ? யாதாயினும் அது வாழ்க!
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று மணி மேகலை. இதன் ஆசிரியர் - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் சங்கப் புலவராவர். ‘தண்டமிழாசான் சாத்தன், நன்னூற் புலவன்’ என்று இவர் இளங்கோவடி களால் சிறப்பிக்கப் படுகின்றனர். இவர் நெல் முதலிய கூல வாணிகம் செய்தமையான், ‘கூலவாணிகன்’ என்னும் அடை மொழியைப் பெற்றார். இவர்க்குச் ‘சீத்தலை’ என்னும் அடை மொழி, அளவு கடந்த தாய்மொழிப் பற்றினால் வந்ததே யாகும். சாத்தனார் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவர். தமிழே தம் உடல்பொருள் உயிர் எல்லாம் எனக்கொண்டவர்: தமிழ் வாழத் தாம் வாழ்ந்த தகையினர்.
ஒரு தாய் தன் பிள்ளை ஏதாவது குற்றஞ் செய்தால், அவ்வாறு செய்யாமல் இருக்கும்படி கூறுவாள்; அவன் கேட்கா விடின், ‘இது நம் குடிப்பெருமைக் கடுக்காது; இனி அவ்வாறு நடந்து கொள்ளாதே!’ என்று அன்போடு கேட்டுக் கொள்வாள்; எவ்வளவு சொல்லியும் கேளாமல் அவன் மேலும் மேலும் குற்றம் புரிவானானால், ‘அந்தோ! இப்பொல்லாத பிள்ளையைப் பெற்றேனே! என் பெயரைக் கெடுக்கிறானே கொடியன்; இவனா கொடியன்? இல்லை இவனைப் பெற்ற நானே கொடியள்; ஐயோ! என் மானம் போகிறதே!’ என்று தன் தலையில் அடித்துக் கொள்வாள். அத்தாய் தன் குடிப் பெருமையில் தனக்குள்ள பற்றினால் அவ்வாறு செய்தாள். இது நற்குடிப் பிறந்த நற்றாயாரின் இயல்பு.
இவ்வாறே, அரைகுறையாகக் கற்றவர்கள் சொற்குற்றம், பொருட்குற்றம், யாப்புக் குற்றம் முதலிய குற்றமுடைய பாட்டுக்கள் பாடினால் சாத்தனார், ‘குற்றமுடைய பாட்டுக் களைப் பாடாதீர்; இது தமிழைக் கொலை செய்வதாகும். தாய்க்கொலையினும் கொடியது தாய்மொழிக் கொலை தமிழ்க் கொலை செய்யாதீர்’ எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்வார். அங்ஙனம் கேட்டுக் கொண்டும் கேளாது மேலும் குற்றமுடைய பாட்டுக்கள் பாடுவதைக் கண்டால் மனம் பொறாது வருந்து வார்; ‘அந்தோ! இது அவர் குறையன்று தமிழ் மொழியின் பயக்குறை’ என்று, எழுத்தாணியால் தம் தலையில் குட்டிக் கொள்வார்.
இங்ஙனம் தமிழ்க் கொலை செய்வதைக் கண்டபோ தெல்லாம் குட்டிக் கொள்வதால் தலையில் புண் உண்டானது. மேலும் மேலும் குட்டிக் கொள்வதால் புண் ஆறாது சீப்பிடித்துக் கொண்டது. அதனால் இவரைச் சீத்தலைச் சாத்தனார் என்றழைத்தனர். என்னே சாத்தனாரின் தாய்மொழிப் பற்று! சாத்தனார் போன்ற தமிழ்ச் சான்றோர்களாலன்றோ தமிழ் மொழி இன்னும் தன் பழம் பண்பை இழக்காமல் இருந்து வருகிறது.
தாய், தன் மகன் குற்றமற்றவனாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன் தலையில் அடித்துக் கொண்டாள். சாத்தனார் தம்மால் வளர்க்கப்படும் தமிழ் குற்றமற்றதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே தம் தலையில் குட்டிக் கொண்டார். அந்நற்றாயும், சாத்தனாராகிய இச்செவிலித் தாயும் செய்த செயல் ஒன்றுதானே? அவள் மகன் மேலுள்ள பற்றினால் தலையில் அடித்துக் கொண்டாள். இவர் தமிழ் மேலுள்ள பற்றினால் தலையில் குட்டிக் கொண்டார் வாழ்க இருவர் பற்றும்!
சாத்தனார் தாய்மொழிப் பற்று இவ்வளவோடு நின்றுவிட வில்லை. தாய்மொழிப் பற்றுக்குத் தாம் ஓர் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்ததோடு, தாம் செய்த மணிமே கலையில் ஓர் எடுத்துக் காட்டுந் தந்துள்ளார்.
காவிரிப்பூம் பட்டினத்தில் சாதுவன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் பெருஞ் செல்வன்; ஆதிரை என்னும் கற்பரசியின் கணவன்; தீயவழியில் தன் செல்வம் முழுதும் தொலைத்து விட்டான்; வாழ வழியில்லை. அவன், வெளி நாடு சென்ற ஒரு வணிகக் கப்பலில் ஏறிச் சென்றான். சாதுவன் சென்ற அக்கப்பல் கவிழ்ந்துவிட்டது. சாதுவன் ஒரு மரத் துண்டைத் துணையாகக் கொண்டு நீந்திச் சென்று ஒரு தீவை யடைந்தான். நெடுநேரம் நீந்திய களைப்பினால் அவன் ஓரிடத்தில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டான்.
அத்தீவு, மாக்களையே யன்றி, மக்களையும் கொன்று தின்று வாழும் நாகர் என்னும் ஒருவகை மக்கள் வாழுந்தீவு. அங்கு வந்த நாகர்கள் தூங்குகின்ற சாதுவனைக் கண்டனர். நல்ல வேட்டை கிடைத்ததென்று அகமிக மகிழ்ந்து, சாதுவனைச் சுற்றி நின்று ஆரவாரம் செய்தனர். சாதுவன் விழித்தெழுந் தான்; தன்னைச் சூழ்ந்துள்ள அந்நாகர்களைக் கண்டு அஞ்சினான். நாகர்கள் சாதுவனைப் பார்த்து, ‘நீ யார்?’ என்று கேட்டனர். சாதுவனுக்கு அந்நாகர் மொழி தெரியும். அதனால், அவன் அவரோடு அவர் தாய்மொழியில் பேசினான். தங்கள் தாய்மொழியில் பேசுவது கண்ட நாகர்கள், சாதுவனிடம் அளவு கடந்த அன்பு கொண்டனர்; அவனைத் தங்கள் தலைவனிடம் அழைத்துச் சென்றனர்.
சாதுவன், அத்தலைவனிடம் நாகர் மொழியிலேயே பேசினான். அயலானொருவன் தனது தாய்மொழியில் பேசுவது கண்ட நாகர் தலைவன் அளவிலா மகிழ்ச்சியடைந்தான்; சாதுவனிடம் மனங் கலந்த அன்பு கொண்டு அளவளா வினான். சில நாட்களுக்குப் பின், கடலிற் கவிழ்ந்த கப்பல்களிலிருந்து எடுத்து வைத்திருந்த பொன்னும் துகிலும் பிறவும் நிரம்பக் கொடுத்து, அங்கு வந்த காவிரிப்பூம் பட்டினத்துக் கப்பலொன்றில் சாதுவனை அனுப் பினான். சாதுவன் புகார் நகரம் போந்து, ஆதிரையுடன் இனிது வாழ்ந்து வந்தான்.
நாகரின் தாய்மொழிப் பற்று, சாதுவனைக் கொல்லாது விட்டதோடு, பெருஞ்செல்வனாகவுஞ் செய்தது. மக்களைக் கொன்று தின்று வாழும் பகுத்தறிவில்லாத நாகர் என்போர் கூடச் சிறந்த தாய் மொழிப் பற்றுடையோராய் விளங்குகின்றனர். ஆனால், பகுத்தறிவுடைய தமிழ் மக்களில் ஒரு சிலர், தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இன்றி, தம் தாய்மொழி யாம் தமிழ் மொழியைக் கொலை செய்கின்றனரே, இது என்ன கொடுமை! என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த எழுந்ததேயாகும் இக்கதை. தாய்மொழிப் பற்றுடைமைக் காகச் சாத்தனாரைப் போற்றுவதா? நாகரை, நாகர் தலை வனைப் போற்றுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை. அவர் எடுத்துக்காட்டு அவரையும் விஞ்சிவிட்டது.
இத்தாய்மொழிப் பற்றுச் சாத்தனாருடன் நின்றுவிட வில்லை; தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருந்தது. சாத்தனார் தமிழ்க் கொலை செய்வோரின் அறியாமைக்கு இரங்கித் தம் தலையில் குட்டிக் கொண்டார். ஆனால், பிற்காலத் தமிழர்கள் அத்தமிழ்க் கொலை செய்தவர் தலையி லேயே குட்டித் தமிழ்க் கொலையைத் தவிர்க்கப் பாடுபட்டனர்.
அதிவீரராமபாண்டியன் என்பவன் கொற்கை என்னும் ஊரிலிருந்து பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். இவன் சிறந்த தமிழ்ப் புலமையடையவன்; புரவலனும் புலவனுமாக விளங்கியவன்; நைடதம், நறுந்தொகை முதலிய நூல்கள் செய்து தமிழ் வளர்த்து வந்த தகையாளன்; தமிழ் மொழியிடத்து அளவு கடந்த பற்றுடையவன்.
இவன் தன்னிடம் பாடிப் பரிசு பெற வரும் புலவர்கள் தமிழ்க்கொலை செய்தால், குற்றங்கட் கேற்றவாறு அவர்கள் தலையில் ஓங்கிக் குட்டுவான். இது பள்ளிப் பிள்ளைகள் செய்யுஞ் செயல், பள்ளிப் பிள்ளைகளில் ஒருவனுக்குத் தெரியாததை மற்றொருவன் சொன்னால், தெரியாத பிள்ளையைச் சொன்ன பிள்ளை குட்டுவது வழக்கம். அங்ஙனம் பள்ளிப் பிள்ளைகள் செய்யும் செயலைச் செய்து வந்ததால், இவனைப் பிள்ளைப் பாண்டியன் என்று அழைத்து வந்தனர். என்னே பாண்டியனின் தாய்மொழிப் பற்று! சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த மரபில் வந்தவனல்லவா?
தமிழ் மக்களுக்குத் தாய்மொழிப் பற்றுக் குன்றிய பிற்காலத்தே தமிழர் நிலைக்கிரங்கிய தாய்மொழி பற்றுடைய புலவரொருவர்,
“குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை”
எனத் தமிழ் மக்களின் தகா நிலைக்கு இரங்கியதோடு, பிள்ளைப் பாண்டியனின் தாய்மொழிப் பற்றைப் பாராட்டினார்.
தமிழில் பாரதம் பாடிய புலவர்களில் வில்லி புத்தூ ராழ்வார் என்பவர் ஒருவர். இவர் வில்லி எனவே அழைக்கப் படுவர். இவர் பாடிய பாரதம் வில்லி பாரதம் எனப்படும். இவர் சிறந்த கவித்திறம் உடையவர்; அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையவர்; சாத்தனார், குற்றமுடைய பாட்டு பாடுவோரின் கொடுஞ் செயலுக்கு இரங்கித் தன்தலையில் குட்டிக் கொண்டார். அதிவீர ராம பாண்டியன், குற்றஞ் செய்வோர் தலையில் குட்டினான். ஆனால், வில்லியோ அவ்வாறு செய்யவில்லை; இன்னும் ஒரு படி மேற் சென்று விட்டார்.
இவர், வக்கபாகை வரபதி யாட்கொண்டான் என்னும் அரசனது அவைக்களப் புலவராக இருந்து வந்தார். அரை குறையாகக் கற்ற புலவர்கள் பொருள் பெறும் ஆசையால், குற்றங்குறையுள்ள பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்து பரிசு வேண்டினால், ஆழ்வார் அன்னார்க்குத் தக்க பரிசு கொடுத் தனுப்புவார். என்ன அது? குத்தூசி போன்ற ஒன்றைக் காதுக்குள் விட்டு இழுத்து, காதை அடியோடு அறுத்து அப்புலவர் கையில் கொடுத்து, ‘உமது பாட்டுக்கு ஏற்ற பரிசில் இது தான்’ என்று சொல்லி யனுப்புவார்.
இதென்ன கொடுமை! இதற்கா இத்தகைய வன்கொலை? என்னலாம். தமிழ்க் கொலை செய்வது மட்டும் கொடுமையும் வன்கொலையுமல்லவா? வில்லி போன்றவர் இல்லா திருந்திருக்கின் இந்நேரம் தமிழ் இறந்துபட்டிருக்கும் என்பதில் ஐய மென்ன?
முன் பிள்ளைப் பாண்டியனைப் பாராட்டிய புலவர், அப்பாராட்டுதலோடு சேர்த்து,
" குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை,
குறும்பியள வாய்க்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை."
என, இவருடைய தமிழ்ப் பற்றினையும் பாராட்டினார்.
குற்றஞ் செய்தோரைத் தலையில் குட்டுதலும், காதை அறுத்தலும் எச்சரிக்கை செய்தலேயாகும். ஆனால், ‘கொலைக்குக் கொலை’ என்ற முடிவான தண்டனை நிறைவேற்றப் பட்டதும் உண்டு.
ஒட்டக் கூத்தர் என்பவர் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவர்; பேரறிஞர்; பெருங்கவிஞர்; ‘மோனை முத்தமிழ் மும்மதமும் பொழியானை’ எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அத்தகு தமிழ்ப் புலமை யுடையவர். இவர் முன்னைய மூவரினும் முதிர்ந்த தமிழ்ப் பற்றுடையவர் எனலாம். இவர் தமிழ்க் கொலை செய்வோரின் தலையையே வெட்டித் ‘தமிழ்க் கொலை செய்யின் தலை போய்விடும்’ என அஞ்சும்படி செய்து தமிழைப் பாதுகாத்து வந்த தகவுடை யாளராவர்.
தேமா, புளிமா என்னும் யாப்பிலக்கணங்கூடத் தெரியாத ஒரு சிலர், ஏதோ சில தமிழ்ப் பாட்டுக்களைப் படித்த பழக்கத்தினால், ஒரு பாட்டைப் பார்த்து அதுபோல அரை குறையாகத் தாமும் பாடுவதைக் கவித் திறமையாகக் கொண்டு பொருள் பெறும் ஆசையால் பாட்டுப் பாடிக் கொண்டு பரிசு பெற வந்தால், கூத்தர், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் பற்றிய கேள்விகள் கேட்பார்; சரியான விடை கூறத் தெரியாதவர்களை, ‘இனிமேல் இத்தகைய குற்றமுடைய பாட்டுக்களைப் பாடித் தமிழைக் கொலை செய்யாதீர்; தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் படியுங்கள்; யாப்பருங்கலக் காரிகையை யாவது நன்றாகப் படித்தறியுங்கள்; அதன் பின் புதிய பாட்டுக்கள் பாடுங்கள்; குற்றங் குறையில்லாமல் பாடிப் பாடிப் பழகுங்கள்; அதன்பின் பாடிப் பரிசு பெறச் செல்லுங்கள்’ என அறிவுரை கூறி அனுப்புவர். அவர்கள் அவ்வாறு செய்யாமல் மறுபடியும் தமிழ்க் கொலை செய்து கொண்டு வந்தால், அத்தமிழ்க் கொலைஞர்களை இரண் டிரண்டு பேராகக் குடுமியோடு குடுமியை முடிந்து, தலையை வெட்டி விடுவாராம். இது தமிழ்ப் பற்றின் முடிந்த முடிவாகும்.
குற்றமுடைய பாட்டுப் பாடியதற்குமா கொலைத் தண்டனை? இது கொடுமையன்றோ? எனின், அயலார் வீட்டுக் கதவைத் தட்டிய குற்றத்திற்காகப் பொற்கைப் பாண்டியன் தன் கையையே வெட்டினான். அறியாது ஓர் ஆண் கன்றைக் கொன்ற குற்றத்திற்காக, ஒரு சோழ மன்னன் தன் ஒரே மகனையே கொன்றான். சண்டேசுர நாயனார் என்பவர், மணலைக் குவித்து அதனைச் சிவலிங்க மென்று கொண்டு, அதன் மேல் ஊற்ற வைத்திருந்த பாற் குடத்தைக் காலால் தள்ளிப் பாலைக் கவிழ்த்த குற்றத்திற்காகத் தன் தந்தையின் காலை வெட்டினார். மாறுபட்ட சமயக் கருத்துடைய பல்லாயிரக் கணக்கான பேர்கள் கழுவிலேற்றியும் தூக்கியும் கொல்லப் பட்டுள்ளனர். அரசியல் எதிரிகளைத் தூக்கிலிட்டும் சுட்டும் கொல்வதை இன்றும் காண்கிறோம். அவற்றை யெல்லாம் விடக் கூத்தர் செய்தது கொடுமையாகாது.
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”
என்பது வள்ளுவர் வாய்மொழி. மக்கட் கொலையினும் தாய்மொழிக் கொலை குறைந்ததா? புல்லாகிய களையைக் களையா விட்டால் நெல் எங்ஙனம் வளரும்? வேண்டுமென்றே தமிழ்க் கொலை புரியும் கொடியரைக் களையாவிடின் தமிழ் எங்ஙனம் வளரும்? தமிழ்க் கொலை ஓர் இனக் கொலை யாகும். தமிழ்க் கொலையைத் தமிழினக் கொலையாகவே கொண்டு தமிழ் வளர்த்து வந்த காலம் அது. என்னே கூத்தரின் தாய்மொழிப் பற்றின் முதிர்ச்சி!
முன், பிள்ளைப் பாண்டியனையும் வில்லியையும் பாராட்டிய அப்புலவர், அவ்விருவரையும் பாராட்டிய பாராட்டோடு சேர்த்து,
"குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனீங் கில்லை.
குறும்பியள வாய்க்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை.
இரண்டொன்றாய் முடிந்ததலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தன் இல்லை
விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ பணக்காரத் துரைக ளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே."
எனக் கூத்தரின் தமிழ்ப் பற்றினையும் பாராட்டி, அத்தகைய தமிழ்ப் பற்றுடையோர் இன்று இல்லாமையால், ‘தடியெடுத்தவன் தண்டற்காரன்’ என்பது போல, கண்டவர் களெல்லாம் கவிஞர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ்க் கொலை புரிந்து, அக்கொலைக் குற்றம் புரிந்ததற்குக் கூலியாகத் தமிழறிவில்லாச் செல்வர்களிடம் பரிசு பெற்று வாழ்ந்து வந்த கொடுஞ் செயலைக் கடிந்து கூறி இகழ்ந்து மனம் நொந்தனர். என்று தமிழ் மக்கள் சிறந்த தாய் மொழிப் பற்றுடையராகிக் குற்றங்குறையற்ற தமிழ் வளர்த்துத் தனிச் சிறப்புறுவார்களோ!
பாட்டும் பரிசும்
பழந்தமிழ் மக்கள் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு வகையாகப் பகுத்துப் பயனடைந்து வந்தனர். அகம் - அகத்திணை, அகவொழுக்கம், அகப்பொருள் எனவும், புறம் - புறத் திணை, புறவொழுக்கம், புறப்பொருள் எனவும் வழங்கும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என அகத்திணை ஏழு வகைப்படும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் புறத்திணை ஏழு வகைப்படும். இவை இன்ன என்பது தொல்காப்பியத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது.
புறத்திணை ஏழனுள், பாடாண்டிணை என்பது பாடப் படுவோர், பாடும் பொருள், பாடும் வகை, பாடுவோர் இலக்கணங் கூறுவதாகும். பாடு ஆண் திணை - பாடப்படும் ஆண்மகனது ஒழுக்கம். இது பாடுவோரையும் குறிக்கும். திணை - ஒழுக்கம். அதாவது வாழ்க்கை முறை.
பாடும் பாட்டுக்கு இலக்கணம் வகுத்துப் பாடித் தமிழ் வளர்த்து வந்ததோடு, வாழும் வாழ்க்கை முறையினை அகம் புறம் எனப் பகுத்து, அகப்பொருள் பற்றியும் புறப் பொருள் பற்றியும் பாடி, வாழ்க்கை முறையை வரையறைப்படுத்தி வாழ்ந்து வந்த நம் முன்னையோரின் அறிவு நுணுக்கம் அறிந்து இன்புறற் பால தொன்றாகும். அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலியன அகத்திணை நூல்கள். புறநானூறும் பதிற்றுப் பத்தும் புறத்திணை நூல்கள்.
ஒருவருடைய வீரம், கொடை, புகழ் முதலிய சிறப்பினைப் பற்றிப் பாடுதல் பாடப்படுவோரைப் பற்றியதாகும். கொடுப் போரை ஏத்துதல், கொடாரைப் பழித்தல், தாம் வந்திருத்தலைத் தலைவனுக்கு உரைக்கும்படி வாயில் காப்பவனுக்கு உரைத்தல், ஆற்றுப்படை முதலியன பாடும் புலவரைப் பற்றியவையாகும். அகப்பொருளும் புறப் பொருளும் பாடும் பொருள்களாகும். வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ, பெருமங்கலம், வாழ்மங் கலம் முதலியன பாடும் வகையாகும். தொல்காப்பியத்தில் இவை யெல்லாம் நன்கு விரித்துக் கூறப்படுகின்றன.
இயற்றமிழ்ப் புலவர்கள், தமிழ்ச் செல்வர்கள் உள்ள இடங்களை நாடிப் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகள் போலச் சென்று, அகப்பாட்டும் புறப்பாட்டும் பாடி அச்செல்வர் களை மகிழ்வித்து, அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் பரிசிலைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அப்புலவர்கள் எப்போதும் பாடிப் பரிசு பெறுவதையே தொடர்ந்த தொழிலாகக் கொள்ளாமல், பெற்ற பரிசிலைக் கொண்டு சுற்றத்தோடு உண்டுடுத்து இருந்து கொண்டு, தமிழ் நூல்களைக் கற்றும், நூலாராய்ச்சி செய்தும், பிறர்க்குப் பாடம் சொல்லியும், தாமும் இன்புற்றுப் பிறரையும் இன்புறச் செய்து வாழ்ந்து வந்தனர்.
பெற்ற பரிசில் தீரும்வரை குடும்பக் கவலை என்பது அவர்களை அணுகவே அணுகாது. செலவுக்கில்லாமல் வாழ்க்கைத் தேர் நிலையாக நின்ற பின்னர், மனைவியார் அவ்வாழ்க்கைத் தேர் ஓடாமல் நிற்கும் நிலையை எடுத்துரைத்த பின்னர், சோறில்லாமல் மக்களும் மனைவியும் வாடி வதங்கிய பின்னர், அடுப்பில் காளான் புடைத்த பின்னர்த் தான் குடும்பக் கவலை யென்பது அவர்க்குத் தென்படும். அதன் பின்னர்த்தான் அவர்கள் ஒரு வள்ளலை நாடிப் பாடிப் பரிசு பெற்றுவரச் செல்வர். அவ்வளவு பற்றில்லாத வாழ்வு வாழ்ந்து வந்தனர் அன்னார்.
தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்களாகிய அச்சான் றோர்கள், தமது குடும்பத்தைப் பற்றிக் கவலை யெடுத்துக் கொள்ளாமல், தமிழ்ப் பொது மக்களின் வாழ்வுக்காகவே, தமிழ் வாழ்வுக்காகவே, தமிழ்ப் பண்பாட்டு வாழ்வுக்காகவே முழுக் கவலையும் எடுத்துக் கொண்டு, அதற்காகவே, தம் வாழ்க்கையைப் பயன்படுத்தி வந்தனர். எத்தகைய வறிய நிலையிலும், இவர்கள் தரமறியாது செல்வர்கள் குறையக் கொடுக்கினும், ஆள் மூலம் கொடுக்கினும் அப்பரிசிலைப் பெறாது மீள்வர். என்னே அன்னாரின் மானவாழ்வு!
இனித் தமிழ்ச்செல்வர்களோ, முறுகிய தமிழ்ப் பற்றினாலும், புலவர்தம் பொருள் மொழியைக் கேட்டு இன்புறும் விருப்பி னாலும் ‘உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரியும்’ - ’இன்று இப்புலவர் பெருந்தகையோடு அளவளாவும் நற்பேறு பெற்றேம் என்று செல்வர் மகிழும் வண்ணம் அவரிடம் சென்று, இத்தகைய பெரும் புலவரைப் பிரியின், மறுபடியும் இவரை எப்போது கண்டு அளவளாவி இன்புறுவோம் என்று எண்ணிப் பிரிய மனமில்லாமல் இருக்கும் நிலையில் பிரியும், புலவரைப் பிரிய மனமில்லாதவராய், பிரியா விடை கொடுத்தனுப்பும் அத்தகு பெருமையுடையராதலானும், உடனே பரிசில் கொடுக்காமல் காலந் தாழ்த்துவர். அவர்கள் கண்டார்களா இவர்தம் வறுமை நிலையை?
அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவை, மாமியார் வீட்டில் மருவலம் உண்ணும் மருமகன்போல, இவர் மட்டும் உண்டு கொண்டிருந்தால் போதுமா? காளான் புடைத் துள்ள அடுப்பினைப் பார்த்து, பின்னர்த் தம் வயிற்றினைப் பார்த்து, பின்னர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, பின் வழிமேல் விழி வைத்துத் தம் வரவை எதிர்பார்த்துக் கொண்டு ஏங்கி யிருக்கும் குடும்பத்தினர் நிலை என்னாவது?
பல நாள் ஆகியும் செல்வர் பரிசுகொடாமல் காலந் தாழ்த்துவரின் தம் குடும்ப நிலையைக் குறிப்பாய்க் கூறிப் பரிசு கொடுக்கும்படி வேண்டுவர் புலவர். இது பரிசில் கடாநிலை எனப்படும். வெளிப்படையாகக் கேட்க நாணமும் மானமும் இடந்தராமையால் குறிப்பாகக் கேட்பர். அக்குறிப் பறிந்ததைக் கூறி, அதனைப் பொறுத்தருளுமாறு வேண்டி, வேண்டியன கொடுத்து மகிழ்விப்பர்.
ஒளவையாரைப் பிரிய மனமில்லாத வள்ளல் பாரி, அவர் வற்புறுத்தலின் பேரில் பரிசு கொடுத்தனுப்பிவிட்டு, பின் தன் ஆட்களை விட்டு அப்பரிசிலைப் பறித்துக் கொண்டு வரும்படி செய்து, ஒளவையார் திரும்பி வந்து நடந்தது கூறவே, அவ்வழிப் பறி பறித்தவரைக் கண்டு பிடிப்பவன் போல் ஒளவையாரைச் சில நாள் அங்கு இருக்கச் செய்ததும்,
இவ்வாறே, பழையனூர்க் காரி என்னும் வள்ளல், தோட்டத்தில் களை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஒளவை யார் அவன் வீட்டிலிருந்து அங்குச் சென்று போக விடை கேட்கவே, அவரைப் பிரிய மனமில்லாத காரி, தான் ஓரிடத் திற்குச் சென்று விரைவில் வருவதாகவும், வரும்வரை களை வெட்டிக் கொண்டிருக்கும் படியும் ஒளவையாரிடம் களைக் கொட்டைக் கொடுத்துச் சென்று, பொழுது சென்றபின் வந்து, ஒளவையாரை அன்று அங்கேயே இருக்கச் செய்ததும், பழந்தமிழ்ச் செல்வர்களின் தமிழ்ப்பற்றுக்கு, தமிழ்ப்புலவர் களைப் போற்றி வந்த தகுதிக்கு எடுத்துக் காட்டாகும்.
பாரி, காரி என்னும் அவ்விரு வள்ளல்களின் பெருந்தகை மை யினையும்,
" பாரி பறித்த பறியும், பழையனூர்க்
காரியன் றீந்த களைக்கொட்டும்."
என, ஒளவையார் பாராட்டியுள்ளார். என்னே அவ் வள்ளல்களின் தமிழ்ப் பற்றும் தனித்தகைமையும்!
செல்வர்கள் வீடுகள், புலவர்க்கு அடையாக் கதவினை யுடையனவாக இருந்தன. வாயிலோனைக் கேளாமலேயே புலவர்கள் அவ்வீடுகளுக்குட் செல்வர். செல்வர் ஊரிலில்லாத போது, அவர் மனைவியரே பாட்டைக் கேட்டுப் பரிசு கொடுத்து மகிழ்விப்பர். பாட்டின் பொருளுணர்ந்து, புலவரின் தகுதி யறிந்து பரிசு கொடுக்கும் தகுதியுடையராய் இருந்தனர் அக்காலத் தமிழ்ச் செல்வக் குடி மகளிர். தஞ்சை வாணன் என்னும் வள்ளலின் மனைவியார், கணவன் ஊரில் இல்லாதபோது, அவன் மீது பொய்யாமொழிப் புலவர் பாடி வந்த தஞ்சை வாணன் கோவை என்னும் செந்தமிழ் நூலை அரங்கேற்றும்படி செய்து, பாட்டுக்கு ஒன்றாக நானூறு பொற் றேங் காய்ப் பரிசுகொடுத்துப் புலவரை மகிழ்வித்தது இதற்கு எடுத்துக் காட்டாகும்.
இனித் தலைவன் தலைவி இருவரும் ஊரில் இல்லாத போது வேலைக்காரி பரிசு கொடுத்தலும் உண்டு. அத்தகைய தமிழ்ப் பற்றுடைய செல்வக் குடிமக்களையுடைய தமிழ்நாடு இனி ஒருகால் அமையப்பெறுமோ!
இனி, இசை நாடகத் தமிழ்ப் புலவர்களாகிய பாணரும் கூத்தரும் பொருநரும் தம் குடும்பத்துடன் யாழ், குழல், தடாரி, கிணை, மத்தளம் முதலிய இசைக் கருவிகளைச் சுமந்து கொண்டு, ஓர் ஊரைவிட்டு வேறோர் ஊருக்குக் குடி போவாரைப்போல, செல்வர் இருக்கும் ஊரை நோக்கிச் செல்வர். ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ என்பது புறநானூறு (97). செல்வர் இருக்கும் இடத்தை நோக்கி இவர்கள் பழுத்த மரங்கள் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லும் பறவைகள் போலச் செல்வார்கள் என்பதாம்.
தமிழ்ச் செல்வர்கள் இவர்களை அன்புடன் வரவேற்றுப் போற்றுவர். இசைப் புலவர்கள் இன்னிசையால் செல்வரை மகிழ்விப்பர். இசைத் தேனுண்டு அச்செல்வர்கள் இன்புறுவர். இரவில் ஊர்ப் பொது மக்கள் கூடிய கூட்டத்தில் இசையும் கூத்தும் நடைபெறும். பாணர் யாழை மீட்டிப் பாடுவர். பாடினி யரும் உடன் பாடுவர். அவர் தமிழ் மக்களின் செஞ்செவியில் இன்னிசைத் தமிழ்த் தேனை வார்ப்பர். யாழ், குழல், தடாரி, கிணை, மத்தளம் முதலிய இன்னிசைக் கருவி களை இசைப்பர். பாணரும் பாட்டியரும் பாடும் பாட்டின் பொருள் விளங்க விறலியர் விறல்பட ஆடுவர். இதுதான் நடிப்பு அல்லது நாடகம் என்பது. கூத்தரும் பொருநரும் கதை தழுவிய கூத்தாடுவர். ‘கூத்தாட்டவைக் குழாம்’ என்னும் திருக்குறளால், ஊர்ப் பொது மக்கள் கூடிய அவையில் கூத்தாடப் பட்டு வந்ததென்பது விளங்குகிறது. பாணரும் பாட்டியும் கூத்தரும் பொருநரும் விறலியும் நிகழ்த்தும் ஆடல் பாடல்களைக் கண்டுங் கேட்டும் இன்புறுவதோடு, தமிழ்ப் பொது மக்கள் அறிவும் ஒழுக்கமும் அடையப் பெறுவர்.
செல்வர்கள் இவர்கட்கு வெறுக்க வெறுக்க அணியும் ஆடையும் பொன்னும் பொருளும் யானையும் குதிரையும் ஆடும் மாடும் தேரும் பிறவும் கொடுத்துப் பெருமைப் படுத்துவர். இவர்க்குச் செல்வர் கொடுக்கும் பரிசுகளில் பொற்றாமரைப் பூவும், பொன்னரி மாலையும் குறிப்பிடத் தக்கவை. பொற்றா மரைப் பூக்களை வெள்ளி நாரினால் தொடுத்த மாலை யொன்றை ஒரு வள்ளல் கொடுத்ததாக ஒரு புலவர் பாடுகின்றார்.
ஒரு பாணன் பரிசு பெற்று வருவது கண்ட மற்றொரு பாணன், அவனை வேற்றுநாட்டை வென்று வெற்றிக் களிப்புடன் நாற்படை சூழத்திறை கொண்டு வரும் மன்னன் என்று எண்ணி, ‘நீ எந்த நாடு? உன் பெயர் என்ன?’ என்று கேட்க, அப்பாணன், ‘நானும் உன் போன்ற ஒரு பாணனே. அரசன்அல்லன். இன்ன வள்ளலிடம் பெற்ற பரிசில் இது’ என்று கூறும் பழம் பாடல் ஒன்றுண்டு.
கொங்கு நாட்டில் உள்ள கொல்லி மலைத் தலை வனாகிய வல்வில் ஓரி கொடுத்த அளவுக்கு மீறிய ஆடை, அணி, பொன், பொருள் முதலியவற்றால், பாணரும் கூத்தரும் பொருநரும் பாட்டியும் விறலியும், பரிசில் பெற வேறிடம் செல்ல வேண்டிய வேலை இல்லாமற் போனதால், தாங்கற்ற கல்வியையே - ஆடல் பாடலையே - மறந்து விட்டனர் என்று வன்பரணர் என்னும் புலவர் கூறுகின்றார்.
“இன்னியம் கறங்க, ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே.”
என்பது அது. தமிழ் வளர்க்கும் பெருந் தொண்டை மேற் கொண்டும், பரிசு வேண்டியும் பாடி வரும் புலவர்க்குத் ‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் வள்ளுவர் வாய் மொழிப் படி, பிறப்பின் பயனாகிய புகழ் பெறுதலை விரும்பிய தமிழ்ச் செல்வர்கள் வாரி வாரி மாரிபோல் வழங்கி வந்தனர். உள்ளன வெல்லாங் கொடுத்து வறியராய் வாழ்ந்த செல்வர்கள் பலர். கொடுத்துக் கொடுத்து ஏழையான பின் புலவர்க்குக் கொடுக்கப் பொருளின்மையால், ‘இல்லை’ என்று சொல்லல் இழிவென எண்ணி, உயிர்விடத் துணிந்த செல்வர்கள் பலர். கோவை மாவட்டத்துக் கோபி செட்டிப் பாளையத்தை அடுத்த பாரியூர்ச் செட்டிப் பிள்ளையப்பன் என்னும் வள்ளல் புலவர்க்குக் கொடுக்கப் பொருள் இல்லாமையால் புலிக்கு இரையாகத் துணிந்ததும், செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நின்றைக் காளத்தி என்னும் வள்ளல் புலவர்க்கு வழங்க வகையின்மையால் பாம்புப் புற்றில் கைவிட்டு இறக்கத் துணிந்ததும் இதற்கு எடுத்துக் காட்டாகும்.
பத்துப் பாட்டில் ஒன்றான பட்டினப்பாலை என்னும் பாட்டைத் தன்மீது பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் (16,00,000) பொன் பரிசளித்துப் பெருமைப் படுத்தினன் கரிகால் வளவன் என்னும் சோழ வேந்தன் 301 அடிகளை (வரி) உடையது பட்டினப் பாலை, ஓர் அடியின் பரிசு அல்லது விலை ரூ. 5,315 - 8 - 0 ஆகிறது.
அக்காலத் தமிழ்ச் செல்வர் நிலையோடு இக்காலத் தமிழ்ச் செல்வர் நிலையை ஒப்பிட்டு நோக்கினால், நோக்கு வோர் உள்ளம் வெடித்துவிடும் நிலையிலன்றோ உளது? என்னே கரிகால் வளவனின் தமிழ்ப் பற்று! அடிக்கு ஐயாயிரத்து முந்நூற்றுப் பதினைந்தரை ரூபாய்!
இனி, எட்டுத்தொகை என்னும் சங்கநூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து என்பது, சேரமன்னர் பதின்மர்மீது பத்துப் புலவர்கள் பாடிய நூறு பாட்டுக்கள் ஆகும். பத்துப் பாட்டுக் களால் தம்மைப்பாடிய புலவர்க்கு, அச்சேர மன்னர் ஒவ்வொரு வரும் கொடுத்த பரிசிலை நோக்கினால், அன்னாரின் தமிழ்ப் பற்றும், கொடைத் திறனும் நம்மனோரால் எண்ணவும் முடியாத அத்தகு பெருமையுடையனவாக உள்ளன.
தன்மீது இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர்க்கு, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேர மன்னன், உம்பற் காட்டு ஐந்நூறு ஊர்களோடு, 38 ஆண்டு தன்னாட்டு வருவாயுள் பாகமும் கொடுத்துப் பெருமைப் படுத்தினானாம். உம்பற்காடு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சாரலில் உள்ள வளமிக்க ஒரு காட்டுப் பகுதி. உம்பல் - யானை. உம்பல் காடு - யானைக்காடு. யானைமலை என்பது போன்றது இப்பெயர்.
தன்மீது நான்காம் பத்தைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்க்குக் கழங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன், நாற்பது நூறாயிரம் (40,00,000) பொன்னும், தான்ஆள்வதிற் பாகமும் கொடுத்துப் பெருமைப் படுத்தினானாம். இப்பத்துப் பாட்டும் 178 அடிகளே. ஓர்அடியின் விலை அல்லது பரிசு என்ன? அடிக்கு ரூ. 22,528 ஆகிறது. வருவாயில் பாகம் வேறு! இவனது கொடைக் குணத்தின் பொருளே நமக்குப் புலப்படவில்லை.
தன்மீது எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமானுக்குப் பெருஞ்சேரல் இரும் பொறை என்னும் சேரர் பெருமான் கொடுத்த பரிசிலை நினைத்தால் அவனை இன்னன் என்று சொல்வதற்கே இடமில்லாமல் இருக்கின்றது. இத்தகைய தமிழ்ப் பற்றுடைய ஒரு தமிழனும் தமிழ் நாட்டில் இருந்தானா? அத்தகைய தமிழ் மகன் இருந்தாண்ட பழந்தமிழ்ச் சேரநாடு, அச்சேர மன்னன் வழிவந்த தமிழர் மரபு, இன்று தன்னை மறந்து, தன்னினத் தினரான தமிழர்க்கு, தனது முன்னோரின் பெயரைப் பாதுகாத்து வரும் பண்புடையாளர்க்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கவும் மறுக்கிறது. ஆ! எம் அருமைப் பழந்தமிழகமே! நீ ஏன் இந்நிலையை அடைந்தனை? மாறு பாடென்றால் இப்படியா தலைகீழ் மாறுபாடு!
இரும்பொறை கொடுத்த பெரும் பரிசென்ன? எத்தனை நூறாயிரம்? புலவர் பாட்டுக்களைப் படித்துப் பொருள் கூறினார். மன்னன் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான்! எழுந்து உள்ளே சென்றான். புலவர் ஒன்றுந் தோன்றாமல் உட்கார்ந் திருந்தார். சென்ற சேரலர் பெருந்தகை தன் தேவியுடன் வெளியே வந்தான். வந்தவன் புலவரை வணங்கி, ‘பெரியீர்! யான் தங்கள் தமிழுக்குப் பரிசு கொடுக்கும் தகுதியில் இல்லேன்; நான் அன்போடு கொடுப்பதை மறுக்காது ஏற்றருளல் வேண்டும்; கோவிலில் உள்ள எல்லாப் பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள்; அவை யெல்லாம் தங்களுக்குரியவை; இக்கோவிலும் (அரண்மனை) தங்கள் உடைமையே. அதோடு, நான் கையாரக் கொடுக்கும் இதையும் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஒன்பது நூறாயிரம் பொற் காசுகள் கொடுத்தான். அவன் அதோடு அமையவில்லை; வழிவழியாகத் தன் அரச மரபுக்கு உரிமை யுடையதாக உள்ள அரசு கட்டிலையுங் கொடுத்தான்.
இதன் பொருளென்ன? அரசையே புலவர்க்குப் பரிசாகக் கொடுத்தான். அரசையே கொடுத்தானெனில், நாடு, நகரம், வீடு, பொருள் எல்லாம் கொடுத்ததாகுமன்றோ? ஆம். ஒரு பத்துப் பாட்டுக்குப் பரிசாக அவ்வளவும் கொடுத்தான் அக்கோ. அப்பத்துப் பாட்டும் 181 அடிகளே உடையது. என்னே இரும் பொறையின் பெருந் தமிழ்ப் பற்று! இவனே, அறியாது முரசு கட்டிலேறிய மோசிகீரனார் என்னும் புலவர் தூங்கி யெழும் வரைக்கவரி வீசி, ‘கவரி வீசிய காவலன்’ என்ற புகழ்ப் பெயர் பெற்றவன்.
ஆனால், புலவர் பெருந்தகை என் செய்தார்! அரியணை யிலமர்ந்து அரசு புரியத் தொடங்கினாரா என்ன? அத்தகு பண்பு டையவரா அப்பழந் தமிழ்ப் புலவர்? ‘மன்ன, மகிழ்ந்தேன்; உன் தமிழ்ப் பற்றினை மெச்சுகிறேன்: வாழ்க நின் வண்மை! வளர்க நின் தமிழுள்ளம்! இந்தா! எனது அரசை நான் உனக்குக் கொடுக் கிறேன்’ என்று பழையபடி அரசனை அரசனாக்கி, அரசன் வேண்டுகோளுக்கிணங்கி அமைச்சுத் தொழிலேற்றிருந் தார். இத்தகைய செல்வரையும் புலவரையும் நந்தமிழ் நாடு ஒருகால் பெற்று இன்புறுதலும் கூடுமோ!
மறக்குடி மகளிர்
சின்னஞ் சிறுமியர் எப்போதும் தெருவில் விளையாடுவதில் மிகுந்தவிருப்பமுடையவர். தெருவில் மணல் வீடுகட்டிக் கொண்டு விளையாடுவதே அவர்தம் பெரும்பான்மையான விளையாட்டாகும். ‘வெள்ளாட்டுக் குட்டிக்கு வேலி மேலாசை, விளையாட்டுப் பிள்ளைக்கு மண்ணு மேலாசை’ என்பது பழமொழி. அச்சிறுமியர் ஆண்டில் இளையர் எனினும் ஆள்வினையில் முதியர் எனலாம். அவர்கள் வகை வகையான வீடுகள் கட்டித் தெருவில் ஓர் ஊரே உண்டாக்கி விடுவர். அவர்கள் கட்டும் வீடு மணல் வீடு ஆகையால், அவ்வூர் மணலூர் எனப்பெயர் பெறும் போலும்!
“அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்
தரையில் கீறிடில் தச்சருங் காய்வரோ.”
என, அவர்தம் மணல் வீட்டின் வகையினைத் தமது பெருநூலிற் பாராட்டியுள்ளார். கம்பர். ‘மனைக்கு நிகர் என்று சிறு பெண்கள் மணல் வீடு கட்டுவது போலவும்’ என்பது குமரேசர் சதகம்; தெருவில் அச்சின்னஞ் சிறுமியர் கட்டும் அச்சிறு வீடு இங்ஙனம் இலக்கியச் சிறப்பினைப் பெற்று விட்டது.
தமது முயற்சியால் தாம் கட்டிய தம் சொந்த வீட்டில் அவர்கள் தம் பெற்றோரின் வாழ்க்கை முறைகளை அப்படியே செயற்படச் செய்து மகிழ்வர். பெற்றோர்கள் என்னென்ன செயல்கள் செய்கின்றனரோ அத்தனையும் ஒன்று கூட விடாமல் அப்படியே செய்வர் அச்செல்வச் சிறுமியர். தெருவே அச் சிறுமியரின் வாழ்க்கைப் பயிற்சிக் கூடம். படித்துப் பழகுவதினும் பார்த்துப் பழகுதல் சிறந்தது என்பதை அறிந்து செய்யுநர் போலும் அச்சிறுமியர். சிறுமியரின் இச்செயல் திறத்தினை எந்த ஒரு புலவரும் பாட மறந்தாரில்லை. எதிர் காலப்பாட்டுடைத் தலைவியர் இவர்களல்லரோ?
தமிழில் உள்ள தொண்ணூற்றறுவகை நூல்களுள் பிள்ளைத் தமிழ் என்பது ஒன்று. பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் சிற்றிற்பருவம் என்பது ஒன்று. சிறுமியர் தெருவில் மணல் வீடு கட்டிக் கொண்டு விளையாடுவர். அங்குப் போந்த ஒரு சிறுவன் குறும்புத்தனமாக அச்சிற்றிலைக் காலால் சிதைப்பான். சிற்றிலைச் சிதையாதே என அச்சிறுமியர் இன்சொற் கூறி விலக்குவர். அச்சிறுவன் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், ஆண் பிள்ளை என்னும் செருக்கினால் மேலும் சிதைப்பான். சிதைக்காதே சிதைக்காதே என மறுபடியும் அவர்கள் பலவாறு வேண்டிக் கொள்வர். இதுவே சிற்றில் பருவத்தின் இலக்கணம்.
சிற்றிற் பருவம், ஆண்பிள்ளையின் சிறப்புக் கூறுவதாகை யால், அவனது ஆண்மையும் பெருமையும் தோன்ற, ’சிற்றில் சிதையாதே சிதையாதே" எனச்சிறுமியர் பலவாறு அவனை வேண்டிக் கொள்வதாகப் பாடுதலே மரபாகும்.
ஆனால், நாட்டு நடப்பென்ன? சிற்றிலைச் சிதைக்காதே யென்று அச்சிறுமியர் அவனை எவ்வளவு நயந்து கேட்டுக் கொள்ள வேண்டுமோ அவ்வளவு நயந்து கேட்டுக்கொள்வர். அவன் மேலும் சிதைக்கிறான். ‘இனிச் சிதைத்தால் அப்புறம் பாரு’ எனக் கடிந்து கூறுவர். அவன் அதையும் பொருட் படுத்தாது குறும்புத் தனமாகப் பின்னும் சிதைக்கின் அச்சிறுமியர் சினந்து, மண்கொழித்து விளையாடும் முச்சில் என்னும் சிறுமுறத்தை எடுத்துக்கொண்டு துரத்துவர். அவன் அஞ்சி அங்கு நின்றும் ஓடிவிடுவான். ஓடாமல் இருந்தால் முச்சிலால் மொத்துண்ண வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். நாட்டுப்புறங்களில் இன்றும் இது நிகழ்கிறது.
இளம் பருவத்திலேயே தம்மிடம் வம்புக்கு வரும் பகைவனை அஞ்சாது எதிர்த்துப் புறங்காட்டி ஓடும்படி செய்யும் இம்மறப் பண்புதான் எதிர் காலத்தில் அவர்களை மறக்குடி மகளிராகத் திகழும்படி செய்கிறது.
இனி, சிறுமியர் விளையாடும் வீர விளையாட்டொன்று பழங் காலத் தமிழ் மக்களின் மறப்பண்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. என்ன அவ்விளையாட்டு?
எல்லாச் சிறுமியரும் ஒரே வரிசையாக நிற்பர். ஒரு சிறுமி, அவ்வரிசையில் நிற்கும் முதற் சிறுமி முன் சென்று நின்று, ‘இந்தச் சோட்டு வெண்ணெய் போட்டு, இத்தனை மோரூற்றுகிறேன். நரிவந்தால் பயந்துக்காதே’ என்பாள், அம்முதற் சிறுமி, ‘இல்லை’ என்று நிமிர்ந்து நின்று, தலையை நேராக உயர்த்தி, தன் உயிராற்றல் முழுவதையும் கண்ணில் செலுத்தி விழித்த கண் விழித்தபடி, எழுதிய உயிரோவியம் போல் எச்சரிக்கையாக நிற்பாள். முன்னிற்கும் சிறுமி, ‘உஃப்’ என்று இவள் கண்ணுக்கு நேராக ஊதுவாள். இவள் கண்ணை இமையாமல் இருந்தால் வீரர்கள் வரிசையில் அமர்த்தப் படுவாள்; ஊதும்போது கண்ணை இமைத்தால் கோழைகள் வரிசையில் இருத்தப்படுவாள். இவ்வாறே எல்லோ ரையும் ஊதிப்பார்த்தபின், வீரர்களைப் பாராட்டுவர்; பரிசு கொடுத்துப் பெருமைப் படுத்துவர்; கோழைகளை இகழ்ந்து தூற்றுவர். தோற்றவர் மறுமுறை வெற்றி பெற முயல்வர். இவ் விளையாட்டு,
“விழித்தகண் வேல்கொண் டெறியின் அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.”
என்னும் குறளின் கருத்தை விளக்கும் வீர விளையாட்டாகும். பகைவர் மார்புக்கு நேராக ஓங்கி வேலால் குத்தினால் அதற்கு அஞ்சி, விழித்த கண்ணை இமைத்தால் - கண்ணே மூடினால் - அவ்வச்சம் வீரர்களுக்குப் புறங்காட்டி யோடுதல் போன்றதேயாகும். அவ்வாறு எதிரி எறியும் வேலைக்கண்டு அஞ்சக் கூடாது. அஞ்சுதல் வீரர்க் கழகாகாது. இது ‘படைச் செருக்கு’ என்னும் அதிகாரத்தில் உள்ள குறள்.
வெண்ணெயும் மோரும் - வீரர்கள் பெரும் வெற்றிப் புகழும் பாராட்டும் பரிசும் ஆகும். ஊதுதல் - பகைவர் வெகுண்டு எறியும் கூர்வேல் ஆகும். இது வள்ளுவர் குறட் கருத்தை விளக்கி விளையாடிய வீர விளையாட்டா? அல்லது பழந்தமிழ்ச் சிறுமியர் விளையாடி வந்த இவ்வீர விளை யாட்டை வள்ளுவர் குறளாகச் செய்து வைத்தனரா? எதுவாயினும் சிறப்புடையதே யாகும்.
இவ்விளையாட்டு, சிறுவரும் விளையாடினும், சிறுமியர் விளையாடுதலே பெரும் பான்மையாகும். இத்தகைய வீர விளையாட்டுகள் விளையாடிப்பழகி, பழக்கம் வழக்கமாகி, வழக்கம் ஒழுக்கமாகி, மறக்குடி மகளிராய் விளங்கிய பழந் தமிழ்த் தாய்மார்களே, பழந்தமிழ் மக்கள் வீரத்திற் சிறந்து விளங்கியதற்குக் காரணமானவர்.
ஆண்மக்கள் மறப்பண்புடன் விளங்குதல் இயல்பு. ஆனால். மெல்லியலாராகிய பெண்கள் மறப்பண்புடன் விளங்குதலே சிறப்புடைய தொன்றாகும். மகளிர் மறப் பண்புடன் விளங் கினாற்றான் அவரால் வளர்க்கப்படும் மக்கள் மறப்பண்புடையராய் விளங்குதல் எளிதில் கை கூடும். பழந்தமிழ்ப் பெண்டிர்கள் வீரமே உருவாக விளங்கினார் என்பது தொல்காப்பியம், புறநானூறு முதலிய பழந்தமிழ் நூல்களில் படித்தறிந்து இன்புறு கிறோம். மகளிர் வீரம், இல்லாள் முல்லை, மூதில் முல்லை என்னும் துறைகளாக அம்முது நூல்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. வாழ்க மகளிர் மறப்பண்பு!
ஆனால், அம் மறக்குடி மகளிரின் வழிவந்த, அவர்தம் மரபினரான இக்காலத் தமிழ்ப் பெண் மணிகளின் மறப்பண்பு எந்நிலையில் உள்ளது? இக்கால மகளிர் எத்தகைய வீரமுடை யவர்களாய் விளங்குகின்றனர்? ‘வீரம் என்ன சார்விலை யென்றாச்சு’ என்று ஒரு புலவன் எள்ளி நகையாடும் அத்தகு இரங்கத்தக்க இழிநிலையில் இருந்துவருகின்றனர். சருக்கென்றால் விருக் கென்பதே இன்றைய மகளிரின் மறப்பண் பாகும். ஏன் இந்த இழிநிலை? வாளேந்திக் களம்புக்கு மகன் பிணங்கண்டு மகிழ் வெய்திய மறமூதாட்டியின் வழித் தோன்றல்களுக்கா இந்நிலை? காரணம் என்ன? தமிழர் தம்பழமையை மறந்ததே இரங்கத் தக்க இவ்விழி நிலைக்குக் காரணமாகும்.
வீரம் என்பது கொலைக்கு வழிகோலும் குணமாகை யால், அது சிறப்புடைய தன்றென்பார் அறியார். பாம்பு தேள் முதலிய நச்சுயிர்களை எதனால் கொல்கின்றனர்? வீரத்தினாலா? அச்சத்தினா லன்றோ அவற்றைக் கண்டதும் கொல் கொல் என்கின்றனர்? இங்கு அச்சமும் கொலைக்கு வழி கோலுகின்ற தன்றோ? கோழைத்தனம் இன்றி உள்ளத்துறுதியுடன் விளங்குவதே வீரப்பண்பாகும்.
வீரத்தைப் பெருமிதம் என்றும், அது எண்வகை மெய்ப் பாட்டினுள் ஒன்றென்றும், கல்வி, தறுகண், புகழ், கொடை என்பனவற்றால் பெருமிதம் என்னும் சுவை தோன்றும் என்றும் கூறுகிறார் தொல்காப்பியர்.1 தறுகண்மை - அஞ்சாமை; சிறந்த கல்விப் பெருக்காலும், அஞ்சாமையாலும், மிக்க புகழெய்தியக் காலும், மிகு கொடையினாலும் வீரப்பண்பு தோன்றும் என்பதாம். கோழைத்தனமின்றி, மேம்பாடு பொருந்திய உள்ளத்துடன் இருத்தலே மறப் பண்பாகும்.
தற்காலத் தமிழ்ப் பெண்மணிகள், பகலில் தனியாக வெளிச் செல்லவும் அஞ்சுகின்றனர்; இரவில் வீட்டுக்குள் இருந்து தனித்து வெளிவர வெருவுகின்றனர்; அச்சமும் கோழைத்தனமும் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால், தொல்காப்பியர் காலத் தமிழ்ப் பெண்மணிகள் தனியாகப் போர்க்களஞ் சென்று, பிணக்கு வியலைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து, அப்பிணங்
களுக்கிடையே இறந்து கிடக்கும் தம் வீர மைந்தரையும் கணவரையும் தேடி யெடுத்து, அவர்கள் மார்பிலும் முகத்திலும் உள்ள விழுப்புண்களைக் கண்டு களித்து மீண்டனராம். பகலிலேயன்றி இரவிலும் அம்மறக் குடி மகளிர் போர்க்களஞ் சென்று, பிணக் குவியலைக் கலைத்துத் தம் கணவர் உடலைத் தேடியெடுத் தனராம்.2 என்னே அவர்தம் தறுகண்மை!
ஒருநாட் காலையில் போர் முரசு முகிலென முழங்கிற்று; வாள் வீரரும் வேல் வீரரும் தெருவில் வரிசை வரிசையாகச் சென்றனர். யானைகளும் குதிரைகளும் அழகிய தேர்களும் அணியணியாகச் சென்றன. அந்நாற்படையின் ஆர்ப்பொலி கடலொலியென ஆர்த்தது. கொடிகள், வீரர்களின் உடற்றசை யுண்ண விரைந்து செல்லும் கழுகு முதலிய பறவைகள் போலப் பறந்து சென்றன.
ஒரு வீரத்தாய் தெருவில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தன் சிறுவனைக் கூப்பிட்டாள். அவன் ‘ஏம்மா!’ என்று ஓடி வந்தான்.
‘குழந்தாய்! பகைவர் நம் நாட்டின்மேல் படையெடுத்து வந்துள்ளனர். நாட்டில் போர் நடக்கிறது. அவர்களெல்லாம் வாளையும் வேலையும் ஏந்திக்கொண்டு தம் கடமையைச் செய்யச் செல்கின்றார்கள். நம் தாய் நாட்டுக்குக் கேடு சூழ்ந்துள்ள போது நாம் நம் கடமையைச் செய்ய வேண்டாமா? நாட்டுத் தொண்டு செய்வது தானே நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இன்றியமையா முதற் கடமை? நாடு வாழ நாம் வாழ்வது தானே முறை? யார் இருக்கிறார் நமக்கு? உன் தந்தை இருந்தால்?’ - எனத் தழுதழுத்த குரலில் கூறினாள் அம்மறக்குடி மங்கை . அவள் கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் உதிர்ந்தது. தாய் நாட்டுக்கு உதவ முடியவில்லையே என்று கலங்கிக் கண்ணீர் விடும் தாய்மார்கள் உடையதாய் இருந்தது அக்காலத் தமிழகம்.
‘ஏம்மா! நான் இல்லை? நான் போகிறேன் போருக்கு; எதற்காக அழுகிறாய்?’ என்று அன்னையின் கண்ணீரைத் துடைத் தான்அக் கான்முளை.
‘என் கண்ணே! வேலும் வாளும் விளையாடும் அவ் விடத்தில் நீ போய் என்ன செய்வாய்? அது என்ன விளையாடும் இடமா?’
‘போம்மா போ!நான் என்ன பூனைக்குட்டியா? மறத் தமிழர்வழி வந்த என்னை வாளும் வேலும் என்ன செய்யும்? வாளையும் வேலையும் கண்டு அஞ்சுபவன் ஓர் ஆண் பிள்ளையா? நான் யார் பெற்ற பிள்ளை யென்பதை நீ மறந்து விட்டுப் பேசுகிறாய்?’
‘என் மரபை விளக்க வந்த மாணிக்கமே! நீ அஞ்சாத நெஞ்சுடைய ஆண்பிள்ளைதான்! ஆனாலும், நீ சிறுபிள்ளை யல்லவா?’
‘ஏம்மா!’ நான் சிறு பிள்ளையாய் இருந்தாலென்ன? போர்க்களம் சென்றறியாத என்போன்ற மறக்குடிச்சிறுவர்கள் போர்க்களம் சென்றுவீரப்போர் புரிவர். அப்பிள்ளைகள் செய்யும் அவ்வீரச் செயல் பிள்ளை நிலை என்னும் துறை யாகும் என்கின்றார் தொல்காப்பியர். ‘நமது முன்னோர்கள் அத்தகு வீரச் சிறப்புடன் விளங்கி வந்தார்கள்’ என்று நம்ம பாட்டி சொல்ல வில்லை? நான் ஏன் அவர்கள் போலப் போர்க்களம் சென்று போர் புரிந்து, பிள்ளை நிலை என்னும் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடாது? ஏம்மா! நீ கூட, நம்ம அரசனான பாண்டியன் நெடுஞ்செழியன், என் போலச் சிறுவனாக இருந்தபோது, தலையாலங்கானம் என்னும் இடத்தில் நடந்த போரில் பகைவரை வென்று, அதனால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் எனப் பெயர் பெற்றான் என்று அவன் வீர வரலாற்றைச் சொல்லவில்லை? நான் அவன் நாட்டுக் குடிமகன் அல்லனோ? எடு வேலை!’
‘என்செந்தமிழ்ச் செல்வமே! உன்வீரவுரை என் மனக் குறையை மாற்றிவிட்டது’ என மகனை இறுகத் தழுவிப் பல முத்தங்கள் தந்து, ‘உன்னை மகனாகப் பெற்ற நானே பெற்றவள் என்னும் பேருக்கு உரியவள்’ என அவனைப் பெற்ற நாளிலும் பெரிது உவந்து, எண்ணெய் தடவி, விரிந்து சுருண்டு கிடந்த தலைமயிரை வாரி முடித்து, பூச்சூடி, பொட்டிட்டு வெள்ளுடை யுடுத்து, மறுபடியும் பல முத்தங்கள் தந்து, ‘என் கண்ணே! நம் நாட்டுக்கு நலிவு செய்யும் பகை வரைப் புறங்கண்டு வெற்றிவீரனாக மீள்க’ என வாழ்த்தி வேல்கை கொடுத்தாள் அவ்வீரத்தாய். வேலை வாங்கித் தோளில் வைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் புலிக்குட்டி போலப் போர்க்களம் நோக்கி நடந்தான் அவ்வீரச் சேய்.
இவ்வீரக் காட்சியைக் கண்டு களித்த வண்ணம் தெருவில் நின்று கொண்டிருந்த குதிரை வீரன் ஒருவன், ‘ஏம்மா! என்ன இது? பத்தாண்டு கூட நிரம்பாத இச்சிறுவனையா போருக்கனுப்புவது? உன் நாட்டுப் பற்றுக்கு எல்லையே இல்லை போலும்! இவன் போர்க்களம் சென்று என்ன செய்வான்?’ என்று இரக்கத்தோடு கேட்டான்.
‘ஏய்யா! என் வேல் பகைவர் உடலில் பாயாதா?’
‘பாயும்! உன் வீர உரையே என் மார்பைப் பிளந்து விட்டது. உன் வேல் . . . . . .!’
‘ஐயா! முதல் நாட்போரில் பெரிய யானைப் படையை வென்று வெற்றி வீரனாக என் அண்ணன் இறந்துவிட்டார்; நேற்று நடந்த போரில், பகைவர்கள் கவர்ந்து சென்ற பெரிய ஆநிரையை மீட்டு இவன் தந்தை ஆங்கு இறந்துவிட்டார்; எங்கள் குடும்பத்தில் இருப்பவர் இனி நாங்கள் இருவருந்தான்; எங்கள் தாய்நாட்டுக்கு நாங்கள் எங்கள் கடமையைச் செய்ய வேண்டாமா? இவனையும் அழைத்துச் செல்லுங்கள்.’
‘அம்மா! உங்கள் நாட்டுப் பற்றை மெச்சுகிறேன். ’மறக்குடி மங்கை’ என்னும் பெயர் உங்களுக்கே தகும்; உங்கள் போன்ற தாயையும் சேயையும் உடைய நாடுதான் நன்னாட்டின் முன்னாட்டும் நன்னாடாகத் திகழும். உங்கள் வீரம் வாழ்க! உங்கள் மறப் பண்பை, வீர உணர்ச்சியை நம் தமிழ் மக்கள் எல்லோரும் பெறுக!’ என்று கூறி, அச்சிறுவனையும் குதிரை மேல் ஏற்றிக் கொண்டு போர்க்களம் நோக்கிச் சென்றான் அவ் வீரன். தன் வீர மகன் போர்க்களம் நோக்கிக் குதிரை மேல் செல்லும் காட்சியை இமையிமையாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் அவ்வீரத்தாய்.1
மறக்குடி முதியாள் ஒருத்தி, பகைவரை வென்று, ‘வெற்றி வீரனாக வருக’ என வாழ்த்தித் தன் மகனைப் போருக்கு அனுப்பி யிருந்தாள். பகைவரைப் புறங்கண்டு வெற்றிக் களிப்புடன் வருவான் என்று மகனது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் அந்நரை மூதாட்டி.
ஆனால், நடந்ததென்ன? ஒரு வீரன் வந்து, ‘அம்மா! நின்மகன் புறங்காட்டி ஓடி விட்டான்’ என்றான். அது கேட்ட அம்முதியாள் கொதித் தெழுந்தாள். ‘அட பாவி! இதற்கா நான் உன்னைப் பெற்றுப் பெருமையாக வளர்த்தேன்? நான் ஊட்டிய வீர உணர்ச்சி யெல்லாம் எங்கே போய் ஒளித்தன? அந்தோ! வழிவழியாக வந்த என் மறக்குடிக்கு மாசுண்டாக்கி விட்டனையே! இனி நான் என் செய்கேன்; எவ்வாறு பிறர் முகத்தில் விழிப்பேன்? அட பதரே! இது எனக்கு மட்டுமா மானக்கேடு? இல்லை இல்லை. தமிழினத்திற்கே மானக்கேடு! தமிழ் நாட்டிற்கே மானக்கேடு.’ ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஓர் அரிசி பதம்’ என்பதுபோல, நீ ஒருவன் போதுமே தமிழர் பெருமையைக் கெடுக்க? அட கோழையே! நீ எங்கிருந்து வந்து எனக்கு மகனாய்ப் பிறந்தனை? ஐயோ! பெற்ற வயிறு பற்றி எரிகிறதே!
‘அட பேதையே! உன் தந்தையின் நடுகல்லை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துக் களித்ததன் பயன் இதுவா? அடபேடி! அக்கல்லில் செதுக்கியுள்ள அவர்தம் வீரதீரங்களைப் படித்து படித்து மகிழ்ந்த உனக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது? உன் உயிர் என்ன அவ்வளவு பெரிதா? அட மானங்கெட்டவனே! அவர் வீரப் பரிசாகப் பெற்ற ஏனாதி மோதிரத்தை அணிந்து அணிந்து பார்த்ததன் பயனா இது? அடப் படுபாவி! நீ கருவிலேயே அழிந்தொழிந்து போயிருந்தால் இன்று தமிழர் மானம் பறி போயிருக்காதே! அட போருக்கு அஞ்சிப் புறங்காட்டியோடும் கோழையே! நீயும் ஒரு தமிழனா!’ எனக் கடுஞ்சினங் கொண்டாள்.
‘உண்மையில் அவன் புறங்காட்டி ஓடியிருப் பானானால், அவன் பாலுண்ட இம்மார்பை அறுத்தெறிவேன்’ என வஞ்சினங் கூறிக்கொண்டு ஒருவாளை எடுத்தாள்; போர்க்களம் நோக்கி விரைந்து நடந்தாள்; அங்கு இறந்து கிடக்கும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்; தன் வீர மகன், வாளும் வேலும் அம்பும் பட்டு மார்பு சிதைந்து, கை கால்கள் துண்டிக்கப்பட்டுக் கிடக்கக் கண்டாள்; கண்டதும் அவனைப் பெற்றபோது உவந்ததை விடப் பெரிது உவந்தாள்; வெற்றிக் களிப்புடன் வீடு வந்து சேர்ந்தாள்.1 தன் மகனது வெற்றிப் புகழைக் கண்டால், ஈன்ற பொழுதிற் பெரிது உவக்காமலா இருப்பாள்? வாழ்க அத்தமிழ் மூதாட்டியின் மறப் பண்பு!
யானே கள்வன்
காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழர் தலை நகரங்களில் ஒன்று. மற்றொன்று உறையூர். காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் இருந்ததால் இது காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் பெற்றது. இது புகார், பூம்புகார் எனவும் வழங்கப்பெறும். புகார் சீரும் சிறப்பும் பொருந்திய செல்வமிக்க செழுநகரம். இது ஒரு சிறந்த துறைமுகப் பட்டினம். சோழர் தம் கடல் வாணிகச் சிறப்புக்கு இப்புகார் நகரே காரணமாகும். மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் எனப் புகார் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதன் சிறப்பினைச் சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப் பாலை என்னும் பழந்தமிழ் நூல்களில் பரக்கக் காணலாம்.
பத்துப்பாட்டினுள் பொருநராற்றுப் படை, பட்டினப் பாலை என்னும் நூல்களின் பாட்டுடைத் தலைவனான கரிகால் வளவன் பிறப்பிடமும், சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் செந்தமிழ்க் காப்பியங்களின் கதைத் தலைவர்களான கோவலன், கண்ணகி, மணிமேகலை என்பாரின் பிறப்பிடமும் இப்புகார் நகரேயாகும்.
கோவலன் என்பான், சோழ மன்னனை முதலாக வைத்தெண்ணப்படும் அத்தகு செல்வக் குடிகளில் முதற் குடியினன் ஆவான். இவன் மாசாத்துவான் என்பானின் மகன்; உயர்ந்தோங்கு செல்வமுடையவன். அவன் தீய வழியில் செல்வ முழுவதையும் தொலைத்து வறியனானான்.
எத்தனையோ தமிழ்ச் செல்வர்கள், கெட்ட வழியில் தம் செல்வ முழுவதையும் தொலைத்துவிட்டு வாழ வழியின்றி, மனைவி மக்களைத் தாய் நாட்டில் தவிக்க விட்டு விட்டு, ஒருவருக்கும் தெரியாமல், யாருடனும் சொல்லாமல் இலங்கை, மலேயா முதலிய வெளி நாடுகளுக்கு ஓடி விடுவது போலவே, கோவலனும் அரசறிய வீற்றிருந்த வாழ்வையிழந்து, அத்தகுவறிய நிலையில் தன் சொந்த ஊரில் இருந்து வாழ விரும்பவில்லை; யாரிடமும் சொல்லாமல் ஒருவரும் அறியாமல், இரவோடிர வாய்த் தன் பிறந்தகமான பூம்புகாரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, பாண்டி நாட்டின் தலை நகரான தண்டமிழ் மதுரையை அடைந்தான். ஆனால், இவன் கற்பின் செல்வியாகிய மனைவி கண்ணகியுடன் சென்றடைந்தான்.
மதுரையை அடைந்த கோவலன், மாதரி என்னும் இடைக்குல முதுமகள் வீட்டில் கண்ணகியை இருக்கச் செய்து, அவள் காற்சிலம்பொன்றை விற்றுவரக் கடைத் தெருவுக்குச் சென்றான். எதிரில் ஒரு பொற்கொல்லன் வந்தான். கோவலன், தன் சிலம்பை விற்றுத் தரும்படி அப்பொற் கொல்லனிடம் கூறினான்.
அரண்மனைச் சிலம்பொன்றை விற்றுண்டு விட்டு, அது களவு போய்விட்டதென்று பொய் கூறிய அப்பொற் கொல்லன், கோவலனைக் காட்டிக் கொடுக்க முடிவு செய்தான். தமிழினம் என்னும் நல்ல மரத்தில் தோன்றிய புல்லுருவி போன்ற அவ்வஞ்சகன், கோவலனை அழைத்துப் போய்த் தன் வீட்டண்டை இருக்கச் செய்து, அரசனிடம் கேட்டு வருவதாக அரண்மனையை நோக்கிச் சென்றான்.
சென்றவன் அரசனை வணங்கி, ‘தென்னவர் கோவே! நம் அரண்மனைச் சிலம்பு திருடிய கள்வன் கையுங் களவுமாகப் பிடிபட்டான்; அவன் என் வீட்டண்டை இருக்கிறான்; இது செய்தி உரைக்கவே வந்தேன்’ என்றான்.
கோப்பெருந்தேவி, கணவன்பால் ஊடல் கொண்டிருந் தாள்; அம் மன வேறுபாட்டைத் தலைநோய் என்று காரணங் காட்டிப் படுத்திருந்தாள். பாண்டியன் நெடுஞ்செழியன், அரசியின் ஊடல் தீர்க்கச் சென்ற விரைவில், ஊர்க் காவலரை அழைத்து, ‘இவன் சொல்லுகிறவனிடம் அரண்மனைச் சிலம்பு இருக்கின், அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக’ என்று கூறிச் சென்றனன். ஊர்க்காவலர், கோவலனை வெட்டிக் கொன்று விட்டுச் சிலம்பைக் கொண்டுபோய் அரசனிடம் கொடுத்துச் சென்றனர்.
மாதிரி வீட்டில் இருந்த கண்ணகி, கணவன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுப் பொங்கி யெழுந்தாள்; விழுந்தாள்; தலைவிரி கோலமாய் எழுந்திருந்தாள்; செங்கண் சிவப்ப வாய்விட்டுக் கதறியழுதாள்; அந்தோ! என் ஆருயிரே! என எழுந்தாள்; கண்ணீரும் கம்பலையுமாய்த் தனது மற்றொரு சிலம்பினைக் கையிலேந்திக் கொண்டு, கோவலன் கொலை யுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.
‘முறையில்லாத அரசனுடைய ஊரில் வாழும் பத்தினிப் பெண்டிர்காள்! இது எனது மற்றொரு சிலம்பு. என் கணவன் கள்வன் அல்லன்; என் காற்சிலம்பின் விலையைக் கொடாமல் தாமே வைத்துக் கொள்ளுதற்காகக் கள்வனென்று பெயரிட்டு என் கணவனைக் கொன்று விட்டார்கள்; ஐயோ! இனி நான் என் செய்வேன்?’ என்று அழுது கொண்டே சென்று கொலையுண்டு கிடக்கும் கோவலனைக் கண்டாள்.
கண்டதும் ஓடி விழுந்து, கணவன் உடலைத் தழுவிக் கதறியழுதாள். கண்ணகியின் கடுந்துயர் காணப் பொறாத வனாய்க் கதிரவன் மறைந்தான். கண்ணகி அழுகை மாறி வீரவுருக் கொண்டாள்; ‘காரணமில்லாமல் என் கணவனைக் கொன்ற அக் கொடுங்கோலனைக் கண்டு காரணங் கேட்பேன்’ என்று எழுந்தாள்; அரண்மனையை நோக்கி நடந்தாள்.
கண்ணகி அரண்மனை வாயிலை அடைந்து, தன் வருகையை மன்னனிடம் கூறும்படி வாயிலோனிடம் கூறினாள். வாயிலோன் சென்று மன்னனிடம் கூறினான். அவன் ‘அழைத்து வருக’ என, வாயிலோன் வந்து அழைத்துப் போனான். கண்ணகி கண்ணீர் வடியும் கண்ணுடன் சென்று பாண்டியனைக் கண்டாள். பாண்டியன், “நீர்வார் கண்ணுடன் இங்கு வந்த நீ யார்?” என்றான்.
‘தேரா மன்னா! உலகம் வியக்கும் வண்ணம் ஒரு புறாவுக்காகத் தன் உடலையே தராசுத் தட்டில் வைத்து நிறுத்து, அப்புறாவைக் கொல்ல வந்த பருந்துக்குக் கொடுக்கத் துணிந்த பெரியோனும் தானே வந்து தேர்க்காலில் விழுந்திறந்த ஓர் ஆன் கன்றிற்காகத் தன் மகனையே கொன்ற நல்லோனும் ஆண்ட புகார் எனது ஊர்; வாழ்வதற்காக நின் நகர் புகுந்து, என் காற்சிலம்பை விற்கவந்து, உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயர்’ என்றாள் கண்ணகி.
‘பெண்மணி, கள்வனைக் கொல்லுதல் எவ்வாறு கடுங்கோலாகும்? அது அரசியல் முறையேயாகும்.’
‘அறநெறி தவறிய அரசனே, என் கணவன் கள்வன் அல்லன்; என் காற் சிலம்பின் பரல் மாணிக்கம்; உடைத்துப் பாரும்.’
‘அப்படியா! எமது சிலம்பின் பரல் முத்து’ என்று கண்ணகி காற் சிலம்பைக் கொண்டு வரச் செய்து, அவளிடம் கொடுத்தான் பாண்டியன். கண்ணகி அச்சிலம்பை வாங்கி உடைத்தாள். அதனுள் இருந்த மாணிக்கங்கள் செழியன் முகத்தில் தெறித்தன.
மணிகண்ட மன்னன் திடுக்கிட்டான்; உளம் நடுங்கினான்; உரை குழறினான்; உணர்வு கலங்கினான்; உயிர் நலங்கினான்; ‘என் கொற்றக் குடை தாழ்ந்தது; என் செங்கோல் வளைந்தது; ஒரு பொற் கொல்லன் சொல்லைக்கேட்டு, ஆராயாது ஒருவனைக் கொன்ற யானோ அரசன்? இல்லை இல்லை. யானே கள்வன்! என்று தோன்றியதோ அன்று முதல் இன்றுவரை பிழையாத பாண்டியர் ஆட்சி முறை என் முதற் பிழைத்தது; கோவலன் கள்வனா? இல்லை. அவன் கள்வன் அல்லன். யானே கள்வன் ஆம், யானே கள்வன். கெடுக என் ஆயுள்’ என்று பாண்டியன் மயங்கி வீழ்ந்தான். அவன் உயிர் பிரிந்தது. பிரிந்த அவ்வுயிர், பாண்டியன் வளைத்த கொடுங்கோலை நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது.
என்னே செழியனின் செங்கோன்மை! ‘கோலஞ்சி வாழும் குடி’ என்பதற்கு மாறாகவன்றோ உள்ளது இவ்வழுதியின் செயல்? கோலஞ்சி வாழவா? இவன் கோலஞ்சி உயிரையல்லவோ விட்டு விட்டான்? உயிர்நீத்து முறைகாத்த இவனன்றோ மன்னன்? அரசன், காவலன், புரவலன் என்னும் சொற்களுக்கு இவனன்றோ நேர் பொருளாவான்? தமிழர் செங்கோன்மை எத்தகையது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டி, தமிழர் பெருமையை கல்மேல் எழுத்துப் போல் நிலை நாட்டியவன் இவனன்றோ? கொடுங்கோலுக்கஞ்சி உயிர் விட்ட அச்செயற் கருஞ் செயலின் அறிகுறியாகத் தமிழ் மக்கள் இவனை அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்றழைத்தனர்.
உண்மை தெரிந்ததும், ‘யானே கள்வன்’ என்று தன் தவற்றை ஒப்புக் கொண்ட செழியனின் செம்மைதான் என்னவோ! இதுவன்றோ ஆண் மகற்கழகு! இது வன்றோ மானமுடையோன் செயல்! இங்ஙனம் ‘யானே கள்வன்’ என்று தனது தவற்றை ஒப்புக் கொள்ளாதிருக்கின், இன்று அவனைக் கொடுங்கோலன் என்று உலகம் பழிக்குமன்றோ? உலகப் பழிக்கு நாணி, உயிர்விட்டுப் புகழ் பெற்ற நெடுஞ் செழியனின் செயற்கருஞ் செயலை நினைக்க நினைக்க நெஞ்சம் வெடித்து விடும்போலன்றோ இருக்கிறது.
ஒருவன் தான் செய்த தவற்றைப் பொறுக்க முடியா விட்டால், கிணறு குட்டையில் விழுந்தோ, நஞ்சுண்டோ, கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டோ, வெடியால் சுட்டுக் கொண்டோ தற்கொலை செய்து கொள்ளுதல் நாட்டு நடப்பு. வடக்கிருத்தல் என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதலும் வழக்கம். ஆனால், தான் செய்தது தவறு என்று கண்டதும், தான் செய்த குற்றம் தனது மரபுக்கே, தமிழ் மரபுக்கே இழுக்குடையதென்று கண்டதும், ‘கெடுக என் ஆயுள்’ எனக் கூறி உயிர்விடுவதென்பது செயற்கரிய செயலினும் செயற்கரிய செயலன்றோ? நோய் நொடி இல்லாமல் நன்னிலையில் இருந்த ஒருவனது உயிர் உடல் விட்டுப் பிரிய வேண்டுமானால், தான் செய்த தவற்றை அவன் எண்ணிய எண்ணத்திற்கு எதை உவமை சொல்வது? வாழ்க நெடுஞ் செழியன் வண்புகழ்!
செழியனின் இச்செயற்கருஞ் செயலைத் தமிழ் மக்கள் அன்றே மனமாரப் பாராட்டினர். நெடுஞ்செழியன் ஆராயாது கோலவனைக் கொன்றது குற்றமென உணர்ந்ததும் அரசு கட்டிலில் துஞ்சிய செய்தியைத் தண்டழிழாசான் சாத்தனார் சேரன் செங்குட்டுவனுக்கு உரைத்தார். அதுகேட்ட செங் குட்டுவன் யாது கூறினான்? ‘பாண்டியன் நெடுஞ்செழியன் முறை தவறிவிட்டான்; வளையாத செங்கோலை வளைத்து விட்டான்; ஆராய்ந்து பார்க்காமல் குற்றமற்ற கோவலனைக் கொன்று விட்டான் என்னும் பழிச் சொல், என்போன்ற அரசர்களின் செவியில் வந்து புகுவதற்கு முன், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததும் பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்விட்டான்; அவன் ஆராயாது தவறு செய்து வளைத்த கொடுங்கோலை, அவன் உடம்பினின்று பிரிந்து சென்ற உயிர் நிமிர்த்திச் செங்கோல் ஆக்கியது என்னும் புகழ்ச் சொல் புகுக என்று அவன் உயிர் விட்டான்’ என்று நெடுஞ்செழியனின் நேர்மையைப் பாராட்டினான். ஆராயாது கொன்றுவிட்டான் என்னும் பழிச்சொல் புகுமுன் உயிர்விட்டு முறைகாத்தான் என்னும் புகழ்ச்சொல் புகுக என்று உயிர்விட்டானாம். ஆம், செங்குட்டுவன் சொல்வது உண்மை தான். இல்லையேல் பாண்டியன் உயிர்விடுவானா?
பிற மன்னர்கள் செவியில், பாண்டியன் முறை தவறி விட்டான் என்னும் சொல் புகு முன், அவன் உயிர்விட்டு முறைகாத்தான் என்னும் சொல் புகுக என்று பாண்டியன் உயிர்விட்டானாம். எத்தகைய பொருள் பொதிந்த பொன் மொழி! செங்குட்டுவன் செங்கோன்மையின்பால் வைத்திருந்த மதிப்பின் அளவுதான் என்னவோ! பழந்தமிழ் வேந்தர்கள், ‘அரசர்கள் முறை தவறினார்’ என்பதை எவ்வளவு அழுத்தமாக வெறுத்து வந்தனர் என்பதற்குச் செங்குட்டுவன் சொல்லே சான்று பகர்கின்றதன்றோ?
செங்குட்டுவனைப் போலவே சோழவேந்தனும், பிற சிற்றரசர்களும் பாராட்டியிருப்பர் என்பதில் ஐயமென்ன? நெடுஞ்செழியனின் செயல், பிற அரசர்களின் செவியில் புகுந்து நெஞ்சையடைந்து ஆங்கு நிலைபெற்றிருக்கு மன்றோ? பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்ற மானமும் பொறுப்புணர்ச்சியும் கொடுங்கோலுக்கஞ்சும் குணமும் உடையவரே ஆள்வோராகத் தகுதியுடைய வராவார்.
கண்ணகி வழக்குரைத்தபோது கோப்பெருந்தேவியும் அங்கு இருந்தாள். அவள் அரசற்குப் பக்கத்தில் அமர்ந்திருந் தாள். கண்ணகியின் கருத்துரைகளை அவள் கருத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். கண்ணகி தன் காற் சிலம்பின் பரல் மாணிக்கம் என்றாள். பாண்டிமாதேவி மனம் மருண்டாள். கண்ணகி சிலம்பை உடைத்தாள். தேவி மனம் உடைந்தாள். மணிகண்ட மன்னன் மயங்கி வீழ்ந்தது கண்ட அவள் ஆ! என்றெழுந்தாள்; உள்ளங் குலைந்தாள்; உடல் நடுங்கினாள்; ஓவென்று கதறி அழுதாள்; கணவனுடைய அடிகளைத் தொழுதவண்ணம் தரையில் விழுந்தாள்; தன் உயிர்கொண்டு அவனுயிர் தேடுவாள் போல உடன் உயிர் நீத்தாள்.
கணவனும் மனைவியும் ஈருடல் ஓருயிராக ஒரு மனப்பட்டு வாழ்ந்து வந்ததால், கணவன் உயிர் பிரிய மனைவி உயிரும் உடன் பிரிந்துவிட்டது. இது தலையன்பு எனப்படும். கணவன் இறந்ததும் உடன் இறவாத கற்பரசி கண்ணகி அன்பு இடையன்பு எனப்படும்.
மன்னவனுடன் வழக்காடித் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மெய்ப்பித்து, அவனை மாசற்றவனாக்கிய கற்பரசி கண்ணகியின் திறத்தைப் போற்றுவதா? ஆராயாது கோவலனைக் கொன்ற குற்றத்திற்கஞ்சி, உயிர்விட்டு அக்குற்றத்தை நீக்கிக் குற்றமற்றவனாகத் திகழ்ந்த தன் கணவனோடு உடனுயிர் நீத்த கோப்பெருந்தேவியின் திறத்தைப் போற்றுவதா? இருவர் திறனும் போற்றற்குரியதே. தமிழ்ப் பெண்மணிகளின் தலைமணிகளாகிய அவ்விருவர் திறனும் வாழ்க!.
பழகா நட்பு
உறையூரும் புகாரும் சோழ நாட்டின் இரு பெருந் தலைநகர்கள் ஆகும். உறையூர் உள்நாட்டு நகர். புகார் கடற்கரைப் பட்டினம். சோழ மன்னர்கள் இவ்விரு தலை நகரங்களிலும் இருந்து சோழ நாட்டை இனிது ஆண்டு வந்தனர். உறையூரி லிருந்தாண்டவர் உறையூர்ச் சோழர் எனவும், புகாரிலிருந்தாண்டவர் புகார்ச் சோழர் எனவும் பெயர் பெறுவர்.
உறையூர் தமிழ்நாட்டுப் பழவிறல் மூதூர்களில் ஒன்று. ‘ஊரெனப்படுவது உறையூர்’ என்னும் சிறப்பினையுடையது உறையூர். இது உறந்தை எனவும் வழங்கும். ‘ஊருக்கு உறந்தை நிகர் கொற்கையோ’ என்றார் ஒட்டக்கூத்தர். கோழி என்பது உறையூரின் மற்றொரு பெயர். ஒரு காலத்தே உறையூரில் ஒரு கோழியும் யானையும் போர்புரிந்ததாம். கோழி யானையை வென்றதாம். அதனால், உறையூர் இப்பெயர் பெற்றதென்பர். உறையூர் காவிரிக்கரையில் அமைந்த வளம் பொருந்திய பேரூர். இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ள உறையூர் என்பதே, சோழர் தலை நகராகிய அப்பழைய உறையூர் ஆகும்.
கோப்பெருஞ் சோழன் என்னும் சோழ மன்னன் உறையூரி லிருந்து சோழ நாட்டை ஆண்டு வந்தான். இவன் ஒரு சீரிய செங்கோல் வேந்தன். இவன் நேர்மையின் இருப்பிடம்; சீர்மையின் பிறப்பிடம்; தன் முன்னோர் புகழையெல்லாம் தன் புகழாக்கிக் கொண்ட தகுதியாளன்.
இவன் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் இறைமைக் குணங்கள் நான்கும் எஞ்சாமல் உடையவன். சோம்பல் என்னும் கொடியோன் இவனிடம் அணுக அஞ்சுவான்; ஆண்மையே இவனது அணிகலன்: அறநெறியின் கண்ணே செல்வான்; அல்லாத நெறியில் ஒருபோதும் செல்லான். இவன் காட்சிக்கு எளியன்; நாட்டு மக்கள் எவரும் இவனை நேரில் கண்டு பேசலாம். இவன் வாய் ஒரு போதும் கடுஞ்சொல்லைக் கண்டறியாது; யாரிடமும் அது இனிமை யாகவே பேசும். தமிழ் பேசிப் பழகியதல்லவா அவ்வாய்? இவன் பிறர் சொல்லும் எத்தகைய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்வான்; பொறையே உருவானவன் இவன்.
மக்களின் காவலனாகிய இவ்வளவன், பொருள் வரும் வழிகளைக் கண்டறிந்து பெரும் பொருளீட்டி, ஈட்டிய பொருளை இனிது காத்து, அதனை நாட்டு மக்கள் நலத்திற்குச் செலவிட்டு வந்தான்; குடி மக்களின் குறை கேட்டு முறை செய்து அவர்களைக் காப்பதையே இவன்தன் கடமையாகக் கொண்டிருந்தான்; மானமே உருவானவன். வள்ளுவர் இறை மாட்சி என்னும் அதிகாரத்தில் கூறும் அரச இலக்கணத்திற்கு இவன் அப்படியே இலக்கியமாக விளங்கினான் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
கோப்பெருஞ் சோழன் சிறந்த கல்வியறிவுடையவன்; கற்க வேண்டிய வெல்லாம் கசடறக் கற்றுத் தெளிந்தவன்; தமிழ் முழுதும் அறிந்தவன்; சிறந்த செய்யுளியற்றும் திறமுடையவன். இவன் புலவனாகவும் புரவலனாகவும் விளங்கி வந்தான். இவன் இயற்றிய செய்யுட்கள் குறுந் தொகையில் நான்கும், புறநானூற்றில் மூன்றும் உள்ளன. ‘கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு இவன் எடுத்துக் காட்டாக இலங்கினான். இவனை நற்குணக் குன்றம் எனல் மிகப் பொருத்தமுடைய தாகும். இத்தகைய குணநலச் சிறப்பினால், புலவர் பெரு மக்கள் இவனிடம் பரிசு பெற விரும்புவதைவிட, இவனது நட்பைப் பெற விரும்பிப் பெற்று அளவளாவினர். இப்பெருங் கிள்ளி, தமிழ் வாழ, தமிழ்ப் புலவர் வாழ, தமிழ் மக்கள் வாழத் தான் வாழ்ந்து வந்தான்.
இவன் காலத்தே பாண்டி நாட்டில் ஆந்தையார் என்ற புலவர் ஒருவர் இருந்தார். அவர் பிசிர் என்னும் ஊரினர். ஆதலால், பிசிராந்தையார் என்று அழைக்கப்பட்டு வந்தார். பிசிராந்தையார் பெரும் புலவர்; ஒழுக்கமே உருவானவர்; முதுமையை வென்றவர்; முதுமையில் இளமை கண்ட மூதறிவாளர்; கவலை என்பதை அறியாதவர்.
‘என் மனைவியும் மக்களும் மிகவும் நல்லவர்கள்; என் மனம்போல் நடந்து கொள்கின்றனர்; அவ்வளவு பொறுப்பும் கடமை யுணர்ச்சியும் உள்ளவர்கள் அவர்கள்; எங்கள் ஊரில், ஊர் மக்களை நன்னெறிக்கண் நடத்திச் செல்லும் சான்றோர் பலர் வாழ்கிறார்கள்; எங்கள் நாட்டரசன் குடிமக்களுக்குத் தீமை ஒன்றுஞ் செய்யாது நன்மை பலவும் செய்து காத்து வருகிறான்; ஆகையால், நான் கவலை யில்லாமல் வாழ்ந்து வருகிறேன்; அதனால், எனக்கு ஆண்டு பல ஆகியும் மயிர் நரைக்க வில்லை’ 1 என்று கூறு முகத்தான், வீடும் ஊரும் நாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், கவலையில்லாமல் இருந்தால் நெடுநாள் இளமை நலத்துடன் வாழலாம்; கவலையே விரைவில் முதுமை அடைவதற்குக் காரணம் என்னும் உண்மையையும் கண்டறிந்து கூறி மக்களை வாழ்வித்த பெரியாராவர் இவர்.’
புலவர் வாயிலாய்க் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை யாரின் குண நலங்களைப் பற்றியும், பிசிராந்தையார் கோப் பெருஞ்சோழன் குண நலங்களைப் பற்றியும் கேள்வியுற்றனர். இருவர் குண நலங்களும் ஒத்திருந்தமையால், இருவரும் ஒருவரை யொருவர் நேரில் காணாமலே, கண்டு பழகாமலே நட்புக் கொண்டனர். இருவரும் ஒரு முறை கூட நேரிற் கண்டு பழகா விட்டாலும் நெடுநாட் பழகினவரை விட ஒருவரை யொருவர் விரும்பி வந்தனர். பிசிராந்தையார் தம்மைக் கோப்பெருஞ் சோழன் என்றும், கோப்பெருஞ் சோழன் தன்னைப் பிசிராந்தையார் என்றும் பெயர் மாற்றிக் கூறிக் கொள்ளும் அளவு அவர்தம் நட்பு வளரலாயிற்று. ’தன் பெயர் கிளக்குங் காலை என்பெயர் பேதைச் சோழன் என்னும்’2 என்று கோப்பெருஞ் சோழன் கூறுகின்றான்.
பிசிராந்தையார் எப்போதும் சோழனுடைய நினைவாகவே இருப்பார்; அவனை நேரில் காணவேண்டும் என்ற ஆவலினால் தூண்டப்பெற்றவராய் எப்போதும் சோழன் சோழன் என்ற பேச்சாக இருப்பார்; மனைவி மக்கள் எல்லோரையும் சோழனை நண்பனாகக் கொள்ளும்படி செய்து விட்டார். அவர்களும் அவனைத் தங்கள் நண்பருள் ஒருவனாகக் கொண்டு நடந்து வந்தனர். அத்தகைய குடும்பந்தானே அவர் குடும்பம்!
ஒரு நாள் மாலை பிசிராந்தையார் வெளியில் உலாவிக் கொண்டிருந்தார்; வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் ஓர் அன்னத்தைக் கண்டார்; அதைச் சோழன்பால் தூதுவிட எண்ணினார்; சோழன் பால் கொண்ட நட்பு அவரை அவ்வாறு எண்ணச் செய்தது. அவர் அவ்வன்னத்தைப் பார்த்து, ‘அன்னச் சேவலே! அன்னச் சேவலே! நீ குமரியாற்றங் கரையிலே அயிரை மீன்களைத் தின்று, வடதிசையில் உள்ள இமய மலைக்குப் போவாயாயின், செல்லும் வழியில் சோழநாடு உள்ளது. அதன் தலைநகர் உறையூர். அவ்வுறை யூரின் உயர்ந்த மாடத்தின்மேல் உன் பெடையோடு தங்கி, வாயிலோர்க்கு அறிவியாமல் அரண்மனைக் குட்சென்று எமது நண்பனாகிய கோப்பெருஞ் சோழனைக் கண்டு, ’நான் பிசிர் என்னும் ஊரில் உள்ள ஆந்தையின் அடிக்கீழ் வாழ்பவன்’ என்று சொல்க; அது கேட்ட அவன் பெரிதும் மகிழ்ந்து நின் பெடை அணிந்து கொள்ளத்தக்க சிறந்த அணிகலம் தருவான்.’1 என்றார். என்னே ஆந்தையாரின் நட்பின் திறம்!
இவ்வாறு நேரில் கண்டு பழகாது கொள்ளும் நட்பை வள்ளுவர் ‘உணர்ச்சி’ என்கின்றார். அதாவது, உள்ளத்து உணர்ச்சியால் ஒருவரை யொருவர் நட்புக் கொள்ளுதல் உணர்ச்சி ஒன்று படுதல் எனலாம். புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என நட்பின் காரணம் மூவகைப்படும். ஓரிடத்தில் பிறந்தவர் நண்பரா யிருத்தல் - புணர்ச்சி எனப்படும். அடிக்கடி பழகுவோர் நட்புக் கொள்ளுதல் - பழகுதல் எனப்படும். இவ்விரண்டினும் உணர்ச்சி யொத்தலே சிறந்த நட்பு என்பது வள்ளுவர் கொள்கை.
“புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.”
என்பது அக்குறள். இக்குறளுக்கு எடுத்துக் காட்டாய் விளங்குபவர் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் ஆவர். இவர்கட்காகத் தான் வள்ளுவர் இக்குறள் செய்தார் போலும்!
கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் இங்ஙனம் பழகா நட்பினராய் ஒருவரை யொருவர் உளக்கோயிலின்கண் வைத்து அளவளாவி வந்தனர். அவர்கள் நட்பு, வளர் பிறைபோல் நாளொரு வண்ணமாய் வளர்ந்து வருகையில், அந்நட்பின் முடிந்த முடிவை அறியும் காலம் ஒன்று வந்தது.
பயிர் விளையும் நல்ல நிலத்தில் ‘மிளகாய்ப் பூடு’ என்னும் நச்சுப்பூடு முளைப்பது போல, நற்குண நற்செயல் களுக்கு இருப்பிடமான கோப்பெருஞ்சோழனுக்கு, மக்கட் பண்பாட்டுக்கு முற்றிலும் மாறுபட்ட குணமுடைய மைந்தர் இருவர் பிறந்தனர். அவர்கள் வளர வளரத் தீய குணங்களும் உடன் வளர்ந்தன. தமிழினத்தின் பெருமையைக் கெடுக்கப் பிறந்த அப்பதர்கள் தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாதவர்; தந்தை தமிழ்ப் புலவர்களோடு அளவளாவுதலை வீண் பொழுது போக்கெனக் கருதினர்; அவர் தமிழ்ப் புலவர்க்குக் கொடுப்பதை வீண் செலவு என்று எண்ணினர். அதனால், அப்பாளைகள் தந்தையைக் கொன்று அரசைக் கைப்பற்றுவ தென முடிவு செய்தனர்; அதற்காகப் பெரும் படையையும் திரட்டினர்.
மைந்தர்களின் அறிவின்மையை அறிந்து சோழன் மனம் வருந்தினான்; அக்கீழ் மக்களின் இழிதகவை எண்ணியெண்ணி மனம் புண்ணானான்; தமிழினத்தின் தனிப் பெருமைக்குத் தீராத இழிவை யுண்டாக்கத் துணிந்த அத்தறுதலைகளின் இழி செயலை உன்னியுன்னி உள்ளம் உருகினான்; முடிவில், தாய்மொழிப் பற்றுச் சிறிதும் இல்லாத அக்கயவர்களிடம் தமிழ் மக்களை ஒப்படைப்பதை விட, அப்பதடிகளை ஒழித்து விடுவதேமேல் என முடிவு செய்தான்; தன் மக்களோடு பொரப் போர்க் கோலம் பூண்டான் கோப்பெருஞ் சோழன்.
இதனை எயிற்றியனார் என்னும் புலவர் அறிந்தார். அவர் சோழனை அணுகி, ’வெற்றிப் புகழ் மலிந்த கொற்ற வேந்தே! உன்னோடு போர் செய்ய வந்திருப்பவர் நின் பகைவரல்லர்; நீ அவர்கட்குப் பகைவனும் அல்லை; நீ இவ்வுலக வாழ்வை நீப்பாயானால் இவ்வரசாட்சி அவர்களுக்கே உரியதாகும். பின் இவ்வரசாட்சியை யாருக்குக் கொடுப்பாய்? மைந்தருடன் போரிட்டு வென்றான் என்னும் வசை நிற்குமேயன்றி வேறில்லை; வெற்றி தோல்வி ஒருவர் பால் இல்லை. ஒரு வேளை நீயே தோற்பாயாயின் நின் பகைவர் மகிழ்வர்; எப்படிப் பார்க்கினும் இப்போர் நிறுத்தப்பட வேண்டியதேயாகும்’1 என்று உண்மையை எடுத்தியம்பினார்.
புலவரின் பொருளுரையைக் கேட்ட சோழன் போர்க் கோலத்தைக் களைந்தான்; ஆட்சியை மைந்தரிடம் ஒப்புவித் தான்; தன் மக்கள் தன்மேற் பகை கொண்ட பின், தன்னைக் கொல்லத் துணிந்தபின் அவன் உயிர் வாழ விரும்பவில்லை. மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்ன மானமுடைய அவன் உயிர்விடத் துணிந்தான்.
அக்காலத்தே ஏதாவது பற்றி உயிர்விடத் துணிந்தவர் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது வழக்கம். இது வடக் கிருத்தல் எனப்படும். ஆற்றிடைக் குறை போன்றதொரு தூய இடத்தில் வடக்கு முகமாக இருந்து நோற்கப்படுதலின் இது இப்பெயர் பெற்றது. கோப்பெருஞ் சோழனும் அவ்வாறே காவிரியாற்றின் நடுவில் உள்ள ஒரு மணல் மேட்டில் அமர்ந்து உண்ணா நோன்பைத் தொடங்கினான். பொத்தியார் முதலிய சான்றோரும் பிறரும் அவனைப் பிரிய மனமில்லாது அவனைச் சூழ அமர்ந்தனர்.
அரசன் அவர்களை நோக்கி, ‘என் ஆருயிர் நண்பர் பிசிராந் தையார் வருவார்; அவருக்கு என் அருகில் இடம் விட்டு ஒதுங்கி யிருங்கள்’ என்றான். அது கேட்ட சான்றோர், ‘அரசே, பிசிராந்தை யார் உனது பேரைக் கேட்டதன்றி நேரில் நின்னைப் பார்த்த வரல்லர், நீயும் அவர் பெயரைக்கேட்ட தன்றி அவரை நேரில் பார்த்ததில்லை; மேலும் அவர் நெடுந் தொலைவில் உள்ளார். நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவார்?’ என்றனர்.
‘இல்லை, நீங்கள் நினைப்பது தவறு; அவரும் நானும் உயிரொன்றிய நண்பர்கள்; அவர் நான் அல்லலுறுங் காலத்து நிற்க மாட்டார்; இப்பொழுதே வந்து விடுவார்; அவருக்கு இடம் ஒழியுங்கள்’ என்றான் சோழன். அவ்வாறே இடம் விட்டிருந்தனர்.
உணவுண்ணாமையால் சோழனது உடல் தளரத் தளரப் பிசிராந்தையாரின் மனம் ஒருவகைக் கலக்கத்தை யுடைய தாயிற்று. ஒரே கவலை; வேறொன்றிலும் மனம் செல்ல வில்லை; பசியும் இல்லை. புலவரின் ஒத்த மனவுணர்ச்சி அங்ஙனம் செய்தது.
என் நண்பன் கோப்பெருஞ் சோழனுக்கு என்னவோ இடுக்கண் நேரிட்டுள்ளது; அவன் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறான்; அதனால் உண்டானதே இம்மனக் கலக்கம்; நான் போய்ப் பார்த்துவர வேண்டும்’ என்று மனைவி மக்களிடம் விடை பெற்றுக் கொண்டு சோழ நாட்டை நோக்கி நடந்தார் புலவர். அவர் சில நாளில் உறையூரை அடைந்தார். ‘இன்னே வருகுவன்; ஒழிக்க அவர்க்கு இடம்’ என்று சோழன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அங்குச் சென்றார். ஆந்தையும் சோழனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். அப்போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எதை உவமை சொல்வது?
ஆந்தையாரைத் தழுவிய அரசன், கண்ணீர் சோர, குழைந்த அன்போடு அவரை நோக்கி, ‘புலவர் பெருமானே, தங்களை நேரில் காணும் பேறு பெற்றிலேன் எனினும், புலவர் வாயிலாகத் தங்களுடைய குணநலங்களைக் கேள்வியுற்றுத் தங்களை நேரில் கண்டு அளவளாவ ஆவல் கொண்டிருந்தேன்; நான் அரியணையில் அமர்ந்திருந்தபோது நீர் வந்திலீர்; வடக்கிருக்கும் இக்காலத்தே வந்தீர்; இஃதொன்றே தங்களின் நட்பின் சிறப்பை விளங்கச் செய்கிறது’ என்று தன் உள்ளத் துணர்ச்சியை வெளிப்படுத் தினான். சோழனது நட்புரிமைச் சொல்லைக் கேட்ட ஆந்தையார் இன்பக் கடலில் திளைத்தார்; அவனது அரும் பெருங் குணத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடித்தார்.
எதிர்பாரா அந்நிகழ்ச்சியைக் கண்ட பொத்தியார் வியப்புற்றார். எங்கள் அரசன் அரசைத் துறந்து வடக்கிருக்கத் துணிந்ததை நினைக்க நினைக்க வியப்பைத் தருகிறது; ஆனால், வேற்று நாட்டினராகிய புலவர் பெருமான், நட்பையே துணை யாகக் கொண்டு இத்தகைய துன்பக் காலத்தில் இங்கு வந்தது அதைவிட வியப்பைத் தருவதாகும்; ‘ஆந்தையார் இப்பொழுதே இங்கு வருவார்’ என்று துணிந்து சொல்லிய மன்னனது ஒப்பற்ற மனவுணர்ச்சியும், இவனது சொல் பழுது படாமல் வந்த சான்றோனது அத்தகு மனவுணர்ச்சியும் நினைக்க நினைக்க உண்டாகும் வியப்பு எல்லையின்றிச் செல்கிறது. தன்னாட்டில் வாழும் சான்றோர் உள்ளத்தையே யன்றி, வேற்று நாட்டில் வாழும் இவர் உள்ளத்தையும் தன்பால் ஈர்த்த இப்பேரரசனை இழந்த நாடு இனி என்ன துன்பத்தை அடையுமோ! அதுதான் இரங்கத்தக்கதாகும்’1 என மனமுருகிப் பாடினார். மற்றப் புலவர் களும் அவ்விருவர்தம் நட்புரிமைச் சிறப்பினை வியந்து பாராட்டினர்.
உணர்ச்சி யொன்றுபட்ட கோப்பொருஞ் சோழனும் பிசிராந்தையாரும் வடக்கிருந்து ஒருங்கு உயிர் விட்டு, நட்பின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வாராயினர். ’கோப் பொருஞ் சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் போல உணர்ச்சி யொப்பின், அது உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும்’2 என்பது பரிமேலழகரின் பயனுரை. இத்தகைய மனமொத்த நட்புரிமை மக்களிடை மலர்வதாக.
நயத்தக்க நாகரிகம்
வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறைவதேயாகும். பூணுவதும் பூசுவதும் ஆகிய பிற வெல்லாம் இவற்றிற்குப் பின்னர் வேண்டப்படுவனவேயாம். ‘அணியெல்லாம் ஆடையின் பின்’ என்பது இதனை வலியுறுத்தும். குடிக்கக் கஞ்சியும் உடுக்கக் கந்தையும் முடக்கக் குடிசையும் இருந்தால் போதுமென்பது தானே பெரும்பான்மையோர் வாழ்வியல்? உண்ண உணவும் உடுக்க உடையும் உறைய வீடும் இருந்தால் போதும் என்று, வேண்டுமானால் வேறு வாய்பாட்டால் கூறலாம். இரண்டிற்கும் பொருள் ஒன்று தானே! உணவு, உடை, உறையுள் இம்மூன்றும் திருந்த அமையப் பெற்ற வாழ்வே நாகரிக வாழ்வு எனப்படும்.
மக்கட் பிறப்பின் வாழ்க்கைத் தேவைகளான இம் மூன்றினும் தமிழ்நாடு முதன்மையுடைய தென்பது உலகறிந்த உண்மையாகும். தமிழ் நாட்டின் நயத்தக்க - விரும்பத்தக்க - நாகரிக நல்வாழ்வை விரும்பித் தானே நனிமிகு பழங்காலத்திருந்தே பல வெளிநாட்டினர் தமிழ் நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்? கிறித்து பிறப்பதற்குப் பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே யவனர் என்னும் மேனாட்டினர் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றனர்.1 எகிப்தியர், உரோமர், கிரேக்கர் முதலிய மேனாட்டினரைப் பழந்தமிழ் மக்கள் யவனர் என்றழைத்தனர்.
உணவுப் பொருளைத் தரும் உழவுத் தொழிலில் உலகப் புகழ் பெற்றது தமிழ் நாடு. பழந்தமிழ் நூல்கள் இதனைப் பறை சாற்றுகின்றன. ‘உழவுத் தொழிலுக் கேற்ற நிலவளமும் நீர்வளமும் நன்கமைந்தது தமிழ் நாடு; தப்பாது விளையும் விளை நிலங்களை யுடையது தமிழ்நாடு; வருந்தாமல் வளந்தருவது தமிழ் நாடு; மாறாத பருவ மழைiம், வற்றாத கிணறுகளும், வளமலிந்த மலைகளும், அம்மலைகளிலிருந்து வரும் வற்றாத ஆறுகளும் பொருந்தியது தமிழ் நாடு’ (நாடு) என்கின்றார் வள்ளுவர்.
இவ்வளத்துக் கேற்றவாறு பலன் கண்டு உலகை வாழ்விக்கும் தகுதியுடையவர் தமிழ்நாட்டு உழவர் பெருமக்கள். தமிழ் நாட்டு உழவர்கள் உழைப்பின் செல்வர்கள்; சோம்ப லென்பதைக் கனவிலும் அறியாதவர்கள்; உலையா முயற்சி யுடையவர்கள்; பிறர் வாழத் தாம் வாழும் பெருந்தகையாளர்கள். ’உழுதூண் அல்லது இல்லென மொழிப’1 என்னும் தொல்காப்பியர் கூற்றுப்படி, தமிழ் நாட்டின் பெரும் பான்மைத் தொழில் உழவேயாகும்.
‘உழவு’ என்னும் அதிகாரத்தில், ‘உழவே தலையாய தொழில்; உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி போல்வர்; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்’ என உழவுத் தொழிலின் இன்றியமையாச் சிறப்பினையும், ‘உழுத புழுதியை மேலும் மேலும் திருப்பித் திருப்பி உழுது செம்பாடு செய்தால் எருப் போடாமலேயே மிகுதியாக விளையும்’ என உழவு முறை யினையும், ‘உழுதல், எருவிடுதல், களை களைதல், நீர் பாய்ச்சல், காத்தல்’ என்னும் உழவுத் தொழிலின் வகையினையும் வள்ளுவர் விளக்கமாகக் கூறியுள்ளார்.
’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர். உணவை முதலாக உடையது உடம்பு; உணவென்று சொல்லப்படுவது நிலமும் நீருமே. அந்நீரையும் நிலத்தையும் ஒன்று படுத்தினோர் இவ்வுலகத்துக்கு உடம்பையும், உயிரையும் படைத்த வராவர். ஆதலால், நிலந்தாழ்ந்த இடத்து நீர் தேங்கும்படி செய்தோர், இவ்வுலகத்துத் தம் பெயரை நிலைநிறுத்தினோர் ஆவர்.2 ’உழவுத் தொழில் செய்யும் குடிமக்களைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைய குடிமக்களைப் பாதுகாப்பாயாக’3 என்னும் புறநானூற்றுப் புலவர் பெருமக்கள் கூற்றினால், பழந்தமிழ் மக்கள் உழவின் இன்றியமையாச் சிறப்பினை எவ்வாறு உணர்ந்து போற்றி, நாகரிக நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர் என்பது நன்கு விளங்கும்.
பழந்தமிழ் மக்கள் போர் வெற்றிக்கு ஏர் வென்றியே காரணம் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர் என்பது, புலவர்கள் ‘தேரேறிப் போர்க் களஞ்சென்று, போர்த் தொழிலைச் சிறப்பித்துப் போர்க் களவழி பாடித் தமிழ் மக்களை வீரத்தின் இன்றியமை யாமையை உணரும்படி செய்து வந்தது போலவே, பொருநர், பாணர் முதலிய புலவர்கள் தேரேறி ஏர்க்களஞ் சென்று, ஏர்த் தொழிலைச் சிறப்பித்து ஏர்க்களவழி பாடித் தமிழ் மக்களை உழவின் இன்றியமை யாமையை உணரும்படி செய்து வந்தனர்1’ என்பதால் விளங்கும்.
இனி, ‘என்னவோ சோறும் சாறும் உண்டோம்’ என்ற அளவில் இல்லாது, உணவைப் பலவகையாகப் பகுத்து, பக்குவ மாகச் சமைத்து இனிது உண்பதும் நாகரிக நல்வாழ்வின் பாலதாகும். அறுசுவையோடு கூடிய நால்வகை உணவு சமைக்கும் பழக்க முடையவர் பழந்தமிழ் மக்கள்.
“பத்து விதக்கறியும் பதினெட்டுப் பச்சடியும்
பொரித்த பொரிக்கறியும் பொன்போல் பருப்புகளும்.”
என்கின்றார் புகழேந்திப் புலவர்.
அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி என்னும் சோற்றைக் குறிக்கும் சொற்கள் பழந்தமிழ் நூல்களில் பயின்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலன உணவின் வகை பற்றி ஏற்பட்ட பெயர்களே யாகும். இஃதொன்றே பழந்தமிழ் மக்களின் நாகரிக வாழ்வுக்குப் போதிய சான்றாகும்.
சோறிடுசாலைகளில், சர்க்கரை கலந்து செய்த இனிய கட்டியாகிய தீஞ்சோற்றுக் கடிகை, பாகிலே சமைத்த தேனடை போன்ற மெல்லிய பாகடை, பருப்பும் தேங்காயும் சர்க்கரையும் கலந்து செய்த அப்பம் முதலிய பல்வகை இனிப்புப் பலகாரங் களும், பாற்சோறு, சர்க்கரைச்சோறு, புளிச்சோறு, ஊன்சோறு, வெண் சோறு முதலிய பல்வகைச் சோறுகளும், பலவகைக் காய்கள், கிழங்குகள், இலைக்கறிகள் முதலியவற்றால் செய்த பொரியல், குழம்பு, சாறு முதலிய உணவு வகைகளும் விற்கப் பட்டன என்கின்றது மதுரைக் காஞ்சி. 2 மோர்க் குழம்பு’ மாவடு ஊறுகாய்,1 முதலியனவும் செய்து உண்டு வந்தனர். பொரியல், குழம்பு, சாறு முதலியன தாளிக்கும் தாளிப்புப் புகை முகில் போல மேலெழுந்து பரந்து செல்லும் வீடுகளை யுடையதாயிருந்தது பழந்தமிழ் மதுரை.
நல்லியக் கோடன் என்னும் வள்ளல், மடை நூலில் (பாக நூல்) கூறப்படுகின்ற பாக முறையில் சிறிதும் தப்பாது சமைத்த பல்வேறு வகைப்பட்ட உணவினைப் பாணர்களுக்கு இட்டு மகிழ்ந்தனன் என்கின்றது சிறுபாணாற்றுப்படை.
நளபாகம், வீமபாகம் என்னும் சமையல் நூல்களைப் போல, அப்பழங்காலத்தே மடை நூல் செய்து, அந்நூலைக் கற்றறிந்து, அதன்படி பல்வேறு வகைப்பட்ட உணவு சமைத்து, இனிது உண்டு வாழ்ந்து வந்த பழந்தமிழ் மக்களின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பே சிறப்பு! இன்றுபோல் அன்றே சிற்றுண்டிச் சாலைகளும், பேருண்டிச் சாலைகளும் இருந்தன என்பதை நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கின்றதன்றோ?
உணவுக்கு அடுத்தது உடை. உடை நெய்யுந் தொழிலில் உலக முதலிடம் பெற்றது தமிழ்நாடு. பட்டாலும், எலிமயிர் ஆட்டுமயிர் முதலிய பலவகை மயிரிழையாலும், பருத்தி நூலாலும் வகை வகையான ஆடைகள் நெய்து வந்தனர் பழந்தமிழ் நெசவுத் தொழிலாளர்கள்.3 பாம்புச் சட்டை போலவும், மூங்கிலின் உள்தோல் புறத் தோல் போலவும்,4 பாலாவி போலவும்5 அவ்வளவு மெல்லிய ஆடைகள் நெய்து வந்தனர். அவ்வளவு மெல்லியதாயினும், பாவும் ஊடையு மாகிய இழைகள் இவை என்று பார்த்து அறிய முடியாதபடி அவ்வளவு அழுத்தமாக - வாழை இளங்குருத்துப்போல நெய்தனர். அங்ஙனம் மென்மையும் நுண்மையுமாக நெய்யும் ஆடைகளின் கரைகளிலும், நடுவிலும் பன்னிறப் பூக்களுடன் பொலியும் பூங்காவோ என்னும்படி பலவகையான அழகிய பூவேலைப் பாடுகள் பொருந்தும்படி நெய்தனர்.6 இன்றுபோலவே அன்றும் நூலுக்குக் கஞ்சி தோய்த்து நெய்து வந்தனர்.7 வெளுக்கும் போதும் துணிக்குக் கஞ்சி போட்டு வெளுத்து வந்தனர்.1 நெய்யுமுன் நூலுக்கும், நெய்த பின் துணிக்கும் பல நிறச் சாயங்கள் தோய்த்து வந்தனர்.
சிலப்பதிகார உரையில் (14 - 108) அடியார்க்கு நல்லார் கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நூண்டுகில் முதலிய ஆடையின் பெயர்கள் (36) கூறுகிறார். இப்பெயர்களே தமிழ் மக்களது நெசவுத் தொழிலின் பழமைக்கும், பெருமைக்கும் சான்று பகரும்.
மகளிர் - மார்க்கச்சணிந்து, உள்ளுடை தரித்து, பாவாடை கட்டி, கொய்சகமும் முன்மடியும் வைத்துச் சேலையுடுத்து வந்தனர். ஆடவர் - மெய்யுறையும் காற்சட்டையும் மேற் சட்டையும் அணிந்து தலைப்பாகை தரித்து, தோளாடை போட்டு வந்தனர். வேட்டியும் துண்டும் பொதுவான உடை. மகளிர் இரவில் படுக்கும்போது, அதற்கென உரிய மெல்லு டையணிந்து கொள்வது வழக்கம். 2
இனி, உறையுளாகிய கட்டிடக் கலையில் இக்காலத்துத் தனித் திறமை வாய்ந்த பொறிவலாளர்களும் எண்ணி யெண்ணி வியப்பும் பொறாமையும் கொள்ளும் வண்ணம் அத்தகு திறமை யுடையராய் இருந்தனர் பழந்தமிழ் மக்கள். தமிழ் நாட்டின் தலை நகரங்களான மதுரை, புகார், உறையூர், வஞ்சி என்னும் தொன்ன கரங்களின் அமைப்பைப் பார்த்தால் அன்னாரின் வியத்தகு நாகரிகத்தின் பெருமை வெள்ளென விளங்கும். நனி நாகரிக காலம் என்னும் இக்காலத்தில் இல்லாத அமைப்புக்கள் சில அந்நகரங்களில் இருந்தன.
இன்று எழுபதடித்தெரு பெருந்தெரு என்று பெருமை யாகக் கூறிக் கொள்கிறோம். ஆனால், அன்று எழுபதடி என்ன? எழுநூறடி என்னும்படி தெருக்கள் அவ்வளவு அகலமாக இருந்தன. தெரு ஆறுபோல அகன்றிருந்தது. தெருவின் இருபக்கமும் உள்ள வீட்டு வரிசைகள், அழகிய சோலைகளுடன் திகழும் ஆற்றின் இரு கரைகள் போல இருந்தன. அத்தெருக்கள் அகலத்தோடு, சென்னைத் தங்க சாலைத் தெருவைவிட நீளமாகவும் இருந்தன. ‘ஆறுகிடந் தன்ன அகல் நெடுந்தெரு’ என்பது மதுரைக் காஞ்சி (359). தெருவின் இருபுறமும் கரவு நீர்ப்பாதைகள் அமைந்திருந்தன.
தெருவின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளோ, முகில் விளையாடும் மலைபோல் உயர்ந்த மாடிவீடுகள். ‘மாடமலி மறுகின் கூடல்’ என்பது முருகாற்றுப்படை (71). அம்மாடங் களில் பெரும்பான்மை எழுநிலை மாடங்கள். அம்மாடங்கள் மயமதம் என்னும் சிற்பநூற்படி கட்டப் பெற்றவை யாகும். சின்னஞ் சிறு வீடுமுதல் பெரிய மாடி வீடுகள் ஈறாக எல்லா வீடுகளிலும் நாற்புறமும் காலதர் என்னும் சாளரங்கள் உண்டு. ‘சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல்’ என்பது மதுரைக் காஞ்சி (375 - 8) மானின் கண்களைப்போல நீண்ட வடிவில் சிறுசிறு துளைகள் விட்டுக் கட்டப்பட்ட சாளரங்களும் உண்டு. இது ‘மான்கட் காலதர்’ எனப்படும். மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலிய உட்பிரிவுகளுடன் அமைந்திருந்தன அவ்வீடுகள்.
இனித் தெருக்கள் கூடும் இடங்களையெல்லாம் பழந் தமிழ் மக்கள் வறிதே போட்டிருக்க வில்லை. மூன்று தெருக்கள் கூடும் சந்திகளிலும், நான்கு தெருக்கள் கூடும் சதுக்கங்களிலும் பூங்காக்கள், குளங்கள், ஆடல் பாடல், விரிவுரை நிகழும் மன்றங்கள் முதலியன அமைத்திருந்தனர்; அக்குளங்கட்கு ஆற்றிலிருந்து நீர் வரவும், குளத்து நீர் வெளியே போகவும் வழிகள் அமைத்திருந்தனர்.
அந்நகரங்களில் நாளங்காடி, அல்லங்காடி என்னும் பகற்கடை, இரவுக்கடைகள் தனித்தனி இருந்தன. மதுரையி லிருந்த அவ்விருவகை அங்காடியின் சிறப்பையும் பெருமை யையும் சிலப்பதிகாரத்தினும், மதுரைக் காஞ்சியினும் படித் தறிந்து இன்புறாத தமிழர் பிறப்பின் பயனை அடையப் பெறாத வரேயாவர். இன்னின்ன கடைகள் என்று அறிதற்கு ஒவ்வொரு பொருள் விற்கும் கடைகளிலும் தனித்தனிக் கொடிகள் கட்டப் பட்டிருந்தன. இவை நாகரிகத்தின் அடையாளங்களாகும்.
நயத்தக்க நாகரிக நகரங்கள் எனப்படும் சென்னை போன்ற பெரிய நகரங்களிற்கூட இக்காலத்தும் ஓரிரு உணவுச் சாலைகளில் மட்டும் மாடி மேல் பந்தாடிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்காலத்திலோ பெரும்பாலான மாடி வீடுகளில், வேயாமாடம் அல்லது நிலாமுற்றம் என்னும் மொட்டை மாடிமேல் பந்தாடிடம் அமைந்திருந்தது. அங்கு மகளிர் பந்தாடி வந்தனர். இந்நாகரிகச் செய்தி, ‘பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்றோய் மாடத்து வரிப்பந்து அசைஇ’ (332 -3) எனப் பெரும்
பாணாற்றுப்படையிற் கூறப்படுகிறது. வான்தோய் உயர்நிலை மாடத்து, பொன் சிலம்பு ஒலிப்பப் பந்தாடிக்களைத் தார்களாம். அசைஇ - களைத்து. இஃதொன்றே போதும் அக்கால நனி நாகரிகச் சிறப்புக்கு!
பழந்தமிழ் மகளிர், வான்தோய் உயர்நிலை மாடி மேல் பந்தாடி மாண்புடன் வாழ்ந்தார்கள். ஆனால் அவர் வழிவந்த இக்காலத் தமிழ் மகளிரோ தரையில் பந்தாடுதல் கூட அரிதாக உள்ளது. எது நாகரிக காலம்? ஓடியாடிப் பந்தாடக் கூடிய அவ்வளவு அகல நீளமுள்ள நிலா முற்றங்கள் பொருந்திய மாடங் களையுடைய வீடுகள் எவ்வளவு பெரியவையாக இருந்திருக்க வேண்டும்!
சிற்ப ஓவியக் கலைகளில் முதலிடம் பெற்றது தமிழ்நாடு. பழந்தமிழர் வீடுகள் சிற்ப ஓவியக் கலைக்கூடங்களாகச் சிறந்து விளங்கின. காவிரிப்பூம்பட்டினத்துத் தெருவின் இரு புறமும் உள்ள மாடி வீடுகளில் இருந்த சிற்ப ஓவியங்களை, வெளியூரி லிருந்து வந்தவர்கள் கண்டு களித்தனர் என்று மணிமேகலை கூறுகிறது.
இனிப் பழந்தமிழ் வேந்தர்களின் கோட்டை ஒன்றே போதும் பழந்தமிழ் மக்களின் நயத்தக்க நாகரிகச் சிறப்பின் பெருமைக்கு. புறத்திணை ஏழனுள் உழிஞைத்திணை என்பது - கோட்டையை முற்றுதலும் காத்தலும் ஆகும்; அப்பழந் தமிழ்க் கோட்டையை முழுமுதல் அரணம் என்கின்றார் தொல்காப்பியர். முழுமுதல் அரணம் - வலிபொருந்திய கோட்டை. அது புறமதில், இடைமதில், அகமதில் என்னும் மூன்று மதில்களையுடையது. ஒவ்வொரு மதிலின் புறத்தும் ஆழ்ந்தகன்ற அகழ் அமைந்திருக்கும். அவ்வகழியில் எப்போதும் நீர் நிரம்பியிருக்கும். ‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கு’ என்பது மதுரைக் காஞ்சி (351). அக் கிடங்குகளில் கொடிய பெரிய முதலைகள் இருக்கும்.
அகழை அடுத்து ‘மிளை’ என்னும் பெரிய காவற்காடு அமைந்திருக்கும். அகழிக்கும் காவற் காட்டுக்கும் இடையே ‘மருநிலம்’ என்னும் வெட்ட வெளி நிலம் இருக்கும். இது மதிலை நோக்கி வரும் பகைவரை அறிதற்குப் பயன்படுவது. ‘மணிநீரும் மண்ணும் . . . . . .அணிநிழல் காடும் உடையது அரண்’ என்கிறார் வள்ளுவர்.
காவற் காட்டில், கூரிய அடர்ந்த முட்களையுடைய மரங்களும் பிற மரங்களும் அடர்ந்திருக்கும். விரைந்தோடும் பகைவர் காலில் தைப்பதற்காக இரும்பு நெருஞ்சி முட்கள் பரப்பப்பட்டிருக்கும்; ஓடுவோர் காலை இழுத்துக் கீழே தள்ளுவ தற்குத் தோட்டி என்னும் இரும்புக் கொக்கிகள் அக்காவற் காடு முழுவதும் முளையடித்துக் கட்டப்பட்டிருக்கும். காவற் காட்டைச் சுற்றிப் பெரும்படை காவலிருந்து வரும்; யானைக் காவலும் உண்டு.
மதிலில் நாற்புறமும் வாயில்கள் அமைந்திருக்கும். அவ்வாயில் மலையைக் குடைந்து செய்தாற் போலப் பெரிதாகவும் உயரமாகவும் இருக்கும். அவ்வாயிலின் மேல் பெரிய கோபுரம் இருக்கும். ‘குன்று இயன்றன்ன ஓங்கு நிலை வாயில்’ என்பது நெடுநல் வாடை (88). வாயில் நிலவுகால் வலிய பெரிய பல மரங்களை இணைத்துச் செய்யப்பட்டிருக்கும். வலி பொருந்திய இரட்டைக் கதவுகள் போடப்பட்டிருக்கும். இக்கதவுகளும் பல பலகைகள் இணைத்துச் செய்யப்பட்ட வையே.
கதவின் உற்புறத்தில், வெளியிலிருந்து எளிதில் கதவைத் திறக்க முடியாதபடி, நிலவுகாலை அடுத்து இருபுறமும் எழு என்னும் பெரிய வலிய மரங்கள் நடப்பட்டிருக்கும், அவ்வெழு மரத்தில் சீப்பு என்னும் தாங்கு கட்டை பொருந்தியிருக்கும். எழு மரங்கட்கும் கதவுக்கும் இடையே கணையம் என்னும் குறுக்கு மரம் சீப்பின் மேல் போடப்படும் தாழ்ப்பாள்களும் உண்டு. கணைய மரத்தை எடுத்துக் கதவைத் திறப்பர்.
கணைய மரம் போட்டுள்ளபோது. வெளியிலிருந்து பெரிய கல்லுரல்களைக் கட்டித் தொங்க விட்டும், பெரிய மரங்களைக் கட்டித் தொங்க விட்டும் யானைகளைக் கொண்டு அடித்தாலும் அக்கதவினைத் திறக்கவோ உடைக்கவோ முடியாது. உட்புறத்தி லிருந்து தள்ளிப் பிடிக்க எப்போதும் மல்லர்கள் காவலிருப்பர்.
நிலவுகாலுக்கு அருகே இருபுறமும் மதிற்சுவரில் உள்ள அறைக்குள் போர்க் கருவிகளுடன் வீரர்கள் இருந்து, கதவை உடைத்துக் கொண்டு வாயில் வழியாக உட்புகும் பகைவர் களைத் தாக்குவர். இத்தகைய பாதுகாப்பமைக்கக் கூரிய அறிவும் நெடுங்காலப் பழக்கமும் வேண்டு மல்லவா?
மதில் முகட்டில் பதணம் என்னும் மேடை மதிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும். இம்மேடைக்கு வெளியே வலி பொருந்திய சுற்றுச் சுவர் இருக்கும். அதனால், அப்பதணம் மதிலுள் மேடை எனப்படும். அம்மேடையில், பகைவர் மதில் மேலேறாமல் தடுக்கவும், தாக்கவும் பலவகைப் போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்; தாமே சென்று தாக்கும் பலவகைப் பொறிகள் அமைக்கப் பட்டிருக்கும்.
அப்பதணத்தின் கீழ், மதில் மேல் ஏறும் பகைவர் மேல் அம்பெய்யும் துளைகள் பொருந்திய ஏப்புழை ஞாயில் என்னும் அறை மதிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும். அதனுள் வீரர்கள் இருந்து காவல் புரிந்து வருவர். ஏ - அம்பு. புழை - துளை. ஏபுழை - அம்பெய்யும் துளை. ஞாயில் - அறை. ஏப்புழை ஞாயில் - ஏவறை எனவும் வழங்கும். மூன்று மதில்களிலும் இத்தகைய அமைப்புக்கள் இருக்கும்.
மதிலுள் மேடையில், வளைந்து தானே அம் பெய்யும் வளைவிற் பொறி, மதில்மேலேறுவோர் தலையைக் கொத்தும் ஆண்டலைப் புட்பொறி, பகைவர் கண்ணைக் கொத்தும் சென்றெறிசிரல், மதில் முடியைப் பிடிப்பார் கையைக் குத்தும் கைபெயரூசி, மதில்மேலேறுவோர் உடல் முழுதும் அறுக்கும் அரிநூற் பொறி, தானே சென்று மதில் மேலேறுவோரை வெட்டிக் கிடங்கிற்குள் தள்ளும் தள்ளி வெட்டி, மூங்கில் வடிவான தானே தாக்கும் பணைப்பொறி, மற்றும் குரங்குப் பொறி, பன்றிப் பொறி, களிற்றுப் பொறி, புலிப்பொறி, தகர்ப் பொறி, கழுகுப்பொறி, விழுங்கு பாம்பு முதலிய பொறிகள் அமைக்கப் பெற்றிருந்தன என்கின்றார் இளங்கோவடிகள்.
இவை, மின்சாரம் போன்ற யாதோ ஒன்றினால் இயங்கின போலும். இவை பகைவர் மதில்மேல் ஏணி சார்த்தி ஏறினதும் தாமே இயங்கித் தாக்கும் படி மதிற் சுவரில் விசையமைத்திருந்தனர் போலும்! அல்லது மதிலுள் மேடையில் விசையமைத்து, பகைவர் மதில்மேல் ஏறினதும், அம்மேடையில் உள்ளோர் அவ்விசையை இயக்கி விட்டனர் போலும்! இது ஆராய்ச்சிக்குரியது. இளங்கோ வடிகள் அரசகுமரர் ஆனதினால், வஞ்சி மாநகரின் மதிலுள் மேடையில் இருந்த அவற்றை அறிந்தபடியே கூறியிருக்கிறார்.
பதணத்திலுள்ள வீரர்கள், மதில்மேலேறும் பகைவரை, வேல், வளைதடி முதலியவற்றால் தாக்குவர்; இரும்புக் கவையைக் கழுத்தில் கொடுத்துத் தள்ளுவர்; காய்ந்த எண்ணெய், சாணநீர் முதலியவற்றை மேலே ஊற்றுவர்; பகைவர் மதிலை அணுகாதபடி கவண்கல்லால் எறிவர்.
மதிலை அடுத்து அகழ் இருப்பதால், ஏணியை நீர்மேல் மிதக்கவிட்டு மதில்மேல் சார்த்துதற்கு ஏற்றவாறு ஏணியின் அடியில் அகல நீளமுடைய பலகை இணைக்கப் பட்டிருக்கும். அதாவது அப்பலகையில் ஏணி பொருத்தப்பட்டிருக்கும். இது மடையமை ஏணி எனப்படும்.
வள்ளுவர் ’அரண் என்னும் அதிகாரத்தில், இம் மதிலின் அமைப்பினை நன்கு கூறுகின்றார். மதில், ஏணி சார்த்த முடியாத உயரமும், பகைவரால் துளை செய்ய முடியாத அடியகலமும், மதிலுள் மேடை, ஏப்புழைஞாயில் இவை அமையக் கூடிய முடியகலமும், பகைவரால் இடிக்க முடியாத திண்மையும் உடையது; உள்ளிருப்போர்க்கு நெடு நாளைக்கு வேண்டிய உணவைத் தன்னிடத்தே உடையது; வற்றாத நீர் நிலையுடையது; உள்ளிருப்போர்க்கு வேண்டிய எல்லாப் பொருளும் உடையது; புறத்தோர் அறியாமல் வெளியே போதற்கும் உள்ளே வருவதற்கும் உரிய கரந்து படை என்னும் சுருங்கையை உடையது.
புறமதிலுக்கும் இடைமதிலுக்கும் இடையில் பொது மக்கள் வாழ்வர். இது ஊர் எனப்படும். இடைமதிலுக்கும் அகமதிலுக்கும் இடையில் அதிகாரிகள், பெருங்குடி மக்கள் முதலியோர் மாட மாளிகைகள் இருக்கும். அகமதிலுக்குள் அரசன் இருப்பான். இது கோயில் எனப்படும். ஏன் இவை நயத்தக்க நாகரிகத்தின வல்லவா? தம் முன்னோர் நாகரிக வாழ்வை நூல் வாயிலாக அறிந்தின்புறும் நிலையில் உள்ளனர் தமிழ் மக்கள். இந்நிலையிலேனும் உள்ளனரே, அந்நிலை வாழ்க!